பதஞ்சலியின் சர்ச்சைக்குரிய கொரோனில் கிட்டை.. ஒரு லட்சம் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கும் ஹரியானா அரசு
சண்டிகர்: பதஞ்சலி நிறுவனத்தின் சர்ச்சைக்குரிய கொரோனில் கிட்-ஐ ஒரு லட்சம் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கவுள்ளதாக ஹரியானா அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 1.96 லட்சம் பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஹரியானா மாநிலத்தில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாகக் கிராமப் புறங்களில் கொரோனா பாதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

ஹரியானா அரசு
கொரோனா பரவலைத் தடுக்கவும் கொரோனா யாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கவும் மத்திய, மாநில அரசுகள் பல முயற்சிகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில், பதஞ்சலி நிறுவனத்தின் சர்ச்சைக்குரிய கொரோனில் கிட்-ஐ ஒரு லட்சம் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கவுள்ளதாக ஹரியானா அரசு அறிவித்துள்ளது.

ஒரு லட்சம் கொரோனில் கிட்
இது குறித்து ஹரியானா அமைச்சர் அனில் விஜ் தனது ட்விட்டரில், "மாநிலத்தில் உள்ள ஒரு லட்சம் கொரோனா நோயாளிகளுக்குப் பதஞ்சலி நிறுவனத்தின் கொரோனில் கிட் இலவசமாக வழங்கப்படும். இதற்கான செலவைப் பதஞ்சலி நிறுவனமும் ஹரியானா அரசும் பகிர்ந்து கொள்ளவுள்ளது" எனப் பதிவிட்டுள்ளார். நோயாளிகளுக்கு கொரோனில் கிட் வழங்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

கொரோனில் கிட்
யோகா குரு பாபா ராம்தேவ்வின் பதஞ்சலி நிறுவனம் கடந்த ஆண்டு முதன்முதலில் கொரோனில் கிட் என்ற ஒன்றை வெளியிட்டது. அப்போதே ஆராய்ச்சியாளர்கள் இதைக் கடுமையாக விமர்சித்தனர். பின்னர் இந்தாண்டு பிப்ரவரி மாதம் மேம்படுத்தப்பட்ட கொரோனில் கிட் என்ற மற்றொன்றை வெளியிட்டது.

பாபா ராம்தேவ்
இது கொரோனாவை கட்டுப்படுத்தும் என்பதற்கோ அல்லது கொரோனா நோயாளிகளைக் குணப்படுத்தும் என்பதற்கோ எவ்வித ஆதாரங்களும் இல்லை என இந்த மருந்திற்கு எதிரான கருத்தையே இந்திய மருத்துவர்கள் சங்கம் தொடர்ந்து தெரிவித்து வருகிறது. முதலில் கொரோனில் கிட் வைரஸ் பாதிப்பைக் குணப்படுத்தும் என்று கூறிய பாபா ராம்தேவ், பின்னர் அது உடலில் நோயதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பூஸ்டர் என்றும் கூறியதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications