நல்ல காமெடி... சிரிப்பு, சிரிப்பா வருது... மோடி, ராகுல் குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கிண்டல்
சண்டிகர்: ‛‛நான் காலிஸ்தானுக்கு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸின் ராகுல், பிரியங்கா, பாஜகவின் பிரதமர் நரேந்திர மோடி நல்ல காமெடி செய்கிறார்கள். இதனால் சிரிப்பு, சிரிப்பாக வருகிறது'' என ஆம்ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. சரண்ஜித் சன்னி முதலமைச்சராக உள்ளார். மொத்தம் 117 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 20ல் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நிலவுகிறது.
பாஜக கூட்டணியில் காங்கிரஸ் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ், முன்னாள் மத்திய அமைச்சர் சுக்தேவ் சிங் தின்ட்சாவின் எஸ்ஏடி கட்சிகள் உள்ளன.

வாக்கு சேகரிப்பு
தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் இன்று வரை காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக தேசிய தலைவர் ஜேபிநட்டா ஆகியோர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். ஆம்ஆத்மியில் அரவிந்த் கெஜ்ரிவால் பிரசாரம் மேற்கொண்டார். இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் முடிவடைகிறது.

அரவிந்த் கெஜ்ரிவால் பதில்
இந்த பிரசாரத்தின்போது தலைவர்கள் ஒவ்வொருவரும், இன்னொருவரை தாக்கி பேசினர். அந்த வகையில் அரவிந்த் கெஜ்ரிவால் பயங்கரவாதத்தை அரங்கேற்றி பஞ்சாப்பை பிரிக்க நினைக்கிறார். காலிஸ்தானுக்கு ஆதரவாக உள்ள அவர் நாட்டை இரண்டாக பிரித்து புதிய நாட்டின் பிரதமராக முயற்சிக்கிறார் என பாஜக, காங்கிரஸ் கட்சியினர் விமர்சனம் செய்தனர். இதற்கு நேற்று அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப்பில் வீடியோ பதிவில் பதிலளித்தார். அவர் கூறியதாவது:

காமெடி... சிரிப்பு..
மருத்துவமனைகள், பள்ளிகள் கட்டும் இனிமையான பயங்கரவாதி தான் நான். பிரித்தாள துடிக்கும் நபர் நான் என்றால் அதை நிரூபிக்கவோ, விசாரிக்கவோ என் பிரதமர் நரேந்திர மோடி முயற்சிக்கவில்லை. காங்கிரஸ், பாஜகவினர் கடந்த 10 ஆண்டுகளாக இதை கூறி வருகின்றனர். அரவிந்த் கெஜ்ரிவால் இந்தியாவை இரண்டாக பிரிக்க திட்டமிட்டுள்ளார். புதிய பகுதியின் பிரதமராக முயற்சிக்கிறார் என கூறுவது காமெடியாக உள்ளது. இது சிரிப்பை தான் வரவழைக்கிறது.

தூங்கினார்களா...
நான் பயங்கரவாதியாக இருந்தால் இந்நாள் வரை பாதுகாப்பு அமைப்பினர் என்ன செய்தனர். மத்தியில் ஆட்சி செய்த, செய்கின்ற பாஜக, காங்கிரஸ் கட்சியினர் தூங்கி கொண்டிருந்தார்களா. நரேந்திர மோடி ஏன் என்னை கைது செய்யவில்லை. காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, பாஜகவின் நரேந்திர மோடி உள்பட எந்த கட்சியில் யார் வந்தாலும் பஞ்சாப்பில் பகவாந்த் மன்னை(ஆம்ஆத்மி பஞ்சாப் முதல்வர் வேட்பாளர்) ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால் அவர் நேர்மையானவர்'' என கூறினார்.












Click it and Unblock the Notifications