சிந்து நதியை பாகிஸ்தானுக்கு தடுப்பது இருக்கட்டும்.. ஹரியானாவிற்கு தண்ணீர் தர பஞ்சாப் சிஎம் மறுப்பு
சண்டிகர்: இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கும் இடையே நதி நீர் பகிர்வில் மோதல் இருந்தே வருகிறது. அப்படித் தான் பஞ்சாப் மற்றும் ஹரியானா இடையே சட்லஜ் மற்றும் பியாஸ் நதி நீரைப் பகிர்வதில் மோதல் இருக்கிறது. இதற்கிடையே ஒரு சொட்டு நீரைக் கூட ஹரியானாவுக்குத் தரப் போவதில்லை என்றும் மத்திய அரசு அழுத்தம் கொடுத்தாலும் பணிய மாட்டோம் என பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்துள்ளது. இது இந்தியா எடுத்துள்ள மிக முக்கியமான முடிவாகப் பார்க்கப்படுகிறது. இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த இந்த ஒப்பந்தத்தை இந்தியா அதிரடியாக நிறுத்தி வைத்துள்ளது.

பவகவந்த் மான்
இது ஒரு பக்கம் இருக்க ஹரியானா மாநிலத்திற்குத் தண்ணீர் திறந்துவிட முடியாது என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார். ஹரியானாவிற்குத் தண்ணீர் திறந்துவிடும் எந்தவொரு திட்டமும் இல்லை என்று அவர் திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார். இதனால் இரு மாநிலங்களுக்கும் இடையே தண்ணீர் விவகாரத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஒரு சொட்டு நீரை கூட தர மாட்டோம்
இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், "ஹரியானாவுக்கு முறைப்படி அனுப்ப வேண்டிய தண்ணீரை நாங்கள் ஏற்கனவே அனுப்பி விட்டோம்.. இனிமேல் ஒரு சொட்டு நீரைக் கூட பஞ்சாப் ஹரியானாவுக்குத் தராது. ஆனால், பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம் (பிபிஎம்பி) மூலம் ஹரியானாவிற்குத் தண்ணீரைத் திறந்துவிட மத்திய அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. பிபிஎம்பி மூலம் பஞ்சாப்பிற்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்கிறது" என்றார்
ஹரியானா கோரிக்கை
கோடைக் காலம் தொடங்கிவிட்ட நிலையில், நமது நாட்டில் பல்வேறு இடங்களிலும் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதுபோலத் தான் ஹரியானாவில் இப்போது தண்ணீருக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் தங்களுக்குக் கூடுதல் நீரைத் திறந்துவிட வேண்டும் என ஹரியானா அரசு கோரிக்கை விடுத்து வருகிறது. இருப்பினும், இந்தக் கோரிக்கையை பஞ்சாப் சிஎம் பகவந்த் மான் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இப்போது தண்ணீரைத் திறந்துவிட்டால் அது பஞ்சாப் விவசாயிகள் மற்றும் பஞ்சாப் மக்களின் உரிமைகளைப் பாதிக்கும் என அவர் தெரிவித்தார்.
அரசியல் இல்லை
அவர் மேலும் கூறுகையில், "இது அரசியல் இல்லை.. நீதி பற்றியது.. நமது வயல்களில் இருந்தும் மக்களிடம் இருந்தும் தண்ணீரைப் பறிக்க முயற்சிகள் நடக்கிறது.. பஞ்சாப் அதன் உயிர்நாடியை விட்டுக்கொடுக்கும்படி மிரட்டப்படுகிறது. ஆனால், அதற்கெல்லாம் நிச்சயம் பயக்க மாட்டோம்" என்று அவர் தெரிவித்தார்.
பஞ்சாப்- ஹரியானா
நமது நாட்டில் பல்வேறு மாநிலங்களுக்கும் இடையே நதி நீர் பகிர்வில் சிக்கல் இருந்து வருகிறது. தமிழ்நாட்டிற்குக் கூட கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுடன் நதி நீர் பகிர்வில் சிக்கல் இருக்கிறது. அதேபோலத் தான் பஞ்சாப் மாநிலத்திற்கும், ஹரியானாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக சட்லஜ் மற்றும் பியாஸ் நதி நீரைப் பகிர்வதில் சிக்கல் இருந்து வருகிறது.
இந்தப் பிரச்சினையைக் கையாளவே பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் பஞ்சாப்பில் இருந்து எவ்வளவு தண்ணீர் ஹரியானா மாநிலத்திற்குச் செல்ல வேண்டும் என்பதை இந்த வாரியமே முடிவு செய்யும். இந்த வாரியம் மூலமாகவும் மத்திய அரசு பஞ்சாப்பிற்கு அழுத்தம் கொடுப்பதாக அம்மாநில முதல்வர் பகவந்த் மான் சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications