100 ஆண்டு பழசு.. சென்னை மண்ணடியில் இடிந்த 4 மாடி கட்டிடம்! 4 பேர் நிலை என்ன? களத்தில் மேயர் பிரியா
சென்னை: மண்ணடி அரண்மனைக்காரன் தெருவில் அமைந்து இருந்த பழமையான கட்டிடம் புதுப்பிக்கும் பணியின்போது இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
சென்னையின் பழமையான பகுதிகளில் ஒன்றாக மண்ணடி இருக்கிறது. இங்கு 50 ஆண்டுகள், 80 ஆண்டுகள், 100 ஆண்டுகளை கடந்த பழைய கட்டிடங்கள் உள்ளன. அங்குள்ள அரண்மனைக்காரன் வீதியில் பழமையான 4 மாடிக் கட்டிடம் அமைந்து இருந்தது. இதனை புனரமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்து இருக்கின்றன.

இந்த நிலையில் இன்று கட்டிடத்தின் மேற்கூரையிலிருந்து திடீரென மளமளவென இடிந்து விழுந்து தரைமட்டமான கட்டிடத்தின் பக்கவாட்டு சுவர்களின் பெரும்பகுதியும் இடிந்து விழுந்து இருக்கின்றன. கட்டிட பராமரிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த 4 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கியதாக கூறப்பட்ட நிலையில் அது வதந்தி என்றும், 2 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறுகலான பாதையில் கட்டிடம் அமைந்து இருப்பதால் மீட்புப் பணியில் ஈடுபடுவதில் சிரமம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மீட்புப் பணிகளை மேலும் துரிதப்படுத்த தேசிய பேரிடர் மீட்பு படையினரும் அழைக்கப்பட்டனர்.
அதை தொடர்ந்து சென்னை அடையாறு மற்றும் அரக்கோணத்தில் இருந்து தலா ஒரு தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மீட்புப்பணிக்கு விரைந்து உள்ளது. கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளான தகவல் அறிந்தவுடன் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அவருடன் சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். மாநகராட்சியிடம் உரிய அனுமதி பெறாமல் கட்டிட சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தீயணைப்பு துறை டிஜிபி தெரிவித்து இருக்கிறார்.
குறுகலான பாதை என்பதால் மீட்புப் பணிகளில் தொய்வு இருப்பதாகவும் அவர் தெரிவித்து உள்ளார். கட்டிடத்தின் உரிமையாளர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறி உள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "தேசிய பேரிடர் மீட்பு படையினரிடம் நவீன கருவிகள் உள்ளன. அவர்களை அழைத்து உள்ளோம்." என்றார்.












Click it and Unblock the Notifications