ஆழ்துளை கிணற்றில் தவறிவிழுந்த 2வயது பஞ்சாப் சிறுவன்.. 109 மணி நேரத்துக்கு பின் மீட்பு.. ஆனால் சோகம்
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். 109 மணி நேரத்துக்கு மேல் போராட்டம் நடத்தியும் உயிருடன் மீட்க முடியவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் அரசு அதிகாரிகளுக்கு எதிராக கொதித்து எழுந்து போராட்டம் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த நாட்டில் மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் தவறி விழும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. அப்படி தவறி விழும் குழந்தைகள் பெரும்பாலும் உயிருடன் மீட்கப்படுவது இல்லை. அப்படித்தான் பஞ்சாப்பிலும் 2 வயது குழந்தை தவறி விழுந்துள்ளது. இந்த குழந்தையும் உயிருடன் மீட்கப்படவில்லை.
பஞ்சாப் மாநிலம் சன்குரூர் மாவட்டத்தில் உள்ள பகவன்பூரை கிராமத்தில் திங்கள் கிழமை மாலை 4 அளவில் பட்வீர் சிங் என்ற 2 வயது ஆண் குழந்தை தன் வீட்டின் அருகே இருந்த 150 அடி ஆழம் உள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான்.
மீட்கும் பணி
இதுபற்றி தகவல் அறிந்த மீட்பு படையினர் குழந்தையை மீட்க போராடினார். அதிநவீன துளையிடும் உபகரணங்கள் மற்றும் அதி நவீன அல்டரா சவுண்ட் உபகரணங்கள் மற்றறும் குழந்தைக்கு சுவாசம் அளிக்கும் கருவி உள்பட பலவற்றை கொண்டு மீட்கும் பணி நடந்தது. ஜேசிபி வைத்து ஆழ்துளை கிணறு அருகே குழி தோண்டப்பட்டது.
மக்கள் போராட்டடம்
தேசிய பேரிடர் மீட்பு படையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் 100 மணி நேரத்திற்குமேல் மீட்பு பணி நடந்த நிலையில் அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். மீட்பு பணி தாமதமாக நடப்பதாக கூறி போராட்டம் நடத்தினர். இதையடுத்து பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். எனினும் போராட்டம் ஓயவில்லை.
சிறுவன் உயிரிழப்பு
இந்நிலையில் அதன் பிறகு 9 மணி நேரம் கழித்து அதாவது 109 மணி நேரத்திற்கு பின்னர் இன்று காலை 5 மணி அளவில் குழந்தை மீட்கப்பட்டான். அவனை உடனடியாக சண்டிகர் மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறுவன் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தான். சிறுவன் உயிரிழந்து போனதுக்கு மூடப்படாத ஆழ்துளை கிணறு தான் முக்கிய காரணம் என்றும், ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தால் மீட்பதற்கு நவீன உபகரணங்கள் ஏதுவும் அரசிடம் இல்லை என்றும் அதனால் தான் மீட்பு பணிக்கு 109 மணி நேரம் ஆனது என்றும் அந்த ஊர் மக்கள் அரசை குற்றம்சாட்டினார்கள். குழந்தையின் சாவுக்கு நீதி கேட்டு தொடர்ந்து தர்ணா போராட்டம் நடந்து வருகிறது.
பஞ்சாப் முதல்வர் வேதனை
இதனிடையே 2வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தனக்கு மிகுந்த கவலை அளிப்பதாக பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்திர் சிங் வேதனை தெரிவித்துள்ளார். இறந்து போன சிறுவனின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளர். இனிவரும் காலங்களில் மூடப்படாத போர்வெல்கள் இல்லாத நிலையை ஏற்படுத்தப்படும் என்றும், இது போன்ற சம்பங்கள் இனி நிகழாத நிலை உருவாக்கப்படும் என்றும் முதல்வர் உறுதி அளித்துள்ளார்.