1.20 லட்சம் பேருக்கு வேலை.. ஒரே ஆண்டில் சாதித்த ஸ்டாலின்! “நான் முதல்வன்” திட்டத்தின் சக்சஸ் ஸ்டோரி
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் 1.20 லட்சம் மாணவர்களுக்கு உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் கிடைத்து இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்து இருக்கிறது.
தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கென தொழில் துறையின் தேவை சார்ந்த திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்க "நான் முதல்வன்" திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் 2022-23 ஆம் ஆண்டு 13 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

கல்லூரி பாடத்திட்டத்தில் வழங்கப்படும் வழக்கமான பாடப்பிரிவுகளுடன் சேர்த்து மாறிவரும் தொழில் நுட்ப உலகிற்கேற்ப திறன் படிப்புகளை வழங்குவதே "நான் முதல்வன்" திட்டம். துறை சார்ந்த வல்லுநர்களின் உதவியுடன் பிரத்தியேக திறன்சார் பாடங்களை வடிவமைத்து, அவர்கள் கல்லூரி பாடத் திட்டத்துடனேயே சேர்த்து அவர்கள் படிக்கும் கல்லூரிகளில் வழங்குவதே இத்திட்டத்தின் சிறப்பம்சம்.
இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 483 பொறியியல் கல்லூரிகளில் 4,98,972 மாணவர்களும். 842 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 8.11,338 மாணவர்களும் பயனடைந்துள்ளனர். இப்பயிற்சிகளின் மூலமாக மாணவர்கள் அதிகபட்சமாக ஆண்டுக்கு 40 லட்சம் ரூபாய் வரையிலான ஊதியத்தில் வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளனர். திறன் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு தொடர்ச்சியாக வேலைவாய்ப்பினை பெற்று தருவதற்கான முகாம்கள் கல்லூரி வளாகங்களிலேயே தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பொறியியல் கல்லூரிகளில் 2022-23 ஆம் ஆண்டு "நான் முதல்வன்" திட்டத்தின் மூலமாக 115,682 இறுதியாண்டு மாணவர்களுக்கு, Siemens, Dassalt, Microsoft, IBM, Cisco, Autodesk போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் மூலமாகவும், L&T, TCS, Infosys, NSE போன்ற புகழ்பெற்ற உள்நாட்டு நிறுவனங்கள் மூலமாகவும் திறன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு உள்ளது. இதன் பலனாக, தமிழ்நாடு முழுவதும் இதுவரை நடந்துள்ள வேலைவாய்ப்பு முகாம்கள் மூலமாக 59,132 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது. மேலும், இத்தகைய வேலைவாய்ப்பு முகாம்கள் இம்மாத இறுதிவரை நடைபெறவுள்ளது.
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் "நான் முதல்வன்" திட்டத்தின் மூலமாக 2,48,734 இறுதியாண்டு மாணவர்களுக்கு முன்னணி நிறுவனங்களின் பயிற்றுநர் மற்றும் பாடங்களுடன் திறன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. இதன் பலனாக, தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் மாதம் தொடங்கி இதுவரை நடைபெற்றுள்ள வேலைவாய்ப்பு முகாம்கள் மூலமாக 62,634 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப்பெற்று உள்ளது. மேலும், இந்த வேலைவாய்ப்பு முகாம்கள் ஜூன் மாதம் இறுதிவரை நடைபெற உள்ளது.
மேலும், CII, TIDCO, SIPCOT, MSME, ELCOT, DISH, Employment, StartupTN, Guidance TN, FICCI, NASSCOM போன்ற அமைப்புகளுடன் இணைந்து வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி மேலும் பல லட்சம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக, இன்றையதினம் "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ், கலை மற்றும் அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் பயின்று திறன் பயிற்சி முடித்து பல்வேறு தனியார் நிறுவனங்களில் உயர்ந்த ஊதியத்துடன் வேலைவாய்ப்பு பெற்று பயனடைந்தவர்களில் 5 நபர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேடயங்களை வழங்கி பாராட்டி வாழ்த்தினார்.












Click it and Unblock the Notifications