100% எத்தனால் எரிபொருள்.. கிரீன் சிக்னல் கொடுத்த மத்திய அரசு! பெரிய பிரச்சனை.. மக்களே உஷார்!
சென்னை: நாடு முழுவதும் 100% எத்தனால் (E100) கலந்த எரிபொருளை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக, மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருக்கிறார். ஆனால், சாதாரண வாகனங்களில் இந்த எரிபொருளை போட்டு பயன்படுத்தினால் அது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும், எனவே மக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
கரும்புச் சாறு, சோளம் மற்றும் பிற தானியங்களிலிருந்து எத்தனால் தயாரிக்கப்படுவதால், இதன் மூலம் கிடைக்கும் வருமானம் நேரடியாக விவசாயிகளுக்குச் சென்றடையும் என்று, E100 எரிபொருளுக்கு மத்திய அரசு நியாயம் சொல்கிறது. இதெல்லாம் ஒகேதான். ஆனால், எத்தனால் எரிபொருளை அனைத்து வாகனங்களுக்கும் பயன்படுத்த முடியுமா? என்பதுதான் தற்போதைய கேள்வியாக இருக்கிறது.

என்ன ஆகும்?
100% எத்தனால் (E100) எரிபொருளைப் பயன்படுத்தும்போது, அதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்படாத சாதாரண பைக்குகள் மற்றும் கார்களின் என்ஜின் பாகங்கள் நிச்சயமாகப் பாதிப்புக்குள்ளாகும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தற்போது இந்தியாவில் நாம் பயன்படுத்தும் சாதாரண வாகனங்கள் அனைத்தும் அதிகபட்சமாக 10% முதல் 20% எத்தனால் கலந்த பெட்ரோலை (E10/E20) தாங்கும் வகையிலேயே உருவாக்கப்பட்டுள்ளன. இப்படி இருக்கையில் பெட்ரோலை விட E100 எரிபொருள் ரேட் குறைவாக கிடைக்கிறது என்பதால், அந்த எரிபொருளை சாதாரண பைக்குகளில் போட்டால், நிச்சயம் பைக் நாசமாகிவிடும்.
பெரிய பிரச்சனை
சாதாரண வாகனங்களில் உள்ள ஃப்யூல் குழாய்கள், சீல்கள் மற்றும் கேஸ்கெட்டுகள் ரப்பரால் ஆனவை. E100 எரிபொருள் இவற்றை மெல்ல மெல்லக் கரைத்து, ஓட்டைகளை ஏற்படுத்தி எரிபொருள் கசிவை உண்டாக்கும். மட்டுமல்லாது எத்தனால் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மை கொண்டது. இதனால் அலுமினியம் மற்றும் இரும்புப் பாகங்கள் கொண்ட ஃப்யூல் டேங்க், கார்பூரேட்டர் அல்லது ஃப்யூல் இன்ஜெக்டர் போன்ற பாகங்கள் துருப்பிடித்துப் பாழாகும்.
மாற்று வழி என்ன?
அப்படியெனில் இதற்கு மாற்றுதான் என்ன? என்று கேள்வி எழுந்திருக்கிறது. இதற்கும் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. சாதாரண வாகனங்களை தூக்கி போட்டுவிட்டு Flex-Fuel வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு சொல்கிறது. பிரச்சனை என்னவெனில் இந்த வாகனங்களின் உற்பத்தி இப்போதுதான் தொடங்கியிருக்கிறது.
இன்றைய தேதியில் 100% எத்தனால் வரை இயங்கக்கூடிய தூய்மையான ஃப்ளெக்ஸ்-ஃப்யூல் வாகனங்களின் (Flex-Fuel Vehicles - FFVs) எண்ணிக்கை இன்னும் 1 சதவிகிதத்தைக் கூட எட்டவில்லை, கிட்டத்தட்ட 0.01% க்கும் குறைவு.
புதிய வாகனங்களும் சிக்கல்களும்
இப்போதுதான் மாருதி சுசுகி நிறுவனம் தனது முதல் ஃப்ளெக்ஸ்-ஃப்யூல் காரான 'வேகன் ஆர்' (WagonR Flex-Fuel) மாடலையும், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 'ஸ்பிளெண்டர் பிளஸ்' (Splendor+) மற்றும் 'எச்.எஃப் டீலக்ஸ்' (HF Deluxe) ஆகிய ஃப்ளெக்ஸ்-ஃப்யூல் பைக்குகளையும் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த வாகனங்கள், இதற்கு முந்தைய பெட்ரோல் வாகனங்களை விட ரேட் அதிகம் என்பதால் மக்கள் வாங்க தயங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications