அடி தூள்.. முதலமைச்சர் பகவந்த் மானுக்கு நாளை திருமணம்.. பூரிப்பில் பஞ்சாப்.. கெஜ்ரிவால் பங்கேற்பு
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் ஆம்ஆத்மி ஆட்சி நடக்கும் நிலையில் 48 வயது நிரம்பிய முதல் அமைச்சர் பகவந்த் மானுக்கு நாளை திருமணம் நடைபெற உள்ளது.
பஞ்சாப் மாநில சட்டசபைக்கு கடந்த பிப்ரவரியில் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்தது.
ஆம்ஆத்மி கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 92ல் ஆம்ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது.

2வது திருமணம்
முதல்வராக 48 வயது நிரம்பிய பகவந்த் மான் பொறுப்பேற்றார். எம்பியாக இருந்த இவர் சட்டசபை தேர்தலில் துரிதமாக களமிறங்கி வெற்றி பெற்றார். இந்நிலையில் முதல்வர் பகவந்த் மான் நாளை 2வது திருமணம் செய்து கொள்ள உள்ளார். இவர் டாக்டரான குர்ப்ரீத் கவுர் என்பவரை திருமணம் செய்ய உள்ளார். இவர்களின் திருமணம் சண்டிகரில் உள்ள பகவந்த் மானின் வீட்டில் வைத்து எளிமையான முறையில் நடைபெற உள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்பு
இந்த திருமணத்தில் ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்க உள்ளார். இவர் உள்பட சில தலைவர்களோடு குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே திருமணத்தில் பங்கேற்க உள்ளனர். இதில் மற்றவர்களுக்கு அனுமதி இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

முதல் மனைவியுடன் விவாகரத்து
பகவந்த் மான் தனது முதல் மனைவியை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற்று பிரிந்தார். பகவந்த் மான் மற்றும் அவரது முதல் மனைவிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். விவாகரத்துக்கு பிறகு பகவந்த் மானின் முதல் மனைவி தனது 2 குழந்தைகளுடன் இங்கிலாந்தில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அதிரடியாக செயல்படும் முதல்வர்
பகவந்த் மான் முதல்வராக பொறுப்பேற்றது முதல் மாநிலத்தில் அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு, தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். அந்த வகையில் இந்த மாதம் ஒன்றாம் தேதி முதல் மாநிலத்தில் உள்ள வீடுகளுக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசம் எனும் திட்டத்தை துவங்கினார். முன்னதாக அக்னிபாத் திட்டத்தை மத்திய பாஜக அரசு வாபஸ் பெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications