சென்னையில் கடும் அவதி.. அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் மக்கள் அலறல்.. காரணம் இதுதான்
சென்னை: சென்னையில் தற்போது வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் சென்னையில் பல இடங்களில் மின்வெட்டு பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் ஏற்படும் மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில் தான் சென்னையில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டுக்கான காரணம் குறித்து திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் தற்போது கோடை வெயில் கொளுத்து வருகிறது. நேற்று இரண்டாவது நாளாக சென்னையின் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை தாண்டி உள்ளது. இன்னும் 2 நாட்கள் இதே வெப்பநிலை சென்னையில் நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதிகப்படியான வெயிலால் பொதுமக்கள் பகல் நேரத்தில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல் இரவு நேரங்களிலும் வீட்டில் வெப்பம் இருக்கிறது. இதனால் பொதுமக்களால் நிம்மதியாக தூங்க முடியவில்லை.
குறிப்பாக ஃபேன், ஏசி இன்றி வீடுகளில் தூங்குவது இல்லை. இந்நிலையில் தான் கடந்த சில நாட்களில் சென்னையின் பல இடங்களில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது.
காலை முதல் இரவு வரை அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக இரவில் அதிகப்படியான மின்வெட்டு ஏற்படுவதாக கூறப்படுகிறது. வில்லிவாக்கம், கொடுங்கையூர், நந்தம்பாக்கம், வேளச்சேரி, மாடம்பாக்கம், திருவான்மியூர், திருவற்றியூர் போன்ற பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று காலை என்று மொத்தம் 4 மணிநேரம் வரை மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. அதேபோல் முட்டுக்காடு, பட்டாபிராம், பொன்னேரி உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் கிட்டத்தட்ட இரவு முழுவதும் மின்சாரம் இல்லை.
இந்த மின்வெட்டால் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகினறனர். இதனால் பொதுமக்கள் எக்ஸ் வலைதளம் மூலமாக மின்வாரியத்துக்கு தொடர்ந்து புகார்கள் அளித்து வருகின்றனர். புகார்கள் மீது சில இடங்களில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் கூட தொடர்ந்து மின்வெட்டு இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
தற்போது பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்கும் வகையில் பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று ஒரு சில நிறுவனங்கள் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி வழங்கி உள்ளன. இப்படியான சூழலில் மின்வெட்டு என்பது அந்த ஊழியர்களையும் பாதித்துள்ளது. இதனால் மின்வாரியம் தடையில்லா மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மின்வெட்டு பற்றி அதிகாரிகளிடம் கேட்டபோது,''ஏசி, ஃபேன்களின் அதிகப்படியான பயன்பாட்டால் தற்போது நகரின் மின் தேவை முதன்முறையாக 4,800 மெகாவாட் அளவை கடந்து உள்ளது. இதற்கு முன்பு 2024ம் ஆண்டில் மே மாதத்தில் சென்னையில் அதிகப்படியான மின்தேவை 4,769 மெகாவாட் என்ற அளவில் இருந்தது. ஆனால் தற்போது அது முறியடிக்கப்பட்டுள்ளது. தற்போது அதிகப்படியான மின்சாரம் நகருக்கு தேவையாக உள்ளது. இதுதவிர சில இடங்களில் பூமிக்கடியில் செல்லும் மின்கேபிள், துணை மின்நிலையங்களில் பழுது, மின்மாற்றியில் ஏற்பட்ட பிரச்சனை உள்ளிட்டவற்றாலும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. உடனடியாக பணியாளர்கள் அதனை சரிசெய்து வருகின்றனர்'' என்றனர்.












Click it and Unblock the Notifications