மின்சாரம் தாக்கி சிறுவன் பலி! தொட்டிலில் போட்டு வளர்த்தேனே! இப்போ ஐஸ் பாக்ஸ் வந்துருக்கே! தாய் கதறல்
சென்னை: சென்னையில் பாட்டியுடன் கோயிலுக்குச் சென்ற 13 வயது சிறுவன் அலங்கார விளக்களுக்காக போடப்பட்டிருந்த வயரை பிடித்ததால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கொருக்குப்பேட்டையை சேர்ந்தவர் கவின்(13). இவர் 6ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்றைய தினம் சித்ரா பவுணர்மி விழாவை முன்னிட்டு கோயில்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

கவின் வீட்டருகே உள்ள கருப்பு சாமி கோயிலில் அருள்வாக்கு சொல்லும் நிகழ்ச்சியை காண பாட்டியுடன் சென்றார். அப்போது கோயிலில் இருந்த பூசாரி சாமியாடிக் கொண்டு வந்த போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் கவின் சிக்கினார்.
இதனால் கீழே விழாமல் இருக்க அலங்கார விளக்கு அமைக்கப்பட்டிருந்த மரக்கட்டையை கவின் பிடித்துள்ளார். அப்போது அதன் வழியே அலங்கார விளக்கிற்காக கொண்டு சென்ற சேதமடைந்த வயரில் கைப்பட்டதும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். உரிய அனுமதியின்றி அங்கிருந்த மின்விநியோக பெட்டியிலிருந்து மின்சாரம் எடுத்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
சிறுவனின் உடலை பார்த்து தாய் கதறினார். அவர் கூறுகையில் என் பையன் தங்கமான பையன். நல்ல பையனை பெற்றிருக்கிறாய் என இந்த தெருவில் உள்ளவர்கள் எல்லாம் சொல்வார்கள், நேற்று என்னுடன் கடைக்கு வந்துவிட்டு எனது மாமியார் பக்கத்தில் இருந்த கோயிலுக்கு சென்றார். அவர் தனியாக சென்றுள்ளார். அவரை அழைத்து வருகிறேன் என என் பையன் சொன்னான்.
நான் அப்பவே வேண்டாம் என சொன்னேன். ஆனால் அவன் கேட்கவில்லை. ஆயாவை அழைத்து வந்துவிடுகிறேன் என போனான். அவ்வளவுதான் என் பையனை தூக்கி போட்டு கொண்டு போய்ட்டாங்க. எப்படியெல்லாம் வளர்த்தேன் என் புள்ளைய! தொட்டிலில் போட்டு தூங்க வைத்து வளர்த்தேன். ஆனால் இப்ப அவன் தூங்குவதற்கு ஐஸ் பெட்டி கொண்டாந்து இருக்காங்களே என தாய் கதறினார்.
இதுகுறித்து கவினின் பாட்டியிடம் கேட்ட போது என் பேரன்தான் கோயிலுக்கு போய் அருள்வாக்கு திருவிழாவை பார்க்க வேண்டும் என்றான். அதனால் அழைத்து கொண்டு சென்றேன். சாமியாடும் போது கூட்ட நெரிசலில் ஒரு கட்டையை பிடித்தான். உடனே ஆயா என்னால கை எடுக்க முடியவில்லை என்றான். உடனே அவனை தட்டிவிட்டேன்.
கீழே விழுந்தான். என் புள்ளை போய்ட்டானு சொன்னாங்க. பக்கத்துல இருக்கிற ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனேன். அந்த டாக்டர் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கூட்டிட்டு போக சொன்னார். அங்க என் புள்ளைய பார்க்கவே இல்லை. அப்பா, அம்மா வந்தாதான் பார்ப்போம்னு சொல்லி பார்க்கவே இல்லை. இப்ப என் மகனுக்கு நான் என்ன பதில் சொல்ல போகிறேன். என் கூடதானே கோயிலுக்கு வந்தான். இனி நான் என்ன செய்வேன் என அந்த பாட்டி கதறி அழுத காட்சிகள் அங்கிருந்தோரை கலங்க செய்தது.












Click it and Unblock the Notifications