வெறும் 18 ரூபாய் தான்.. சென்னை அருகே பிரபல சூப்பர் மார்க்கெட்டுக்கு மறக்க முடியாத தீர்ப்பு
சென்னை: பிரபல தனியார் குளிர்பானத்தில் கொய்யா ஜூஸை, எம்ஆர்பி விலையைவிட 18 ரூபாய் கூடுதலாக விற்ற சூப்பர் மார்க்கெட்டிற்கு 15000 ரூபாய் அபராதம் விதித்து திருவள்ளூர் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில் ஜூஸ் வாங்கிய ராஜா என்பவர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எம்ஆர்பி விலையைவிட கூடுதலாக விற்பனை செய்யும் கடைகள் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிவாரணம் பெற முடியும்.
நேர்மையற்ற வணிக முறையின் காரணமாக நுகர்வோராக உங்களுக்கு இழப்பு ஏற்பட்டிருந்தால், நீங்கள் வாங்கிய பொருள் குறைபாடுடையதாக இருந்தால், நீங்கள் வங்கி, கடை, ஓட்டல், உணவகம், பேருந்து, மின்சாரம் என உங்களுக்கு கட்டணம் செலுத்தி பெறும் சேவைகளில் சேவை குறைபாடு இருந்தால் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும்.

இதேபோல் நீங்கள் வாங்கிய பொருளுக்கு செலுத்திய விலை பொருளின் எம்ஆர்பி விலையை விட அல்லது சட்டத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகமாக இருந்தால் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும். இதேபோல் சட்டத்திற்கு புறம்பாக நுகர்வோரின் வாழ்க்கைக்கு உத்திரவாதமற்ற அல்லது ஆபத்து விளைவிக்கக்கூடிய பொருள் விற்கப்பட்டாலும் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும்.
மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு இதற்காகவே ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ளது. இந்த குழு மாவட்ட ஆட்சித் தலைவரை தலைவராகவும் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை உறுப்பினர் / செயலராகவும் மாவட்டத்திலுள்ள அனைத்து மக்கள் பிரதிநிதிகள் மற்றும் நுகர்வோர் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து துறை அலுவலர்களையும், தன்னார்வ நுகர்வோர் அமைப்பினர்களையும் உறுப்பினர்களாக கொண்டுள்ளது. இக்குழு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கூட்டப்பட்டு, நுகர்வோர் பிரச்சினைகள் தொடர்பாக வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு காணும்.
நுகர்வோர் குறைதீர் அமைப்புகளை பொறுத்தவரை பொருளின் விலை அல்லது சேவை குறைபாட்டிற்காக கோரப்படும் இழப்பீட்டின் மதிப்பு ரூ.20 லட்சம் வரை என்றால் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களில் வழக்கு தொடர முடியும். அதேபோல் ரூ.20 லட்சத்திற்கு அதிகமாகவும் ரூ.1 கோடி வரையிலும் இருந்தால் மாநில நுகர்வோர் ஆணையத்திலும், ரூ. 1 கோடிக்கு அதிகம் என்றால் தேசிய நுகர்வோர் ஆணையத்திலும் வழக்கு தொடரலாம்.
பிரச்சனை நடந்த 2 ஆண்டுகளுக்குள் புகாரை பதிவு செய்ய வேண்டும். புகாரை பதிவு செய்ய கட்டணம் ஏதுமில்லை. உறுதி மொழி அளிக்க முத்திரைத்தாள் தேவையில்லை. புகாரை அஞ்சலிலோ அல்லது புகார்தாரரால் நேரிலோ அல்லது அவரால் அங்கீகரிக்கப்பட்ட நபர் மூலமோ பதிவு செய்ய முடியும். வழக்கறிஞர் தேவையில்லை. நுகர்வோர் நீதிமன்றங்கள் குறித்த விழிப்புணர்வு அண்மைக் காலமாக தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களில் மட்டும் பல்வேறு வழக்குகளில் நீதிமன்றம் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.
அந்த வகையில் பிரபல தனியார் குளிர்பானத்தில் கொய்யா ஜூஸை, எம்ஆர்பி விலையைவிட 18 ரூபாய் கூடுதலாக விற்ற சூப்பர் மார்க்கெட்டிற்கு 15000 ரூபாய் அபராதம் விதித்து திருவள்ளூர் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில் ஜூஸ் வாங்கிய ராஜா என்பவர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications