பாரதிராஜாவின் ஆசை இதுதான்! நிறைவேறாமல் போய்விட்டது.. வெளியே தெரியாத ரகசியம்.. மனம் வருந்திய தம்பி
சென்னை: இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைந்து பல நாட்கள் ஆகிவிட்டாலும், அவரைச் சுற்றிய செய்திகள் மட்டும் இன்னும் ஓய்ந்தபாடில்லை. குறிப்பாக அவரது இறுதி சடங்கின்போது கிளம்பிய குடும்ப சர்ச்சை, மகள் ஜனனி - மருமகள் நந்தனா இடையேயான மோதல், சொத்து குறித்த வதந்திகள், அதற்கிடையில் கங்கை அமரன் பேசிய வார்த்தைகள் என பாரதிராஜா குடும்பத்தைச் சுற்றி பலவிதமான பேச்சுகள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
இந்த சூழலில், பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜ் அளித்துள்ள பேட்டி மீண்டும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அண்ணனின் கடைசி நாட்கள் எப்படி இருந்தது, கங்கை அமரன் ஏன் அப்படி பேசினார், குடும்பத்தைப் பற்றி ஏன் தவறாக புரிந்து கொண்டார்கள் என்பதையெல்லாம் மிகுந்த வருத்தத்தோடு அவர் பகிர்ந்திருக்கிறார்.
பாரதிராஜா தம்பி பேட்டி
பாரதிராஜாவின் மறைவின்போது இசையமைப்பாளர் கங்கை அமரன், " தனியா விட்டுட்டீங்களே" என்ற வருத்தத்தில் சில வார்த்தைகள் பேசியது அப்போது பெரிதாக பேசப்பட்டது. அந்த ஒரு வரியை பிடித்துக்கொண்டு பலரும் பலவிதமாக கதைகள் கட்ட ஆரம்பித்துவிட்டார்கள். இதற்குத்தான் இப்போது ஜெயராஜ் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அவரின் கூற்றுப்படி, கங்கை அமரன் எந்தத் தவறான நோக்கத்திலும் அப்படி பேசவில்லை. நீண்ட கால நட்பு, அண்ணனை இழந்த வலி, அந்த நேரத்தின் மனஉளைச்சல் - அந்த உணர்ச்சியில் தான் அவர் அப்படி சொன்னாராம். அதற்குப் பிறகு அவரே "தெரியாமல் பேசிட்டேன், மன்னிச்சிடுங்க" என்றும் கூறியிருக்கிறார். ஆனால் அந்த ஒரு வார்த்தையை சமூக வலைதளங்களில் சிலர் பிடித்து, குடும்பத்துக்குள் பெரிய பிளவு இருப்பது போல பெரிதாக்கி பேசிவிட்டார்கள் என்பதுதான் ஜெயராஜின் ஆதங்கம்.

பாரதிராஜாவின் கடைசி காலம்
பாரதிராஜாவின் கடைசி காலத்தைப் பற்றி ஜெயராஜ் சொன்ன விஷயம் தான் இந்த பேட்டியின் மிக உருக்கமான பகுதி. "அண்ணனுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாகவே உடல்நிலை சரியில்லை. அந்த நேரமெல்லாம் எங்கள் அண்ணியும், அவருடைய மகளும் தான் அருகில் இருந்து பார்த்துக்கொண்டார்கள்" என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
வெளியிலிருந்து பார்க்கும் பலருக்கு இந்த உண்மை தெரியாது. ஆனால் சிகிச்சை, கவனிப்பு, மனஅழுத்தம், உடல் சோர்வு - இந்த மூன்றாண்டு கால போராட்டத்தை குடும்பம் அமைதியாக சுமந்துகொண்டே இருந்ததாக அவர் சொல்கிறார்.
அதிலும், பாரதிராஜா போன்ற மிகப் பெரிய படைப்பாளியை பராமரிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டாலும், மனதில் இன்னும் பல படங்கள், பல கதைகள் ஓடிக்கொண்டே இருந்திருக்கின்றன. அந்த நிலையிலும் குடும்பம் அவரை கவனித்துக் கொண்டது யாருக்கும் தெரியாமல் போனது தான் ஜெயராஜை அதிகமாக காயப்படுத்தியிருக்கிறது.
பாரதிராஜா குடும்பத்தின் வருத்தம்
பாரதிராஜாவின் இறுதி சடங்கின்போது, மகள் ஜனனி மற்றும் மருமகள் நந்தனா இடையே நடந்த வாக்குவாதம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அந்த சில நிமிட காட்சிகளை வைத்து, "சொத்து பிரச்சனை", "மருமகளை வெளியேற்றினார்கள்", "குடும்பம் உடைந்துவிட்டது" என்று பலரும் தங்களாகவே முடிவு கட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.
