"சட்டப்படி சரி தான்.. முஸ்லீம் பெண்கள் 15 வயதிலேயே திருமணம் செய்யலாம்.." பஞ்சாப் ஐகோர்ட் பரபர தீர்ப்பு
சண்டிகர்: முஸ்லீம் பெண்கள் திருமணம் தொடர்பாகப் பஞ்சாப் மற்றும் ஹரியானா ஐகோர்ட் முக்கிய தீர்ப்பு ஒன்றை அளித்து உள்ளது.
நமது நாட்டில் குற்றவியல் கேஸ்களில் அனைத்து தரப்பினருக்கும் ஒரே மாதிரியான சட்டம் தான். அதேநேரம் சிவில் சட்டங்கள் ஒவ்வொரு மதத்தைப் பொருத்தும் மாறுபடும்.
இருப்பினும், சிவில் சட்டமும் நாடு மழுக்க ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஒரு தரப்பினர் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

குழந்தை திருமணம்
இதனிடையே பஞ்சாபைச் சேர்ந்த 26 வயதான முஸ்லீம் இளைஞர் ஜாவேத் என்பவர் ஐகோர்டில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்து இருந்தார். அதாவது அவரும் 16 வயதான முஸ்லீம் பெண்ணும் காதலித்து வருகின்றனர். இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்புகின்றனர். இருப்பினும், அந்த சிறுமி மைனர் என்பதால் குழந்தைகள் மையம் அவரை விடுவிக்கவில்லை.

தவறு இல்லை
இதையடுத்து அந்த பெண்ணை விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜாவேத் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இருப்பினும், இஸ்லாமியச் சட்டத்தின் படி அந்த சிறுமி தனக்குப் பிடித்தவருடன் இருப்பதில் தவறு இல்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், அந்த சிறுமி அந்த இளைஞருடன் இணைந்து வாழ்வதில் தவறு இல்லை என்றும் பஞ்சாப் உயர் நீதிமன்றம் கூறி உள்ளது.

கட்டாயம் இல்லை
இஸ்லாமியச் சட்டத்தின் கீழ் இருவரும் திருமணம் செய்து கொள்வதில் எந்தவொரு தவறும் இல்லை. ஆண், பெண் என இருவரும் முஸ்லிம்களாக இருப்பதால், திருமணம் செய்து கொள்ள 18 வயது நிறைவடைந்து இருக்க வேண்டும் எனக் கட்டாயம் இல்லை என்றனர். இதன் காரணமாக அந்த பெண் விரும்பிய நபரைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

இஸ்லாமியச் சட்டம்
மேலும், அந்த பெண்ணை குழந்தைகள் காப்பகத்தில் இருந்து விடுவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இது தொடர்பாக நீதிமன்றம் கூறுகையில், "அந்த பெண் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர் என்பதால் முஸ்லீம் சட்டப்படியே இந்த வழக்கை அணுக வேண்டும். இஸ்லாமியச் சட்டத்தின்படி 15 வயதில் ஒரு முஸ்லீம் பெண் பருவமடைந்து விட்டால், அவர் சொந்த விரும்பத்தின் பெயரில் தனது துணையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

குழந்தை திருமணம் இல்லை
இஸ்லாமியச் சட்டம் இப்படித் தெளிவாக உள்ளதால், இதைக் குழந்தை திருமணமாகக் கருத முடியாது. எனவே, குழந்தை திருமணத் தடைச் சட்டம் 2006 இதற்குப் பொருந்தாது" என்று தெரிவித்தனர். அதேநேரம் ஆண் மற்றும் பெண் என இருருவமே முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் மட்டுமே இது பொருந்தும் என்றும் அவர்கள் தெளிவுபடுத்தி உள்ளனர்.












Click it and Unblock the Notifications