12 பொதுத்துறை வங்கிகளை இணைத்து.. 4 ஆக குறைக்க முடிவு.. மத்திய அரசு மெகா திட்டம்.. என்ன நடக்கும்?
சென்னை: நாட்டின் 12 பொதுத் துறை வங்கிகளை நான்காக குறைக்கும் மிகப்பெரிய வங்கி இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு பரிசீலனை எனத் தகவல் வெளியாகி உள்ளது. 2027 நிதியாண்டுக்குள் பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கையை 12-லிருந்து 4 ஆகக் குறைக்கும் மாபெரும் திட்டமொன்றை இந்திய அரசு வகுத்து வருகிறது.
பாரத ஸ்டேட் வங்கி (SBI), பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB), பாங்க் ஆஃப் பரோடா (BoB) மற்றும் ஒரு பெரிய இணைக்கப்பட்ட வங்கி ஆகிய நான்கு மட்டும் இருக்கும் வகையில் மற்ற பொதுத்துறை வங்கிகள் இதனுடன் இணைக்கப்படும். இத்தகவல் 2025 டிசம்பர் 1 அன்று வெளியானது. வங்கிகளின் செயல்பாட்டு திறனை மேம்படுத்தவும், உலகளவில் போட்டி போடக்கூடிய வகையில் பெரிய வங்கிகளை உருவாக்கும் நோக்கில் இந்நடவடிக்கைக்கு திட்டம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
இணைக்கப்படும் வங்கிகள்
நிதி அமைச்சகத்தின் இத்திட்டம், வங்கிகளின் டெபாசிட்டை, வருவாயை வலுப்படுத்தி, செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தி, உலகளாவிய போட்டித்தன்மை கொண்ட நிறுவனங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும் பெரிய வங்கிகளை உருவாக்கவே 12 பொதுத்துறை வங்கிகள் நான்காக குறைக்கப்படும் என்று அரசு வட்டாரம் தெரிவித்து உள்ளது.
கனரா வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவற்றை மத்திய அரசு ஒன்றிணைத்து, நான்கு முக்கிய வங்கிகளில் ஒன்றாக மாற்றும். இந்தியன் வங்கி மற்றும் யூகோ வங்கியும் இதில் இணைந்து, SBI, PNB, BoB உடன் நான்காவது பெரிய வங்கியாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எந்தெந்த வங்கிகள் இணைக்கப்படலாம்
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB), சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா (CBI), பாங்க் ஆஃப் இந்தியா (BoI), பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா (BoM) போன்ற நடுத்தர வங்கிகள் SBI, PNB அல்லது BoB உடன் இணைக்கப்படும். பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி குறித்த இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை.
இத்திட்டம் முதலில் நிதி அமைச்சரின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும். ஒப்புதல் கிடைத்ததும், அமைச்சரவைச் செயலாளர், பிரதமர் அலுவலகம் (PMO) மற்றும் SEBI போன்ற அமைப்புகளின் கருத்துகளைப் பெற்று, பல அடுக்கு சரிபார்ப்புக்கு உள்ளாகும்.
விவாதத்திற்கான பதிவுகள் தயாரிக்கப்பட்டு அனுப்பப்படும். நிதி அமைச்சரின் ஒப்புதலுக்குப் பிறகே அமைச்சரவை மற்றும் PMO-க்குச் இந்த பரிந்துரை கொண்டு செல்லப்படும். சந்தை தாக்கங்களைக் கருதி, செபியின் ஆலோசனைகள் கேட்கப்பட்டு அதன்பின்பே முடிவுகள் எடுக்கப்படும்.
இணைப்பு சுமுகமாக இருக்கும்
கிளைகளை நெறிப்படுத்தவும், செலவுகளைக் குறைக்கவும், வங்கி நிதிகளின் பயன்பாட்டை மேம்படுத்தவும் இது உதவும். பெரிய வங்கிகளுக்கு சிறந்த நிர்வாகக் கட்டமைப்புகள், வலுவான இருப்புநிலைகள் இருப்பதால், இந்த இணைப்புகள் சுமூகமாக இருக்கும் என்று அரசு நம்புவதாக வட்டாரம் கூறியது.
இதனால் வங்கியில் கணக்கு வைத்துள்ளவர்கள் கணக்குகளுக்கு பாதிப்பு ஏற்படாது. ஆனால் சில மினிமம் பேலன்ஸ் ரூல்ஸ் , வட்டி விதிகள் மாற்றப்படலாம். மறுசீரமைப்பு, இந்தியாவின் உயர்ந்து வரும் கடன் தேவைகளுக்கு வங்கித் துறையைத் தயார்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கையாகும். பெரிய பொதுத்துறை வங்கிகள் பெரிய கடன்களை வழங்கவும், அடிப்படைக் கட்டமைப்புக்கு நிதி அளிக்கவும், தனியார் வங்கிகளுடன் போட்டியிடவும் சிறப்பாகச் செயல்படும்.
திட்டமிட்டபடி நடந்தால், இத்திட்டம் பொதுத்துறை வங்கி ஒருங்கிணைப்பின் இரண்டாவது பெரிய கட்டமாகும். 2017-2020 மறுசீரமைப்பின் மூலம் அரசு வங்கிகளின் எண்ணிக்கை 27-லிருந்து 12 ஆக குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications