நிறைவேறாத அமெரிக்க கனவு.. ரூ.43 கோடியை செலவழித்தும் திருப்பி அனுப்பப்பட்ட பஞ்சாபியர்கள்!
சண்டிகர்: சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றார்கள் என்று கூறி, 127 பஞ்சாபியர்கள் உட்பட 332 இந்தியர்களை அமெரிக்கா நாடு கடத்தியுள்ளது. இதில் 127 பஞ்சாபியர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய ரூ.43 கோடி வரை செலவழித்துள்ளனர்.
நிறைவேறாத அமெரிக்கா கனவுக்காக இவ்வளவு பெரிய தொகையை செலவழித்தது பெரும் விவாதமாக மாறியிருக்கிறது.

தங்களது நாட்டில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களை திருப்பி அனுப்புவோம் என்று டிரம்ப் எச்சரித்திருந்தார். அதன்படி, பிப்.5, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் சுமர் 332 இந்தியர்களை அவர் திருப்பி அனுப்பியுள்ளார். இதில் பஞ்சாப்பை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 127. இவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய ரூ.43 கோடி வரை செலவழித்துள்ளனர். ஆனால், கைகளும், கால்களும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு தற்போது நாடு கடத்தப்பட்டிருக்கிறார்கள்.
இந்த 127 பேர் மூன்று பேட்சகளாக அமெரிக்காவுக்குள் நுழைய சென்றிருக்கிறார்கள். இதில் முதல் பேட்சில் 31 பேர் போயிருக்கிறார்கள். இவர்கள் மொத்தமாக ரூ.4.95 கோடியை முகவர்களுக்கு கொடுத்திருக்கிறார்கள். 2வது பேட்ச்சில் 65 இருந்தனர். இவர்கள் செலுத்திய தொகை, ரூ.26.97 கோடி. 3வது பேட்சில் 31 பேர் இருந்துள்ளனர். இவர்கள் ரூ.11.37 கோடியை கொடுத்திருக்கிறார்கள். இந்த தகவல்களை பஞ்சாப் போலீஸ் அதிகாரிகள் வெளியிட்டிருக்கின்றனர். ஆனால், தனித்தனியாக யார் யார் எவ்வளவு தொகையை கொடுத்தார்கள் என்கிற விவரம் இதில் இல்லை.
'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' தரவுகளின்படி ஒவ்வொருவரும் சுமார் ரூ.40-45 லட்சம் வரை பணத்தை இழந்திருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. இவர்களுக்கான முகவர்கள் பாகிஸ்தான், துபாய், இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்து, மெக்ஸிகோ, அமெரிக்கா பல இடங்களில் இருக்கிறார்கள். பணத்தை இழந்தவர்கள் அதை யாரிடம் இழந்தார்கள் என்பது குறித்து தெரியாது என கூறியிருக்கிறார்கள். அதாவது தங்கள் முகவர்களின் பெயர், அட்ரஸ் உள்ளிட்டவை தங்களுக்கு தெரியாது என்று சொல்லியிருக்கிறார்கள்.
பெரும்பாலும் ஏஜென்டுகளை சோஷியல் மீடியா மூலமாகத்தான் தொடர்பு கொண்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். ஆனால் அவர்களுக்கு பணம் ரொக்கமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. கொஞ்சம் பணம் மட்டும் ஆன்லைன் வழியாக செலுத்தப்பட்டிருக்கிறது. குருதாஸ்பூரை சேர்ந்த நாடு கடத்தப்பட்ட இளைஞர் ஒருவர் கூறுகையில், இந்தியாவில் உள்ள தனது ஏஜென்டுக்கு ரூ.40 லட்சத்தை ரொக்கமாக செலுத்தியதாகவும், ரூ.5 லட்சத்தை ஆன்லைன் வழியாக கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.
வேறு சிலர் தங்கள் ஏஜெண்டுகள் இங்கிலாந்திலும், பாகிஸ்தானிலும் இருப்பதாகவும் கூறியுள்ளனர். இப்படி நாடு கடத்தப்பட்டவர்களில் 10 பேர், தங்களின் ஏஜென்ட்டுகள் குறித்த தகவல்களை பகிர்ந்துக்கொள்ள மறுத்துள்ளனர். ஏஜென்ட் குறித்த எதுவும் தங்களுக்கு தெரியாது என்று கூறியுள்ளனர்.
31 பேர் அடங்கிய முதல் பேட்சை பொறுத்தவரை, 18 பேர் அவர்களின் ஏஜென்ட்டுகள் மீது வழக்கு தொடர விரும்புவதாக கூறியுள்ளனர். இதேபோல, 4 பேர் கேஸ் எல்லாம் ஒன்னும் வேண்டாம் என்று கூறியுள்ளனர். 6 பேர், இந்த விஷயம் குறித்து குடும்பத்தினருடன் பேசி முடிவெடுப்பதாக கூறியுள்ளனர்.
எது எப்படி இருந்தாலும் போன பணம் போனதுதான். இனியும் இதுபோன்று ஏமாறாமல் இருக்க, தற்போது நாடு கடத்தப்பட்டவர்கள் உதாரணமாக இருக்கிறார்கள். இந்த விவகாரம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் வாசகர்களே! இதில் யாருடைய பக்கம் தவறு இருக்கிறது?












Click it and Unblock the Notifications