சென்னையில் கட்டப்படும் 10 மேம்பாலங்கள்.. நிலம் கையகப்படுத்தும் பணி விறுவிறு.. எப்போது முடியும்?
சென்னை: சென்னையில் பல்வேறு மண்டலங்களில் பாலம் கட்டுவதற்கான நிலம் கையகப்படுத்தும் பணியை துரிதப்படுத்துமாறு சென்னை ஆட்சியர் அலுவலகத்தை சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டது.இதையடுத்து தற்போது பணிகள் துரிதமாக நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை தடுக்க பல்வேறு இடங்களில் பாலம் கட்டும்பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதேநேரத்தில் சில இடங்களில் பாலம் கட்டுவதற்கு நிலத்தை கையகப்படுத்தவேண்டிய நிலை உள்ளது. அதற்கான முயற்சியில் சென்னை மாவட்ட ஆட்சியர் இறங்கி உள்ளார்.

சென்னையில் வடபெரும்பாக்கம் பாலம் திட்டத்திற்கு 13,218 சதுர அடி பரப்பளவில் 14 தனியார் நிலங்களை கையகப்படுத்த வேண்டியது அவசியம் ஆகும். இதற்கான நிர்வாக அனுமதி செப்டம்பர் 12ம் தேதி வழங்கப்பட்டது. நிலம் கையகப்படுத்துவதற்கான அதிகாரியை சென்னை ஆட்சியர் நியமித்துள்ளார்.
இதுபற்றி அதிகாரிகள் கூறும் போது, மணலி மண்டலம் 17வது பிரிவில் உள்ள வடபெரும்பாக்கத்தில் புழல் உபரி நீர் கால்வாயின் குறுக்கே பாலம் கட்டும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டு 74% திட்டப் பணிகள் முடிவடைந்துள்ளன. இத்திட்டம் ₹22.4 கோடி மதிப்பீட்டில் 2018-2019 ஆம் ஆண்டில் சென்னை பெருநகர மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் எடுக்கப்பட்டிருக்கிறது. நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்து மூன்று மாதங்களில் பாலம் பணிகள் முடிக்கப்படும். திட்டத்திற்காக 900 மிமீ விட்டம் கொண்ட வாட்டர்லைனை மாற்ற வேண்டும்" என்றார்.
இதே போல் சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் பாலம் அமைக்கும் பணியையும் விரிவுபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இங்கு நிலம் கையகப்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் திட்டத்திற்கான மதிப்பீடு ₹176 கோடியிலிருந்து ₹195.19 கோடியாக திருத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு குறைந்தபட்சம் 1.17 லட்சம் சதுர அடி நிலம் தேவைப்படுகிறது.இதில் 30,784 சதுர அடி தனியாரிடம் கையகப்படுத்த வேண்டி உள்ளது.
இதற்கும் நிலம் கையகப்படுத்தும் அதிகாரியை ஆட்சியர் நியமித்துள்ளார். வள்ளுவர் கோட்டம் அருகே நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்ததும் டெண்டர் கோரப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வளசரவாக்கம் மண்டலத்தை பொறுத்தவரை 143 மற்றும் 144 பிரிவுகளில் உள்ள பூந்தமல்லி ஹை ரோடு மற்றும் யூனியன் சாலையை இணைக்கும் சின்ன நொளம்பூரில் கூவம் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட 47,318 சதுர அடி நிலம் கையகப்படுத்த வேண்டும்.
தண்டையார்பேட்டை மண்டலத்தில் பிரிவு-41 மணலி சாலையில் தற்போதுள்ள லெவல் கிராசிங் எண். 2Bக்கு பதிலாக மேம்பாலம் கட்டும் பணி மேற்கொள்ளப்படுகிறது. அங்கு சன்னதி முதல் குறுக்குத் தெருவில் பாலம் அமைக்க 16,479 சதுர அடி நிலம் தேவைப்படுகிறது.
ஆலந்தூர் மண்டலம் ஜீவன் நகர் இரண்டாவது தெருவில் ஆதம்பாக்கம் ஏரியின் குறுக்கே பாலம் கட்ட மேடவாக்கம் மெயின் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.
சென்னை ஆஸ்பிரான் கார்டன் 2வது தெரு மற்றும் கீழ்ப்பாக்கம் கார்டன் சாலையை இணைக்கும் ஓட்டேரி நுல்லாவின் குறுக்கே உள்ள பாலம் புனரமைப்பு, தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சிஐடி நகர் முதல் பிரதான சாலை வழியாக மேம்பாலம் மற்றும் வியாசர்பாடி அருகே கணேசபுரத்தில் இருக்கும் சுரங்கப்பாதையின் மேல் மேம்பாலம், தண்டையார்பேட்டை ஜீவா ரயில் நிலையம் மற்றும் திருவிக நகர் மேம்பாலம் ஆகிய அனைத்தும் 2024 செப்டம்பரில் முடிவடையும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications