"என் மகனை கண் முன்னாடியே சுட்டு கொன்னுட்டாங்க!" கதறிய ஐஏஎஸ் அதிகாரி.. விஜிலென்ஸ் ரெய்டில் பரபரப்பு
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியின் வீட்டில் நடந்த சோதனையில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாகப் பணி புரிந்து வந்தவர் சஞ்சய் போப்லி. இவர் பஞ்சாப் மாநிலம் நவன்ஷஹரில் கழிவுநீர் குழாய் பதிக்கும் டெண்டர் வழங்க லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
உன் ’அந்த’ போட்டோஸ் எங்ககிட்ட இருக்கு! வெளிய விடவா? ஆப்பு வைக்கும் லோன் ஆப்கள்! தப்பிப்பது எப்படி?
டெண்டர் எடுக்க விரும்பும் ஒப்பந்ததாரர் தனக்கு லஞ்சம் கொடுத்தால் மட்டுமே டெண்டரை கொடுப்பேன் என்று கூறி உள்ளார்.
ரெய்டு
இது தொடர்பாக சம்மந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி கடந்த ஜூன் 20ஆம் தேதி போலீசார் அவரை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அதிகாரியின் வீட்டில் விஜிலென்ஸ் குழு நேற்றைய தினம் சஞ்சய் போப்லி வீட்டில் சோதனை நடத்தியது. அந்தச் சோதனையில் பல கிலோ தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள், பணம், மொபைல் போன்கள், மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டன.
கொலை
விஜிலென்ஸ் குழுவின் சோதனை நடைபெற்று வந்த நிலையில், அப்போது சஞ்சய் போப்லியின் மகன் சண்டிகரில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். 27 வயதான சஞ்சய் போப்லியின் மகன் கார்த்திக் போப்லி தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தரப்பில் கூறினர். இருப்பினும், அவரது தந்தை, தனது மகன் கொலை செய்யப்பட்டதாகக் குற்றஞ்சாட்டினார். இது குறித்து அவர் கூறுகையில், "எனது கண்முன்னே என் மகன் கொல்லப்பட்டான். என் மகனின் மரணத்திற்கு நானே சாட்சி" என்றார். சோதனைக்கு வந்த அதிகாரிகளால் தனது மகன் சுட்டுக் கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
போலீஸ் தரப்பு
இருப்பினும், இதை போலீஸ் தரப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது. விஜிலென்ஸ் குழு சோதனை நடத்திக் கொண்டு இருக்கும் போது, அவரது மகன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. தந்தையின் துப்பாக்கியைக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்தனர்.
பரபரப்பு
இது குறித்துத் தெளிவான தகவல் இல்லாத நிலையில், அக்கம் பக்கத்தினரும் கூட விஜிலென்ஸ் குழு உள்ளே இருந்த போது தான் சத்தம் கேட்டது என்றும் இருப்பினும் உள்ளே என்ன நடந்தது என தங்களுக்குத் தெரியாது என்றும் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் பஞ்சாப் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வலியுறுத்தல்
இது குறித்து கைது செய்யப்பட்ட அதிகாரியின் மனைவி கூறுகையில், "விஜிலென்ஸ் அதிகாரிகள் வழக்கில் அவர்களுக்குச் சாதகமாக இருக்கும்படி வாக்குமூலம் கொடுக்கும்படி எங்களை வற்புறுத்தினர். இதற்காக அவர்கள் எனது வீட்டுப் பணிப்பெண்ணையும் சித்திரவதை செய்தனர். என் 27 வயது மகன் போய்விட்டான். அவன் ஒரு சிறந்த வழக்கறிஞராக இருந்தான். அவனைக் கொன்றுவிட்டனர். பொய் வழக்கிற்காக எனது மகனைக் கொன்றுவிட்டனர்" என்றார்.