தேசத்தின் முதுபெரும் அரசியல் தலைவர் பிரகாஷ் சிங் பாதல் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி
சண்டிகர்: இந்தியாவின் முதுபெரும் அரசியல் தலைவர்களில் ஒருவரான பஞ்சாப் முன்னாள் முதல்வரும் சிரோமணி அகாலி தளத்தின் மூத்த தலைவருமான மறைந்த பிரகாஷ் சிங் பாதல் உடலுக்கு பிரதமர் மோடி இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
பஞ்சாப் மாநிலத்தின் அரசியல் முகங்களில் முதன்மையானவர் பிரகாஷ் சிங் பாதல்.. 1970-ம் ஆண்டு தமது 43 வயதில் பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றவர். நாட்டின் முதல்வர் பதவியை கைப்பற்றி முதல் இளந்தலைவர் என்ற சரித்திரத்தைப் படைத்தவர் பாதல். 2017-ம் ஆண்டு 5-வது முறையாக முதல்வர் பதவியை நிறைவு செய்தார் 90 வயதில்.. இந்தியாவில் முதல்வர் பதவி வகித்த மூத்தவர் என்ற மற்றொரு சரித்திரத்தையும் எழுதினார் பெருந்தகையாளர் பாதல்.

பஞ்சாப் மாநில அரசியலையே மையமாக கொண்டு செயல்பட்டார். சீக்கியர்களுக்கான உரிமைகள் தொடர்பாக பேசிய அதே பிரகாஷ் சிங் பாதல், தேசிய இன சித்தாந்தத்துக்கு எதிரான இந்துத்துவா கொள்கை பேசும் பாஜகவுடன் ஆழமான கூட்டணி உறவை கொண்டிருந்தது வரலாற்றின் முரண். 1957-ல் காங்கிரஸில் அரசியல் வாழ்க்கையை தொடங்கினாலும் பின்னர் காங்கிரஸின் பரம வைரியாக உருவெடுத்ததால் இயல்பாகவே பாஜகவின் கரம்பிடிக்க வேண்டிய கட்டாயம் பாதலுக்கு ஏற்பட்டது.
பஞ்சாப் மாநிலத்தின் நெல்சன் மண்டேலா என்றெல்லாம் கூட பாதல் அழைக்கப்பட்டார். அவர் 17 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார் என கூறப்படுவது உண்டு. ஆனால் 5 ஆண்டுகள்தான் சிறைவாசம் அனுபவித்தார் என்கிற விமர்சனமும் உண்டு. பாதல் கடைபிடித்த குடும்ப அரசியல் அல்லது வாரிசு அரசியல் பெரும் சர்ச்சையாகவும் விமர்சனத்துக்குரியதாகவும் மாறியது.

இப்படியான அரசியல் முகங்கள் கொண்ட பிரகாஷ் சிங் பாதல் வயது மூப்பு, உடல்நிலை பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி இன்று சண்டிகர் சென்று பிரகாஷ் சிங் பாதல் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.












Click it and Unblock the Notifications