திருச்சியில் சைனீஸ் நூடுல்ஸ் சாப்பிட்டதும் உயிரிழந்த சிறுமி.. நடந்தது என்ன? அமைச்சர் மா.சு விளக்கம்
சென்னை: திருச்சியில் சைனீஸ் புல்டாக் (buldak noodles) நூடுல்ஸ் சாப்பிட்டு 15 வயது மாணவி உயிரிழந்தது குறித்து அமைச்சர் மா சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். அந்த மாணவி சைனீஸ் புல்டாக் நூடுல்ஸ் சாப்பிட்டு தான் உயிரிழந்தார் என்றும், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் அந்த நூடுல்ஸ் காலாவதியாகியிருந்தது என்றும் அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் ஜூடி மெயில்ஸ். ரயில்வே ஊழியர். இவரது மகள் ஸ்டெபி ஜாக்குலின் மெயில்ஸ் (வயது 15). இவர் திருச்சியில் உள்ள பிரபல தனியார்ப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். ஸ்டெபிக்கு நூடுல்ஸ் சாப்பிடுவது என்பது பிடிக்கும்.

இதனால் சில நேரங்களில் கடைகளில் நூடுல்ஸ் வாங்கியும், சில நேரங்களில் வீட்டிலேயே சமைத்தும் நூடுல்ஸை சாப்பிடுவதை அவர் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அடிக்கடி நூடுல்ஸை விரும்பி சாப்பிட்டு வந்துள்ளார். அப்படி தான் கடந்த சனிக்கிழமை இரவும் அவர் வழக்கம்போல் ஆன்லைனில் நூடுல்ஸ் பாக்கெட் ஆர்டர் போட்டுள்ளார். நூடுல்சை சாப்பிட்டுவிட்டு கொக்கக்கோலா குடித்துவிட்டு தூங்கியிருக்கிறார்.
இதையடுத்து காலையில் அவர் உயிரிழந்து கிடந்தார். நூடுல்ஸ் சாப்பிட்டு சிறுமி உயிரிழந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் அந்த மாணவி ஆன்லைனில் ஆர்டர் செய்த சைனீஸ் புல்டாக் நூடுல்ஸ் (buldak noodles) சாப்பிட்டு தான் உயிரிழந்தார் என்றும், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் அந்த நூடுல்ஸ் காலாவதியாகியிருந்தது என்றும் அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார். இது தொடர்பாக அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியதாவது:-
திருச்சி அரியமங்கலம் பகுதியில் 15 வயது மாணவி அமேசான் மூலமாக சைனீஸ் புல்டாக் நூடுல்ஸ் வாங்கி சாப்பிட்டு இறந்துள்ளார். மாணவி ஜாக்குலின் அமேசானில் சைனீஸ் புல்டாக் (buldak noodles) என்ற நூடுல்சையும், ஒரு கொக்ககோலாவும் வாங்கி சாப்பிட்டுள்ளார். இதனால் அந்த மாணவி இறந்துள்ளார். மாணவியின் இறப்பு செய்தி அறிந்த உடனேயே உணவு பாதுகாப்பு துறையினர் அங்கு சென்று உடனடியாக விசாரணை நடத்தினர்.
இதில் மாணவி ஜாக்குலின் வாங்கி சாப்பிட்ட உணவு பொருளானது சைனீஸ் புல்டாக் என்ற நூடுல்ஸ். அந்த உணவுப் பொருள் எங்கே இருந்து வருகிறது. எங்கெல்லாம் விற்கப்படுகிறது என்று விசாரித்தனர். மேலும் ஓல்சேல் ஸ்டாக்கிஸ்டை பார்த்து விசாரித்த போது சைனீஸ் புல்டாக் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக அங்கு சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது சைனீஸ் புல்டாக் என்ற அந்த உணவுப் பொருளானது எக்ஸ்பிரி ஆகியிருந்தது தெரியவந்தது. சுமார் 800 கிலோ சைனீஸ் புல்டாக் நூடுல்ஸ் எக்ஸ்பிரி ஆகியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இதனை ஆய்வுக்கு அனுப்பியிருக்கின்றனர். இவ்வாறு அமைச்சர் கூறினார்.












Click it and Unblock the Notifications