கோவா முதல்வரை தொடர்ந்து ஹரியானா சி.எம்... பஞ்சாப் காங். அரசை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தல்
சண்டிகர்: பிரதமர் மோடியின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் குளறுபடி நிகழ்ந்த விவகாரத்தில் பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று ஹரியானா முதல்ல்வர் மனோகர் லால் கட்டார் வலியுறுத்தி உள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் மோடி நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்ற போது விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் பிரதமர் மோடியின் வாகனங்கள் செல்ல முடியாமல் மேம்பாலத்திலேயே நின்றது.
இதனால் பிரதமர் மோடியின் பஞ்சாப் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரிக்க மத்திய அரசு மற்றும் பஞ்சாப் மாநில அரசுகள் விசாரணை குழுக்களை அமைத்துள்ளன.

பஞ்சாப்பில் விசாரணை
மேலும் பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரில் மத்திய உள்துறை அமைச்சக குழு நேரில் சென்று ஆய்வு நடத்தியது. பஞ்சாப் மாநில அரசும் இது தொடர்பான அறிக்கையை மத்திய அரசிடம் கொடுத்துள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. இவ்விவகாரத்தை என்.ஐ.ஏ. விசாரிக்க வேண்டும் என்பது மத்திய அரசின் நிலைப்பாடு.

டிஸ்மிஸ் செய்ய கோரிக்கை
இதனிடையே பிரதமர் மோடியின் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடி அரசியல் ரீதியாகவும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. பஞ்சாப்பில் ஆளும் காங்கிரஸ் அரசைக் கலைக்க வேண்டும் என்று அம்மாநில முன்னாள் முதல்வர் அமரீந்தர்சிங், கோவா முதல்வர் பிரமோத் சாவத் ஆகியோர் வலியுறுத்தினர். பாஜகவினரும் நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி இதே கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர்.

பஞ்சாப் முதல்வர் கண்டனம்
இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த பஞ்சாப் முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி, மோடி பாதுகாப்பில் குளறுபடி என்பது ஒரு நாடகம். இதனை பயன்படுத்தி பஞ்சாப் மாநில அரசைக் கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த சதி நடக்க்கிறது என கண்டனம் தெரிவித்திருந்தார். பஞ்சாப்பில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த அனுமதிக்கமாட்டோம் என சிரோமணி அகாலிதளமும் தெரிவித்திருந்தது.

ஹரியானா சி.எம். வாய்ஸ்
இந்நிலையில் பிரதமர் மோடிக்காக ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் இன்று யாகங்கள் நடத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மனோகர் லால் கட்டார், பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசாங்கத்தை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். பஞ்சாப் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை உடனே அமல்படுத்த வேண்டும் என்றார். கோவா, ஹரியானா மாநிலங்களின் முதல்வர்களே பஞ்சாப் மாநில அரசை கலைக்க வேண்டும் என வலியுறுத்தி இருப்பது மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications