செங்கல்பட்டு இரட்டை கொலை வழக்கு.. சீறிய துப்பாக்கி குண்டுகள்.. போலீஸ் என்கவுண்டரில் 2 பேர் பலி
செங்கல்பட்டு இரட்டைக்கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகரில் நள்ளிரவில் நிகழ்ந்த இரட்டைப் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட நான்கு பேரில் இரண்டு ரவுடிகள் போலீஸ் என்கவுண்டரில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காவல்துறையினர் ரவுடிகளைப் பிடிக்க முயன்ற போது நாட்டு வெடிகுண்டுகளை வீசி தப்ப முயன்றதால் காவல்துறையினர் தற்காப்புக்காகதுப்பாக்கிச்சூடு நடத்தியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
செங்கல்பட்டு கே.தேரு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் என்ற அப்பு கார்த்திக். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் வழக்கு ஒன்றின் காரணமாக செங்கல்பட்டு நகர காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு திரும்பி வந்துள்ளார். டீ கடையில் டீ குடித்துக்கொண்டிருந்தபோது ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் கார்த்திக்கை பின் தொடர்ந்து வந்தனர்.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள செங்கல்பட்டு நகர காவல்நிலையம் அருகே கார்த்திக் மீது நாட்டு வெடிகுண்டு வீசினர். நிலைதடுமாறி விழுந்த கார்த்திக்கை சுற்றி வளைந்த அந்த கும்பல், சரமாரியாக வெட்டி தலையை உரு தெரியாமல் சிதைத்துவிட்டு தப்பியோடினர். சம்பவ இடத்திலேயே அப்பு கார்த்திக் துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இதே கும்பல், காய்கறி வியாபாரம் செய்து வரும் செங்கல்பட்டு மேட்டுத்தெரு பகுதியைச் சீனுவாசன் என்பவரது மகன் மகேஷ் என்பவர் மீதும் கொலை வெறி தாக்குதல் நடத்தியது. டிவி பார்த்து கொண்டிருந்த போது அதே கும்பல் மகேஷை வீட்டில் வைத்து சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டு தப்பியோடினர்.

இரட்டைக்கொலை
ஒரே நாளில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த படுகொலை சம்பவம் செங்கல்பட்டு நகரவாசிகளை பதற வைத்தது. இருவரது உடலையும் மீட்ட செங்கல்பட்டு நகர போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ரவுடிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. செங்கல்பட்டு நகர காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் தினா என்ற தினேஷ் மாது என்ற மாதவன் மிஸ் கட் என்ற மொகைதீன் ஆகியோர் இந்த இரட்டைக் கொலையை அரங்கேற்றியது தெரியவந்துள்ளது.

பதுங்கிய ரவுடிகள் கைது
இந்த இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடிகள் மறைமலை நகரில் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரியவரவே அந்த இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சுற்றி வளைத்தனர். அஜய் என்பவரை 2 கைகள் சிதைந்த நிலையில் தனிப்படை போலீஸ் கைது செய்தனர். மாமண்டூர் பாலாறு அருகே தினேஷ், மொய்தீன் ஆகிய இரண்டு ரவுடிகளையும் காவல்துறையினர் பிடிக்க முயன்றனர். காவல்துறையினர் மீது ரவுடிகள் நாட்டு வெடிகுண்டுகளை வீசி தப்ப முயன்றனர். இதில் இரண்டு காவல்துறையினர் படுகாயமடைந்துள்ளனர்.

ரவுடிகள் சுட்டுக்கொலை
இதனையடுத்து காவல்துறையினர் தற்காப்புக்காக ரவுடிகளை நோக்கி சுட்டனர். அதில் தினேஷ்,மொய்தீன் ஆகியோர் கொல்லப்பட்டனர். அவர்களின் உடல்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இருவரின் மீதும் ஏராளமான கொலை, கொள்ளை வழக்குகள் பதிவாகியுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் நிகழ்ந்த இரட்டைக்கொலையும் அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த என்கவுண்டரும் பொதுமக்களை பதற்றமடையச் செய்துள்ளது. என்கவுண்டர் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க 'என்கவுன்டர்' வெள்ளத்துரைக்கு கூடுதல் பொறுப்பு கொடுக்கப்பட்ட நிலையில், இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

தொடரும் கொலைகள்
இரட்டைக் கொலை தொடர்பாகவும் அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த என்கவுண்டர் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க 'என்கவுன்டர்' வெள்ளத்துரைக்கு கூடுதல் பொறுப்பு கொடுக்கப்பட்ட நிலையில், இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications