ரொம்ப முக்கியம்.. உதவித்தொகை விண்ணப்பிக்க ரெடியா? 24ம் தேதியே முதல்வர் வருகிறார்.. எங்கேன்னு பாருங்க
சென்னை: தமிழ்நாடு முழுவதும் வரும் செப்டம்பர் 15-ந் தேதி முதல், குடும்ப தலைவிகளுக்கான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ள நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கி உள்ளது.
சட்டப்பேரவை தேர்தலின்போது குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று திமுக சார்பில் அறிவிக்கப்பட்டது.
அறிவித்தபடியே, இந்த திட்டம் வரும் செப்டம்பர் 15-ம் தேதி அண்ணா பிறந்த தினத்தில் செயல்படுத்தப்படுகிறது.. இதையடுத்து, பயனாளிகளின் தகுதிகள், நிபந்தனைகள் வெளியிடப்பட்டன...

கட்டுப்பாடுகள்: குடும்பத்தில் 21 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் ஒருவர் இந்த உரிமை தொகையை பெறலாம். குடும்ப வருமானம் ரூ.2.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். ஆண்டு மின்நுகர்வு 3,600 யூனிட்டுக்கு கீழ் இருக்க வேண்டும் என்பது உட்பட பல நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்காக ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
டோக்கன்கள்: இதையடுத்து, ரேஷன் கடைகள் மூலம் விண்ணப்பம் அளித்து, 2 கட்ட விண்ணப்ப பதிவு முகாம்கள் நடத்த முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, நியாய விலைக்கடை பணியாளர்கள், தங்கள் கடைக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று, விண்ணப்பம் மற்றும் முகாம் நடைபெறும் நாள், நேரம் அடங்கிய டோக்கன் போன்றவற்றை வழங்கினார்கள்..
இந்நிலையில், நாளை மறுநாள் அதாவது 24-ந் தேதி (திங்கட்கிழமை) தருமபுரி மாவட்டம், தொப்பூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கும் பணியை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக முதல்வர் ஸ்டாலின், திங்கட்கிழமை காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் மாவட்டம், ஓமலூர் விமான நிலையத்திற்கு வருகிறார்.
பிறகு, அங்கிருந்து காரில் புறப்பட்டு சாலை மார்க்கமாக தொப்பூர் வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதற்கட்டமாக நடைபெறும் விண்ணப்ப பதிவை தொடங்கி வைக்கிறார். பின்னர் கணினியில் பதிவு செய்வதையும் நேரில் பார்வையிடுகிறார்.
நேரில் ஆய்வு: இதையடுத்து, அங்கேயே மகளிர் குழுவினருடன் சிறிது நேரம் கலந்துரையாடல் நடத்துகிறார். அதன்பின்னர், அருகில் உள்ள மைதானத்தில் அமைக்கப்படும் மேடையில் முதல்வர் உரை நிகழ்த்த உள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு மறுபடியும் ஓமலூர் விமான நிலையத்திற்கு சென்று, சென்னைக்கு கிளம்பி செல்கிறார்.












Click it and Unblock the Notifications