பெரிய வேலைய பார்த்துவிட்ட SIR.. 103 தொகுதிகளில் 10%க்கு அதிகமான வாக்காளர் குறைவு! தேர்தலில் தாக்கம்?
சென்னை: எஸ்.ஐ.ஆர் பணிகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலுமே வாக்காளர் எண்ணிக்கு குறைந்துள்ளது. 103 சட்டசபை தொகுதிகளில் 10%க்கும் மேலாக வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது. இது தேர்தலில் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்உ நவம்பர் 4 ஆம் தேதி, தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் தொடங்கின. தகுதியான வாக்காளர்கள் புலம் பெயர்ந்தவர்கள், இறப்பு, இடம் மாற்றம் என பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு வாக்காளர் சரிபார்ப்பு பணி நடைபெற்றது. அனைத்துப் பணிகளும் நிறைவடைந்த நிலையில் பிப்ரவரி 23 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி நிலவரப்படி 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். SIR பணிகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை - 5,67,07,380 ஆக குறைந்துள்ளது.

தமிழ்நாட்டில் எஸ்ஐஆருக்கு பின், 74 லட்சத்து 7 ஆயிரத்து 207 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். சட்டசபை தொகுதி வாரியாக பார்த்தால், 103 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் எண்ணிக்கை 10 சதவீதத்திற்கும் மேலாக குறைந்துள்ளது. 26 தொகுதிகளில் 25 சதவீதத்திற்கும் அதிகமான வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
வாக்காளர்கள் பெயர் நீக்கத்தில் சென்னை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. சென்னை மாவட்டத்தில் 13,65,763 ஆண், 14,64,344 பெண், 829 இதரர் என மொத்தம் 28,30,936 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். கடந்த அக்டோபர் 27ஆம் தேதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது, 11,73,758 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அதிக அளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்ட பட்டியலில் சென்னை மாவட்டத்தின் சட்டசபை தொகுதிகளே முதல் 9 இடங்களை பிடித்துள்ளன. குறிப்பாக, ஆயிரம் விளக்கு தொகுதியில் 35.4 சதவீத வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். குறைவான அளவில் வாக்காளர்கள் நீக்கம் என்றால், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் தொகுதிகளில் 2 சதவீதத்திற்கும் குறைவான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
10 சதவீதத்துக்கும் அதிகமான நீக்கம் தேர்தலில் நிச்சயம் ஒரு தாக்கத்தை உண்டாக்கலாம் எனக் கூறப்படுகிறது. இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானதுமே சமூக வலைதளங்களில் பலரும் தங்களுக்கு வாக்கு இல்லை என்று புலம்பியதைப் பார்க்க முடிந்தது. வாக்களிக்க விரும்பும் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது தேர்தலில் தாக்கத்தை உண்டாக்கும்.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில், 122 தொகுதிகளில் 10 சதவீதம் மற்றும் அதற்கும் குறைவான சதவீத வாக்குகளே வெற்றி தோல்விகளைத் தீர்மானித்துள்ளன. 8 தொகுதிகளில் வெறும் ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகள் வெற்றி தோல்வியைத் தீர்மானித்துள்ளன. குறிப்பாக சென்னை தி.நகர் தொகுதியில் வெறும் 137 ஓட்டு தான் வெற்றி வித்தியாசம்.
எனவே, தற்போது நீக்கப்பட்டுள்ள வாக்காளர் பெயர்களில் தகுதியானவர்கள், தவறுதலாக நீக்கப்பட்டிருந்தால், அவர்கள் யாருடைய ஆதரவாளர்களோ அதற்கேற்ப முடிவுகள் மாறக்கூடும். தவறுதலான நீக்கத்தால் வெற்றி தோல்வியே தலைகீழாக மாறவும் வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications