100ஆ ஹலோ கண்ட்ரோல் ரூமா? விஜய்யின் தவெகவை பாருங்க சார்.. நள்ளிரவில் தனலட்சுமியால் அலறிய கோவை போலீஸ்
கோயம்புத்தூர்: தமிழக வெற்றிக் கழகத்தில் சீட் கிடைக்கவில்லை என்பதற்காக கோவை பெண் ஒருவர் செய்த காரியம் பெரும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. சீட் கிடைக்கவில்லை என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்வதா? எந்த எல்லைக்கும் செல்வதா? என்று நெட்டிசன்கள் இந்த சம்பவத்தை விமர்சித்து வருகிறார்கள்.. மது போதையில் அந்தப் பெண் செய்த காரியம் தற்போது ஒட்டுமொத்த கோவை மாவட்டத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது..
கோவை மாவட்ட காவல்துறை அவசர போலீஸ் உதவி எண் 100-க்கு நேற்று முன்தினம் இரவு ஒரு செல்போனில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பை ஏற்ற போலீசாரிடம் பேசிய பெண் ஒருவர், மிகவும் படபடப்பாகவும் அதேசமயம் பிடிவாதமாகவும் பேசத் தொடங்கினாராம்.

கோயம்புத்தூர் தனலட்சுமி
தான் நடிகர் விஜய்யின் தவெகவில் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும், ஆனால் தனக்கு வரும் தேர்தலில் எம்.எல்.ஏ சீட் தர மறுக்கிறார்கள் என்றும் அந்தப் பெண் புகார் தந்துள்ளார்.. தனக்கு சீட் கிடைக்காதது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த பெண் போலீசாரிடம் அப்போது தொடர்ந்து புலம்பித் தள்ளியுள்ளார்..
பொதுவாக விபத்து அல்லது ஆபத்தான நேரங்களில் மட்டுமே அழைக்க வேண்டிய எண்ணில், ஒரு பெண் அரசியல் சீட் கேட்டுப் பேசியது கட்டுப்பாட்டு அறை போலீசாரையே சற்று அதிர வைத்துள்ளது..
கோவை 100 கன்ட்ரோல் ரூம்
இதுகுறித்து உடனடியாக கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.. போலீசார் அந்த பெண் பேசிய செல்போன் எண்ணின் சிக்னலை வைத்து அவரது இருப்பிடத்தை ஆய்வு செய்தனர்.. அதில் அவர் கிணத்துக்கடவு அருகே உள்ள சூலக்கல் பகுதி அரண்மனைபுதூரில் இருந்து பேசியது கண்டுபிடிக்கப்பட்டது..
இதையடுத்து கிணத்துக்கடவு போலீசார் உடனடியாக அந்தப் பெண்ணின் வீட்டிற்கே நேரடியாக சென்றுவிட்டார்கள். அவரிடம் தீவிர விசாரணையும் நடத்தினார்கள்.
தனலட்சுமி புகார்
விசாரணையில் அந்தப் பெண்ணின் பெயர் தனலட்சுமி (45) என்பது தெரியவந்தது.. போலீசார் அவரிடம் பேசியபோது அவர் கடுமையான மது போதையில் இருந்தது ஊர்ஜிதமானது.. போதையின் உச்சத்தில் இருந்ததால் தான் என்ன பேசுகிறோம் என்று தெரியாமலேயே அவர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்திருக்கிறார்.
தவெகவில் தனக்கு முக்கியத்துவம் தரவில்லை என்றும், எம்.எல்.ஏ சீட் தர மறுக்கிறார்கள் என்றும் கூறி அவர் போலீசாரிடம் நீண்ட நேரம் வாக்குவாதம் செய்துள்ளார்..
காவல்துறையின் அவசர கால சேவையைத் தவறாகப் பயன்படுத்தியதற்காகவும், போதையில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதற்காகவும் அந்தப் பெண்ணிற்கு போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்துவிட்டு சென்றிருக்கிறார்கள்..
பெண் விளக்கம்
இதுகுறித்து அந்த பெண் சொல்லும்போது, ''நான் ஒரு மாற்றுத்திறனாளி. எனது 2 மகள்களுக்கும் திருணமாகி விட்டது. நான் தவெகவில் சேர திட்டமிட்டு இருந்தேன். நான் போதையில் இருந்ததாக சொல்வது பொய்யான தகவல். போலீசார், இரவில் போனில் அழைத்து, இதுபோல் தேவையில்லாத பிரச்னைகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து விட்டு சென்றனர்" என்றார்.
மது போதையில் அரசியல் ஆசையை வெளிப்படுத்த 100 என்ற எண்ணைப் பயன்படுத்திய அந்தப் பெண்ணின் செயல் தற்போது சோஷியல் முடியாவில் கிண்டலுக்கும் கண்டனத்திற்கும் ஆளாகியுள்ளது.. அவசர கால எண்களை விளையாட்டுத்தனமாகப் பயன்படுத்தக் கூடாது என போலீசார் மீண்டும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications