ஜூலை 1 முதல் 125 நாள் வேலை திட்டம் அமல்! 100 நாளை விட விபி ஜி ராம் ஜி-யின் பயன்கள் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 100 நாள் வேலை திட்டம் 125 நாட்களாக உயர்த்தி விபி ராம் ஜி திட்டம் என்ற பெயரில் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

இந்தியக் கிராமப்புறப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்ந்த 'மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்' (MGNREGA) விடைபெறுகிறது. அதற்கு மாற்றாக, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், மத்திய அரசு 'விக்சித் பாரத் - ரோஜ்கார் மற்றும் ஆஜீவிகா மிஷன் உத்தரவாதம்' (VB-G RAM G) என்ற புதிய மெகா திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.

centre delhi

வருகிற ஜூலை 1, 2026 முதல் நாடு முழுவதும் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரவிருக்கும் இப்புதிய திட்டத்திற்கான இறுதிக்கட்டப் பணிகள் தற்போது தலைநகர் டெல்லியிலும், அனைத்து மாநிலத் தலைநகரங்களிலும் ராக்கெட் வேகத்தில் நடந்து வருகின்றன.

கடந்த சில தசாப்தங்களாக கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பாக விளங்கியது 100 நாள் வேலைத் திட்டம். ஆனால், தற்போதைய பொருளாதாரச் சூழல், பணவீக்கம் மற்றும் கிராமப்புறத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, வேலை நாட்களின் எண்ணிக்கை 125 நாட்களாகச் சட்டப்பூர்வமாக உயர்த்தப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்களை நோக்கி மக்கள் வாழ்வாதாரத்திற்காகப் புலம் பெயர்வதைத் தடுப்பதிலும், உள்ளூரிலேயே நிலையான உள்கட்டமைப்புகளை உருவாக்குவதிலும் இந்த கூடுதல் 25 நாட்கள் மிக முக்கியப் பங்காற்றும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.

இப்புதிய திட்டத்தின் முதற்கட்டச் செயல்பாட்டிற்காக மத்திய அரசு இடைக்கால நிதியாக ரூ. 95,692 கோடி தொகையை வாரி வழங்கியுள்ளது. இவ்வளவு பெரிய நிர்வாக மாற்றத்தின்போது மக்களுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் ஊரக வளர்ச்சி அமைச்சகம் மிகக் கவனமாக உள்ளது.

பழைய கார்டுகள் செல்லும்: புதிய 'கிராமின் ரோஜ்கார் உத்தரவாத அட்டைகள்' (Gramin Rozgar Guarantee Cards) பயனாளிகளுக்குக் கிடைக்கும் வரை, ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள இ-கேஒய்சி (e-KYC) சரிபார்க்கப்பட்ட பழைய வேலை அட்டைகளே செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வேலைவாய்ப்பில் தொய்வு ஏற்படாது.

ஊழல் மற்றும் இடைத்தரகர்களின் தலையீட்டைத் தவிர்க்க, வாராந்திர அல்லது இரு வாரங்களுக்கு ஒருமுறை தொழிலாளர்களின் வங்கி அல்லது அஞ்சலகக் கணக்குகளில் 'நேரடிப் பணப்பரிமாற்றம்' (Direct Benefit Transfer) மூலம் ஊதியம் நேரடியாகச் சென்றடையும்.

திட்டத்தை நாடு முழுவதும் எவ்விதத் தொய்வுமின்றி அமல்படுத்த, மத்திய அரசு பல்வேறு அதிரடி நிர்வாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை மத்திய அரசுடன் உடனுக்குடன் இணைக்க 100-க்கும் மேற்பட்ட சிறப்பு மண்டல அதிகாரிகள் (Zonal Officers) நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நேரடியாகக் கள ஆய்வு மேற்கொண்டு திட்டத்தைக் கண்காணிப்பார்கள்.

அதிகாரிகளுக்கான பயிற்சி: புது தில்லியில் மாநில அளவிலான உயர் அதிகாரிகளுக்கு இதற்கான பிரத்யேக விளக்கக் கூட்டங்களும், தொழில்நுட்பப் பயிற்சிகளும் அண்மையில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

இப்புதிய திட்டத்தின் ஆகச்சிறந்த சிறப்பம்சமே இதில் புகுத்தப்பட்டுள்ள அதிநவீன தொழில்நுட்பங்கள் தான். முறைகேடுகளை முற்றுப்புள்ளியாக ஒழிக்க மத்திய அரசு டிஜிட்டல் ஆயுதங்களைக் கையில் எடுத்துள்ளது.

