மோடி, அமித்ஷா, 14 பாஜக 'முதல்வர்கள்' அணிவகுக்க... ஹரியானா முதல்வராக நயாப் சிங் சைனி நாளை பதவியேற்பு!
சண்டிகர்: ஹரியானா மாநில முதல்வராக பாஜகவின் நயாப் சிங் சைனி நாளை பதவியேற்க உள்ளார். ஹரியானா முதல்வராக 2-வது முறையாக நயாப் சிங் சைனி பதவியேற்கிறார். ஹரியானாவின் பஞ்சகுலா அணிவகுப்பு மைதானத்தில் நாளை நடைபெறும் நயாப் சிங் பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் பெருந்திரளாக பங்கேற்க உள்ளனர்.
ஹரியானாவில் கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடைபெற்று வந்தது. பாஜகவின் முதல்வராக இருந்த தற்போதைய மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் மாற்றபட்டு நயாப் சிங் சைனி முதல்வரானார். ஹரியானாவின் பிரதான வாக்கு வங்கிகளில் ஒன்றான இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் நயாப் சிங் சைனி.

ஹரியானாவில் அண்மையில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜகவிடம் இருந்து காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சிக்கு எதிராக அதிருப்தி அலை வீசியது. ஆனால் இதனை சாதகமாக்கிக் கொள்ள காங்கிரஸ் தவறியதால் பாஜக அமோக வெற்றியைப் பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. பாஜக 48 இடங்களையும் காங்கிரஸ் 37 இடங்களையும் கைப்பற்றின. ஹரியானாவில் பெரும்பான்மைக்கு தேவை 46 இடங்கள். மேலும் 3 சுயேட்சை எம்.எல்.ஏக்களும் பாஜக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஹரியானா பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டசபை குழு தலைவராக நயாப் சிங் சைனி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஹரியானா மாநில முதல்வராக 2-வது முறையாக நாளை நயாப் சிங் சைனி பதவியேற்கிறார்.
பஞ்சகுலா தசரா மைதானத்தில் நாளை நயாப் சிங் சைனி பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், 14 மாநிலங்களின் முதல்வர்கள், பாஜக தலைவர் ஜேபி நட்டா உட்பட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மத்திய அமைச்சர் அமித்ஷா, மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் ஆகியோர் சண்டிகரில் முகாமிட்டு விழா ஏற்பாடுகளை கண்காணித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications