"நான் என்ன பயங்கரவாதியா?" சீறும் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங்.. காரணம் என்ன தெரியுமா
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநில காங்கிரஸ் முதல்வர் சரண்ஜித் சிங் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
உத்தரப் பிரதேசம், கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் தற்போது தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் பஞ்சாப் மாநிலத்திற்கு வரும் பிப். 20ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதில் 117 இடங்களைக் கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்க ஒரு கட்சி 59 இடங்களில் வெல்ல வேண்டும். அங்கு தற்போது ஆட்சியில் உள்ள காங்கிரஸ் எப்படியாவது ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது

ஹெலிகாப்டர்
இதற்காக அம்மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்தச் சூழலில் பிரதமர் நரேந்திர மோடியின் வருகை காரணமாகத் தனது ஹெலிகாப்டர் புறப்பட அனுமதி மறுக்கப்பட்டதாகவும் இதனால் ராகுல் காந்தியின் பேரணியில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி குற்றம் சாட்டியுள்ளார். ஹெலிகாப்டரில் தான் ஒரு மணி நேரம் வரை காத்திருந்ததாகவும் இருப்பினும், விமானம் புறப்பட அனுமதி மறுக்கப்பட்டதாகவும் சரண்ஜித் சிங் சாடியுள்ளார்.

சரண்ஜித் சிங்
இது தொடர்பாக சரண்ஜித் சிங் கூறுகையில், "நான் ஒரு மாநில முதல்வர், பயங்கரவாதி அல்ல. பிரசாரத்திற்காக ஹோஷியார்பூருக்கு செல்ல விடாமல் தடுத்துள்ளனர். பிரதமர் இன்று ஜலந்தர் பகுதிக்கு வந்ததால் பிற விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டது. இதனால் நான் எனது ஹெலிகாப்டர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்தேன். இருப்பினும், தடைசி வரை எனது விமானம் புறப்பட அனுமதி அளிக்கப்படவில்லை. இது என்ன மாதிரியான நடவடிக்கை என்று எனக்கு நிஜமாகவே புரியவில்லை.

பறக்கத் தடை
நான் காலை 11 மணிக்கு உனா பகுதியில் இருந்தேன். ஆனால் ஹோஷியார்பூருக்கு செல்ல எனது ஹெலிகாப்டருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பிரதமர் மோடியின் வருகை காரணமாக விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டது. இதனால், என்னால் ஹோஷியார்பூரில் நடைபெற்ற ராகுல் காந்தியின் பேரணியில் கலந்து கொள்ள முடியவில்லை. எனக்கு ஹோஷியார்பூரில் தரையிறங்க அனுமதி கிடைத்த போதும் உனா பகுதியில் இருந்து கிளம்பக் கடைசி வரை அனுமதி தரவில்லை" என்று கடுமையாகச் சாடினார்.

அனுமதி இல்லை
கடந்த மாதம் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாட்டிற்குப் பின்னர் பிரதமர் நரேந்திர மோடி முதல்முறையாக பஞ்சாபிற்குச் சென்று இன்று பிரசாரம் செய்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி, "கடந்த 2014இல் நான் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தேன். அப்போது நான் பதான்கோட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்திற்கு பிரசாரத்திற்குச் செல்ல வேண்டி இருந்தது. ஆனால் அவர்களது இளவரசர் (ராகுல்) அமிர்தசரஸில் இருந்ததால் எனது ஹெலிகாப்டர் பறக்க அனுமதிக்கப்படவில்லை" என்று கூறியிருந்தார்.

பஞ்சாப் தேர்தல் களம்
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இப்போது பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங், பாஜகவைச் சாடியுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் இப்போது பல முனை போட்டி நிலவுகிறது. காங்கிரஸ், ஆம் ஆத்மிக்கும் இடையே அங்கு கடும் போட்டி நிலவுகிறது. இது தவிர அகாலி தளம் தனித்துத் தேர்தலில் களமிறங்குகிறது. அதேபோல காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அமரிந்தர் சிங், இந்த முறை பாஜக உடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications