என்னது.. 'காக்கி டவுசர்' போட்ட கவுரவர்களா? சீண்ட வேண்டாம்.. ராகுலை எச்சரித்த ஹரியானா முதல்வர்!
சண்டிகர்: ஆர்எஸ்எஸ்காரர்களை காக்கி டவுசர் போட்ட கவுரவர்கள் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியதற்கு ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆர்எஸ்எஸ் அமைப்பை தரக்குறைவாக விமர்சிப்பதை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஒரு விஷயம் குறித்து முழுமையாக தெரியாமல் இதுபோல உளறுவதால்தான் இன்னும் ராகுல் காந்தி பப்புவாக சுற்றி திரிகிறார் என்றும் மனோகர் லால் கட்டார் விமர்சித்தார்.
ஆளுநர் ஆர்என் ரவி உரையின்போது அசாதாரண சூழலை உருவாக்கியது யார்? சபாநாயகர் அப்பாவு பரபரப்பு விளக்கம்
ராகுல் பேசியது என்ன?
சமீபகாலமாக, ஆர்எஸ்எஸ் அமைப்பை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு கூட ஆர்எஸ்எஸ் நிறுவனர்களின் ஒருவரான சாவர்க்கரை அவர் விமர்சித்தது அரசியல் களத்தில் புயலை ஏற்படுத்தியது. இந்த சூழலில், ஹரியானாவில் நடைப்பயணத்தை மேற்கொண்டிருக்கும் ராகுல் காந்தி, மீண்டும் ஆர்எஸ்எஸ் அமைப்பை வம்புக்கு இழுத்தார். இதுகுறித்து நேற்று முன்தினம் அவர் பேசுகையில், "ஹரியானாவில்தான் மகாபாரத போர் நடைபெற்றது. தற்போது அதே ஹரியானாவில் இருந்து ஒரு புதிய மகாபாரத யுத்தத்தை நாம் தொடங்கப் போகிறோம். இந்த யுத்தமும் பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் இடையேதான் நடக்கப் போகிறது.
'காக்கி டவுசர்' போட்ட கவுரவர்கள்
இதில் பாண்டவர்கள் என்பது உங்களுக்கு தெரியும். அவர்கள் மக்களோடு மக்களாக இருப்பவர்கள். அனைவரிடமும் அன்பை பரப்புபவர்கள். தீய விஷயங்களுக்கு எதிராக போராடுபவர்கள். ஆனால், கவுரவர்களோ மக்களிடம் வெறுப்பை விதைப்பவர்கள். அப்பாவி மக்களை சித்ரவதை செய்து ரசிப்பவர்கள். இந்த 21-ம் நூற்றாண்டு கவுரவர்களை நீங்கள் எளிதில் கண்டுப்பிடித்து விடலாம். அவர்கள் எப்படி இருப்பார்கள் என்று இப்போது சொல்கிறேன். அவர்கள் காக்கி நிறத்தில் அரை டவுசர் அணிந்திருப்பார்கள். கையில் கம்பு ஒன்றை வைத்திருப்பார்கள். அவர்களுக்கு 2, 3 கோடீஸ்வரர்கள் துணையாக இருப்பார்கள்" இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
ராகுலுக்கு பதிலடி
இந்நிலையில், ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு ஹரியானா முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான மனோகர் லால் கட்டார் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "ஆர்எஸ்எஸ் குறித்து தொடர்ச்சியாக ராகுல் காந்தி தரக்குறைவான முறையில் பேசி வருகிறார். அவருக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு குறித்து என்ன தெரியும்? இன்று இந்தியா இருப்பதற்கு காரணமே ஆர்எஸ்எஸ்தான்.
"சீண்டி பார்க்க வேண்டாம்"
ஆர்எஸ்எஸ் பற்றி தெரியவில்லை என்றால் ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாம்களில் ராகுல் காந்தி பங்கேற்க வேண்டும். அதன் பிறகு கருத்து தெரிவிக்க வேண்டும். ஒரு விஷயத்தை பற்றி முழுமையாக தெரியாமல் உளறக் கூடாது. அப்படி உளறுவதால்தான் அவர் இன்னும் பப்புவாகவே நாட்டில் உலவி வருகிறார். ஆர்எஸ்எஸ் குறித்து இனியும் தேவையில்லாமல் பேசி சீண்டி பார்க்க வேண்டாம்" என மனோகர் லால் கட்டார் கூறினார்.