100 ரூபாய் சவாரி; 1000 ரூபாய் தந்த அமெரிக்கர்! வாங்க மறுத்த சென்னை ஆட்டோ டிரைவர்!
சென்னை: கடின உழைப்பை பாராட்டி 100 ரூபாய் சவாரிக்கு 1000 ரூபாய் கொடுத்த அமெரிக்கக்காரரிடம் பணம் வாங்க மறுத்த ஆட்டோ ஓட்டுநர் பற்றிய ஒரு வீடியோ பதிவு வைரலாகி வருகிறது.
சென்னை வரலாற்றை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுபோய் சேர்க்க வேண்டி ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22ஆம் தேதியை 'மெட்ராஸ் டே' எனக் கொண்டாடி வருகிறோம். இந்த நகரம் உருவாகி 385 ஆண்டுகள் ஆகிறது. அதாவது 1639இல் உருவான இந்த சென்னை இன்று வியக்க வைக்கும் நகரமாக விளங்கி வருகிறது. ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள் எனப் பல படைகளைப் பார்த்த இந்த மெட்ராஸ் இந்தியாவிலேயே பழமையான நகரம்.

இந்தச் சென்னையைச் சுற்றிப் பார்ப்பதற்காக வந்த அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ் லூயிஸ் அந்த அனுபவம் பற்றி ஒரு வீடியோவை அவரது யூடியூபில் வெளியிட்டுள்ளார். அது 6 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து போய்க் கொண்டிருக்கிறது. அதற்கு ஆயிரம் பேருக்கு மேல் கருத்து கூறியுள்ளனர். இவரது சேனலை கிட்டத்தட்ட 1.12 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள்.
இவர் சமீபத்தில் சென்னை வந்துள்ளார். வழக்கமாக வெளிநாட்டுப் பயணிகள் என்றால் காரில்தான் ஊரைச் சுற்றிப் பார்ப்பார்கள். இவர் ஆப் மூலம் ஆட்டோ புக் செய்து அதில் பயணம் செய்துள்ளார். அதுவும் வேகாத வெயில் நேரத்தில் சென்னையை வலம் வந்துள்ளார். ஆப் மூலம் புக் பண்ண ஆட்டோ வந்ததும், 'நான் அழைத்த டிரைவர் நீங்கள் தானா?' என்று கேட்கிறார் கிறிஸ். டிரைவர் இவரிடம் ஒடிபி எண் கேட்க அதைப் பகிர்ந்துக் கொண்டவுடன், 'நீங்கள் சென்னையா? தமிழ்நாடா? உங்கள் பெயர் என்ன?' என்று விசாரிக்க, அதற்கு டிரைவர் 'பாண்டிய ராஜன்' என்கிறார். அந்தப் பெயரை உச்சரிக்க கிறிஸ் தடுமாறுகிறார். எப்படியோ சமாளித்து பாண்ட்யராஜா என்கிறார்.

அதை அடுத்து தனக்கு அதிக பசியாக இருப்பதாகவும் சென்னையில் பிரியாணிதான் பிரபலம் என்கிறார்கள். ஒரு நல்ல பிரியாணிக் கடைக்கு அழைத்து போங்கள் என்றும் சொல்கிறார் கிறிஸ். தனது பார்வையாளர்களைப் பார்த்து தமிழ்நாட்டில் இந்த ஆட்டோ ஓட்டுநர்கள் தினக்கூலிகளாக வேலை பார்க்கிறார்கள். குறைந்த ஊதியம் கிடைத்தாலும் இவர்கள் நேர்மையானவர்களாக இருக்கிறார்கள் என்று விளக்கம் அளிக்கிறார்.
அவர் தேடிய பிரியாணி கடை சரியான அடையாளம் காண முடியாமல் தவிக்கிறார் ஆட்டோ டிரைவர். அப்போது கூகுள் மேப் மூலம் இடத்தைப்போட்டுக் கண்டு பிடித்து விட்டார் கிறிஸ். இறங்கும்போது 'இந்த ஆட்டோவுக்கு நீங்கள்தான் முதலாளியா? இல்லை வாடகைக்கு ஓட்டுகிறீர்களா? ஒரு நாளைக்கு எவ்வளவு வாடகை கொடுக்கிறீர்கள்? வருமானம் எவ்வளவு கிடைக்கும்?' என்று அடுக்கடுக்காக கிறிஸ் ஆங்கிலத்தில் விசாரிக்க ஆட்டோ டிரைவருக்கோ ஒன்றுமே புரியவில்லை. வேர்த்து விறுவிறுத்துவிட்டார்.
அதைப் புரிந்து கொண்ட கிறிஸ் 'நீங்கள் தமிழ் தானே?' என்று கேட்டு விட்டு ஆங்கிலத்தில் கேட்க விரும்புவதைப் பேசி கூகுள் மொழிபெயர்ப்பு மூலம் தமிழ்ப்படுத்தி டிரைவரிடம் காட்டுகிறார். அது சரியாகவே சொல்கிறது. அதைப் படித்துப் புரிந்து கொள்ளாமல் தடுமாறிய டிரைவர், 'மாலை ஸ்கூல் சவாரி உள்ளது. ஆகவே வர முடியாது. வந்ததற்கு 100 ரூபாய் கட்டணம் கொடுங்கள்' என்று அரைகுறை ஆங்கிலத்தில் சமாளிக்கிறார்.