இதைத்தான் ஜெயராஜ் மிகவும் வேதனையுடன் சுட்டிக்காட்டியிருக்கிறார். "ஒரு துக்க வீடு என்று கூட பார்க்காமல், வீடியோ எடுத்து அதை ஹைலைட் பண்ணி, எங்கள் குடும்பத்தைப் பற்றி யார் யாரோ பேசினார்கள். சீ... இதெல்லாம் அசிங்கமா இல்லையா?" என்று கேட்டு இரக்கிறார்
பாரதிராஜாவின் உடல்நிலை சரியில்லாமல் போனது சமீபகால விஷயம் இல்லை என்பதையும் ஜெயராஜ் குறிப்பிட்டிருக்கிறார். 'திருச்சிற்றம்பலம்' படப்பிடிப்பு சமயத்திலேயே ஒருநாள் மயக்கம் ஏற்பட்டு, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறியிருக்கிறார். அதற்குப் பிறகு உடல்நிலை பழையபடி திரும்பவில்லை. சிகிச்சை தொடர்ந்து கொண்டே இருந்தது. வெளியிலிருந்து பார்த்தவர்களுக்கு அவர் இன்னும் சுறுசுறுப்பாக இருந்தது போல தோன்றியிருக்கலாம். ஆனால் வீட்டுக்குள் நடந்த போராட்டம் வேறு.
ஒரு படைப்பாளி உடலால் சோர்ந்து போனாலும், மனதால் இன்னும் தன் உலகத்திலேயே வாழ்ந்து கொண்டிருப்பார். பாரதிராஜாவும் அப்படித்தான் இருந்திருக்கிறார் என்பதை ஜெயராஜின் பேச்சு உணர்த்துகிறது. அவர் முழுமையாக ஓய்ந்து போகவில்லை; உடல் ஒத்துழைக்காத நிலையில் கூட உள்ளுக்குள் இன்னும் வேலை செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்ததாம்.
பாரதிராஜாவின் கடைசி காலம்
மேலும், ஒரு கட்டத்தில் பாரதிராஜாவுக்கு தங்களை யார் என்று கூட சரியாக அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறதாம். நினைவுகள் மங்கியிருந்த அந்த நேரம் குடும்பத்துக்கு எவ்வளவு வேதனையானதாக இருந்திருக்கும் என்பதை நினைத்தாலே கசக்குகிறது.
ஆனால் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, அவர் கொஞ்சம் கொஞ்சமாக பழைய நினைவுகளுக்கு திரும்பியிருக்கிறார். "எப்படி இருக்க? சாப்பிட்டியா?" என்று வழக்கம்போல் கேட்டாராம். அந்த சில வார்த்தைகளே ஜெயராஜுக்கு பெரிய நம்பிக்கையாக மாறியிருக்கிறது. "அண்ணன் மீண்டு வந்துடுவாரோ... பழையபடி ஆகிடுவாரோ..." என்ற நம்பிக்கை அந்தக் குடும்பத்தில் மீண்டும் எழுந்திருக்கிறது. ஆனால் அதற்குள் காலம் வேறு முடிவு எடுத்துவிட்டது.
2 வருஷமா போராட்டம்.. 3 மாசத்துக்கு முன்பு பேசினேன்! அப்போது கூட.. பாரதிராஜா பற்றி நெப்போலியன் உருக்கம்
பாரதிராஜா இறக்கும் வரை மனதில் சினிமாவை விட்டுவிடவில்லை என்பதற்கே ஜெயராஜ் சொன்ன இந்த தகவல் சாட்சி. "குற்றப் பரம்பரை படத்தை இயக்கணும்... இன்னொரு படத்தையும் பண்ணணும்" என்று சொல்லிக்கொண்டே இருந்தாராம். அதாவது உடல் பலம் குறைந்தாலும், உள்ளே இருந்த இயக்குநர் ஒருபோதும் ஓயவில்லை.
அதனால்தான் ஜெயராஜ் கூட, "அண்ணன் மீண்டு வந்துடுவார்... குற்றப் பரம்பரையாவது எடுப்பார்" என்று நம்பியிருக்கிறார். ஆனால் அந்த ஆசை ஆசையாகவே இருந்து போனது. தமிழ் சினிமா பல வருடங்களாக எதிர்பார்த்த 'குற்றப் பரம்பரை' பாரதிராஜாவின் கையில் உருவாகாமல் போனதே இப்போது ரசிகர்களுக்கும் கூட பெரிய ஏமாற்றமாக இருக்கிறது.













Click it and Unblock the Notifications