ஹரியானாவில் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறது பாஜக- ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர் கட்டார்
சண்டிகர்: ஹரியானாவில் ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளது பாஜக. அம்மாநில ஆளுநர் சத்யதேவ் நாராயணன் ஆர்யாவை முதல்வர் மனோகர் லால் கட்டார் மாலை 6 மணிக்கு சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார்.
ஹரியானாவின் 90 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் அக்டோபர் 21-ந் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

பாஜக தனிப்பெரும் கட்சி
பாஜக 40 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ் 30 இடங்களிலும் ஜேஜேபி, சுயேட்சைகள் மொத்தம் 20 இடங்களிலும் வென்றுள்ளன. இம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க மொத்தம் 46 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை.

ஹரியானாவில் தொங்கு சட்டசபை
ஆனால் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தொங்கு சட்டசபை உருவாகி உள்ளது. இதனால் ஜேஜேபி மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன் பாஜக, காங்கிரஸ் ஆட்சி அமைக்க முயற்சித்து வருகின்றன. ஜேஜேபியின் துஷ்யந்த் சவுதாலா தமக்கு முதல்வர் பதவி தரும் கட்சிக்கு ஆதரவு என பேரம் பேசி வருகிறார்.

ஆளுநரை சந்திக்கும் கட்டார்
பாஜகவோ சுயேட்சை எம்.எல்.ஏக்களை வளைத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அம்மாநில ஆளுநர் சத்யதேவ் நாராயணன் ஆர்யாவை இன்னும் சற்று நேரத்தில் மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் சந்திக்க உள்ளார்.

சுயேட்சைகள் ஆதரவுடன் பாஜக அரசு?
அப்போது சுயேட்சை எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் மனோகர் லால் கட்டார் ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார். அதேநேரத்தில் பாஜகவுக்கு ஜேஜேபி ஆதரவு தருமா? என்கிற விவாதமும் நடைபெற்று வருகிறது.

சுயேட்சைகளை மிரட்டும் பாஜக?
ஏற்கனவே சுயேட்சை எம்.எல்.ஏக்களை பாஜக மிரட்டி ஆதரவு பெற்று வருவதாக முன்னாள் முதல்வர் பூபிந்தர்சிங் ஹூடா குற்றம்சாட்டியிருந்தார். இதனிடையே காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் அதிருப்தியாளருமான அசோக் தன்வார், ஜேஜேபியின் துஷ்யந்த் சவுதாலாதான் அடுத்த முதல்வர் என கூறி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications