35 வயது பெண்ணை.. ஒன்றரை ஆண்டுகளாக சிறிய கழிவறையில் வைத்து பூட்டி வைத்த கணவன்
சண்டிகர்: ஹரியானா மாநிலம் சண்டிகரில் 35 வயது பெண் ஒருவர் கணவரால் கழிவறையில் அடைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்ட நிலையில் அவரை அதிகாரிகள் மீட்டெடுத்தனர்.
ஹரியானா மாநிலம் பானிபட் மாவட்டத்தில் ரிஷ்பூர் கிராமத்தை சேர்ந்தவர் நரேஷ் குமார். இவருக்கு 17 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளன.
இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகனும் , 13 மற்றும் 11 வயதுகளில் மகன்களும் உள்ளனர். நரேஷ்குமார் தனது மனைவியை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வீட்டுக்குள் போட்டு பூட்டி வைத்திருப்பதாக மாவட்ட பெண்கள் பாதுகாப்பு அதிகாரி ரஜினிகுப்தா உள்ளிட்டோருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
கழிவறை
இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீஸாருடன் ரஜினி குப்தாவும் அவரது குழுவினரும் சென்று அந்த கழிவறையின் கதவை உடைத்து மீட்டனர். அந்த கழிவறை பார்ப்பதற்கு அசுத்தமாகவும் போதிய இடமில்லாத நிலையிலும் அதிக காற்றோட்டம் இல்லாமலும் இருந்தது.
போதிய உணவு
விசாரணையில் அவர் அந்த கழிவறையில் ஒன்றரை ஆண்டுகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்தார். அந்த பெண்ணால் எழுந்து நடக்கவும் முடியவில்லை. அவருக்கு உணவு கொடுத்த போது 8 சப்பாத்திகளை அவர் சாப்பிட்டார். இதிலிருந்து அவருக்கு போதிய உணவும் தண்ணீரும் கொடுப்பதில்லை என்பது தெரியவருகிறது.
உறுப்பினர்கள்
இதுகுறித்து நரேஷ்குமாரிடம் விசாரணை நடத்தியதில் அந்த பெண்ணுக்கு மனரீதியிலான பிரச்சினைகள் இருப்பதால் கழிவறையில் அடைத்து வைத்ததாக அவர் குற்றம்சாட்டினார். ஆனால் அதிகாரிகளோ அந்த பெண் அனைத்து குடும்ப உறுப்பினர்களை அடையாளம் கண்டு கொண்டார்.
வழக்குப் பதிவு
மேலும் அவர் அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு உரிய பதிலை அளித்தார். இதனால் கணவர் சொல்வது போல் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவில்லை. மேலும் மனநலம் பாதிக்கப்பட்டதற்கான சிகிச்சை ஆவணங்களை அளிப்பதாக கணவர் கூறியிருந்தார். ஆனால் இதுவரை அவர் அதை சமர்ப்பிக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து நரேஷ் குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.