விபத்தில் சிக்கிய ஹரியானா துணை முதல்வர்.. கடும் பனிமூட்டத்தால் மோதிக்கொண்ட வாகனங்கள்! போலீசார் காயம்
சண்டிகர் : ஹரியானா துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலாவின் கார் விபத்துக்குள்ளானது. கடுமையான பனிமூட்டம் காரணமாக இந்த விபத்து நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பாதுகாப்பு வாகனத்தின் மீது ஹரியாணா மாநில துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலாவின் கார் மோதிய விபத்தில் அவர் காயமின்றி தப்பினார்.
ஹரியாணா துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா சென்ற கார் ஹிசார் - சிர்சா நெடுஞ்சாலையில் அக்ரோஹா அருகே விபத்துக்குள்ளானது.
துணை முதல்வர் கார் விபத்து
ஹரியாணா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் நேற்று இரவு அடர்ந்த பனிமூட்டம் காரணமாக ஹரியாணா துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலாவின் கான்வாய் மற்றும் பாதுகாப்புக்குச் சென்ற வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. துஷ்யந்த் சவுதாலா மற்றும் முக்கிய பிரமுகர்கள் நல்வாய்ப்பாக காயமின்றித் தப்பினர். விபத்தைத் தொடர்ந்து, மாற்று காரில் திட்டமிட்டபடி சுற்றுப்பயண நிகழ்ச்சிகளை தொடர்ந்தனர்.
திடீர் விபத்து
ஹிசார் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அக்ரோஹா அருகே துணை முதல்வர் சவுதாலாவின் பாதுகாப்பு வாகனம், அதற்கு முன்னால் சென்று கொண்டிருந்த மற்றொரு பாதுகாப்பு வாகனத்தின் மீது திடீரென மோதியது. முன்னால் சென்ற பாதுகாப்பு வாகனத்தின் ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
காயமின்றித் தப்பினர்
இதனால், துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா, உள்துறை அமைச்சர் அனில் விஜின் சென்ற வாகனங்களுக்கும், மேலும் ஒரு போலீஸ் வாகனத்திற்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. அடர்ந்த பனிமூட்டம் காரணமாக இந்த விபத்து நடந்துள்ளது. இச்சம்பவத்தில் துணை முதல்வருடன் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் காயமடைந்த நிலையில், துணை முதல்வர் காயமின்றி உயிர் தப்பினார்.
நாய் குறுக்கே வந்ததால்
ஒரு மாதத்திற்கு முன்பு, பெஹோவா அருகே சண்டிகர் - ஹிசார் தேசிய நெடுஞ்சாலையில் துஷ்யந்த் சவுதாலாவின் பாதுகாப்பு படையினர் சென்று கொண்டிருந்தபோது, விபத்தைச் சந்தித்ததில் இரண்டு போலீஸ்காரர்கள் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு வாகனம் சென்றுகொண்டிருந்தபோது சாலையின் நடுவில் ஒரு நாய் வந்ததால்,டிரைவர் சடன் பிரேக் போட்டுள்ளார். இதனால், அதைத் தொடர்ந்து வந்த வாகனம், அந்த வாகனம் மீது மோதியதில், இரண்டு போலீசார் காயமடைந்தனர். பின்னர் போலீசார் இருவரும் பெஹோவாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பனிமூட்டம் காரணமாக
இதேபோல, ஓரிரு நாட்களுக்கு முன்பு ஹரியானா, கர்னால் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பனி மூட்டத்தால் பயங்கர விபத்து ஏற்பட்டது. ஒன்றன் பின் ஒன்றாக 25க்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.