போலி வருகைப்பதிவைத் தடுக்க, நாடு முழுவதும் 'முகம் கண்டறியும் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை' கட்டாயமாக்கப்படுகிறது. தொழிலாளர்கள் வேலை செய்யும் இடத்திலிருந்தே அவர்களின் வருகை டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்படும்.

பயனாளிகள் அனைவரின் விபரங்களும் ஆதார் அடிப்படையிலான இ-கேஒய்சி மூலம் 100% துல்லியமாகச் சரிபார்க்கப்படுகின்றன.

வேலைகளின் தரம் மற்றும் உற்பத்தித் திறனைக் கண்காணிக்கப் பிரத்யேக டிஜிட்டல் செயலிகள் மற்றும் இணையதளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் எந்தக் கிராமத்தில் என்ன வேலை நடக்கிறது என்பதை டெல்லியில் இருந்தபடியே கண்காணிக்க முடியும்.

கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாடு: வெறும் ஏரி, குளம் வெட்டுவதோடு நிற்காமல், கிராமப்புறச் சாலைகள், மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் மற்றும் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வேளாண் சார்ந்த உள்கட்டமைப்புகளுக்கு இப்புதிய திட்டத்தில் அதிக முக்கியத்துவம் தரப்படவுள்ளது.

பெண் தொழிலாளர்கள் ஊக்குவிப்பு: இத்திட்டத்தின் கீழ் பெண் தொழிலாளர்களின் பங்கேற்பை அதிகரிக்கவும், அவர்களுக்கான பாதுகாப்பான பணிச்சூழலை உறுதி செய்யவும் சிறப்பு வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஜூலை 1 முதல் இந்தியக் கிராமப்புறங்களில் புத்தம் புதிய விடியலை ஏற்படுத்தக் காத்திருக்கிறது இந்த 125 நாள் வேலைத் திட்டம். தொழில்நுட்பமும், கூடுதல் வேலை நாட்களும் இணைந்த இந்த 'விக்சித் பாரத்' திட்டம், கிராமப்புறப் பொருளாதாரத்தில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும் எனப் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த 125 நாட்கள் வேலை திட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இதுகுறித்து முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தனது பதிவில் கூறியிருப்பதாவது: ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது ஒன்றிய பா.ஜ.க.; அதற்கு ஒத்து ஊதுகிறார் திருவாளர் பழனிசாமி!

#VBGRAMG திட்டத்தில் 125 நாட்கள் வேலை என்பது ஏமாற்று வேலையே! 100 நாட்கள் வேலை உத்தரவாதம் என்று சட்டம் இருந்தபோதே, பா.ஜ.க. ஆட்சியில் மக்களுக்கு 20 முதல் 25 நாட்கள் மட்டுமே வேலை கிடைத்தது. அதற்கான ஊதியத் தொகையையும் திட்டச் செலவையும் மாதக் கணக்கில் விடுவிக்காமல் வஞ்சித்தனர். அந்த நிலுவைத் தொகையையும் நாம் போராடிப் பெற வேண்டிய அவலம்தான் இருந்தது.

தற்போது, ஒன்றிய அரசின் விருப்பத்தின் பேரில் அதிகாரிகள் விரும்பினால் வேலை வழங்கலாம் என்று விதிகள் மாற்றப்பட்ட பிறகு, ஓரிரு நாட்கள் வேலை கிடைப்பதே அரிதாகப் போகிறது. நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாடு பேரிழப்பைச் சந்திக்கப் போகிறது.

திட்டச் செலவில் 40% தொகையை மாநிலங்கள் ஏற்க வேண்டும் என்ற நிபந்தனை, #GST வரி மாற்றங்களுக்குப் பிறகு கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வரும் மாநில அரசுகளுக்குத் தரப்படும் சுமை; தண்டனை!

கிராமப்புறப் பெண்கள், ஏழை விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றி வந்த #MGNREGA திட்டத்துக்கு மூடுவிழா நடத்துவதற்குத் திருவாளர் பழனிசாமி அவர்கள் வரவேற்புப் பத்திரம் வாசிப்பது மன்னிக்க முடியாத பச்சைத் துரோகம்!'' என தெரிவித்திருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+