மகாராஷ்டிராவில் ஆல் இஸ் வெல்.. ஹரியானாவில்தான் இழுபறி. மீண்டும் பாஜக ஆட்சியா? காங்கிரஸ் தடுக்குமா?
சண்டிகர்: பெரும்பான்மை பலத்தை பெற முடியாவிட்டாலும், மீண்டும் ஆட்சியமைக்கும் ஆர்வத்தில் உள்ள ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், ஆளுநரை சந்திக்கிறார்.
மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 46லாவது வென்றால்தான் ஆட்சியமைக்க முடியும். ஆனால், 40 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து தனிப்பெரும் கட்சியாக உருவாகியுள்ளது.
ஆனால், ஜனநாயக் ஜனதா என்ற புதிய கட்சி 10 தொகுதிகளை வென்று, கிங் மேக்கராக உருவாகியுள்ளது. காங்கிரஸ் 20 தொகுதிகளில் வெற்றி பெற்று, 1 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. ஜனநாயக் கட்சி ஆதரவை பெற அக்கட்சிக்கு முதல்வர் பதவியை விட்டுத்தரவும் காங்கிரஸ் தயாராகிவிட்டது.

சுயேச்சைகள் ஆதரவு
ஆனால் சுமார் 7 சுயேச்சைகள் ஆதரவுடன், ஆட்சியமைத்துவிடலாம் என மனோகர் லால் கட்டார் திட்டமிட்டுள்ளார். மாலை 6 மணிக்கு அவர் ஹரியானா ஆளுநரை சந்திக்க கால அவகாசம் கேட்டுள்ளார். தனிப்பெரும் கட்சி என்பதால் பாஜகவையே முதலில் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்புவிடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடகாவில் காங்கிரஸ் வியூகம்
அதேநேரம், கர்நாடகாவில் இப்படித்தான், பெரும்பான்மை பெறாமலேயே, சுயேச்சைகளையும், பிற கட்சி எம்எல்ஏக்களையும் நம்பி கடந்த ஆண்டு பொதுத்தேர்தலையடுத்து ஆட்சியமைத்தார் பாஜகவின் எடியூரப்பா. ஆனால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் ஆட்சியை இழந்தார்.

கலைந்த கர்நாடக அரசு
இதன்பிறகு தேவகவுடாவின், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியுடன், காங்கிரஸ் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. ஆனால், கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டதாலும், பாஜகவின் ஆபரேஷன் தாமரையாலும் அங்கு ஆட்சி கலைந்து, இப்போது பாஜக ஆட்சி நடக்கிறது.

பரபரப்பு
இதேபோல ஹரியானாவில் பாஜகவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமா, அல்லது காங்கிரஸ் ஜனநாயக் ஜனதா கட்சிகள் இணைந்து ஆட்சியை அமைக்குமா என்ற உச்சகட்ட பரபரப்பு ஹரியானாவில் நிலவுகிறது.

மகாராஷ்டிரா
அதேநேரம், மகாராஷ்டிராவில், பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி பெரும்பான்மைக்கு தேவைப்படும் இடத்தை வென்றுவிட்டது. ஆனால் சிவ சேனாவின் பலம் அதிகரித்துள்ளதால், அது கேட்கும் கோரிக்கையை நிறைவேற்றித்தர வேண்டிய நிலையில் பாஜக உள்ளது. மற்றபடி அங்கு எல்லாமே சுபமாக முடிந்துவிட்டது.












Click it and Unblock the Notifications