அப்போது கிறிஸ் விடவில்லை. மீண்டும் இந்த ஆட்டோ உரிமையாளர் நீங்கள்தானா என்று கூகுள் மூலம் தமிழில் மொழிபெயர்த்துக் காட்டினார். அதுவும் அவருக்குப் புரியவில்லை. கிறிஸ் ஆட்டோவை ரிக்ஷா என்று சொன்னது டிரைவருக்கு விளங்கவில்லை. கடைசியில் 100 ரூபாய் கேட்ட ஆட்டோ டிரைவருக்கு 1000 ரூபாய் கொடுக்கிறார் கிறிஸ். அதை அந்த டிரைவர் வாங்க மறுக்கிறார். கிறிஸ், 'நீங்கள் கடினமாக உழைக்கிறீர்கள். இதை வைத்துக் கொள்ளுங்கள்' என்கிறார். ஆட்டோ டிரைவர் 'முடியவே முடியாது சார்' என மறுக்கிறார். இறுதியில் 1000 ரூபாயைச் சட்டைப் பையில் வைத்து அழுத்திவிட்டு பிரியாணி கடையைப் பார்த்துக் கிளம்பிவிட்டார் கிறிஸ்.
அவர் தேடிப் போன பேமஸ் பிரியாணி கடை ஏதோ ஸ்டார் ஹோட்டலாக இருக்கும் என நினைத்தால் தள்ளுவண்டியில் வைத்து விற்கப்படும் சிக்கன் பிரியாணி கடைக்குப் போய் ஒரு பிளேட் வாங்கி ருசிக்கிறார் கிறிஸ். அங்கே உள்ளவர்களிடம் பிரியாணி பற்றி, ரைதா தயாரிப்பு பற்றிய விவரங்களைக் கேட்டு தெரிந்து கொண்ட இந்த அமெரிக்கச் சுற்றுலாவாசி அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்குச் சேர்த்து பில் கொடுக்கட்டுமா என்கிறார். அதற்கு அங்கே உள்ள நபர்கள், 'நீங்கள் எங்கள் நாட்டுக்கு விருந்தினர். நாங்கள்தான் பணம் கொடுப்போம்' என்று சொல்கிறார்கள். அதைக் கேட்ட கிறிஸ் உணர்ச்சி நிலையில் அப்படியே மனம் இறங்கிவிடுகிறார்.

அதன்பின்னர் எல்.ஐ.சிக்கு மெட்ரோ மூலம் சென்ற கிறிஸ் அங்கே சாலை ஓரத்தில் விற்பனை செய்யப்படும் கிர்னி பழம், பாதாம் பால், கேசரி லெஸ்ஸி ஆகியவற்றை வாங்கி சுவைத்தார். அதன் விலை வெறும் 25 ரூபாய் என்பதை அவரால் நம்பவே முடியவில்லை. மீண்டும் ஸ்பென்சர் பிளாசா சென்று குழந்தைகள் விளையாடும் வீடியோ கேம்ஸ் பொருட்களைப் பார்த்து விலை விசாரித்து மகிழ்ந்தார். அதற்குள் இரவாகிவிட்டது.
வெளியே வந்த அவர் சாலையோரம் உள்ள கடையில் மசாலா தோசையைக் காரமாக வாங்கி சாப்பிட்டு ருசித்தார். பக்கத்திலிருந்த சிக்கனையும் வாங்கி சாப்பிட்டார். அங்கே வந்த தமிழ்நாட்டுப் பெண்களிடம் அதன் சுவை பற்றிக் கேட்டு அறிந்தார். கிட்டத்தட்ட கிறிஸுக்கு சென்னை அனுபவம் அமர்க்களமாக அமைந்தது.
இந்தப் பயணத்தில் பார்த்த அனைவருக்கும் கிறிஸ் வணக்கம் என்று தமிழில் சொன்னார். அதேபோல நம்ம சென்னை என்று அடிக்கடி பேசி அவர் அமெரிக்கப் பார்வையாளர்களுக்குப் புரியவைத்தார்.












Click it and Unblock the Notifications