தாய்ப்பால் விற்பனை.. முழு வேகத்தில் இறங்கிய டீம்.. கண்காணிக்க 18 குழுக்கள் அமைப்பு! புகார் எண் இதோ!
சென்னை: சென்னையில் தாய்ப்பால் விற்பனை செய்யப்படுவதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் மாநிலம் முழுவதும் தாய்ப்பால் விற்பனை தொடர்பான கண்காணிப்பை தீவிரப்படுத்த உணவு பாதுகாப்புத்துறை முடிவு செய்துள்ளது.
சென்னை மாதவரம் பகுதியில் ஒரு தனியார் புரோட்டின் மருந்து விற்பனை கடை இயங்கி வந்தது. இந்த கடையில் கடந்த சில மாதங்களாகவே சட்ட விரோதமாக தாய்ப்பால் விற்பனை செய்யப்பட்டு வருவதாக மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்துக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ் தலைமையில், மாதவரம் உணவு பாதுகாப்பு அலுவலர் கஸ்தூரி மற்றும் குழுவினர் நேற்று முன்தினம் இரவு திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது இந்தக் கடையில் சட்ட விரோதமாக தாய்ப்பாலை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்து வந்தது உறுதியானது. அதைத்தொடர்ந்து கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள், நேற்று காலை முழு சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் 100 மி.லி அளவு கொண்ட 90-க்கும் மேற்பட்ட தாய்ப்பால் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து கடையின்உரிமையாளர் செம்பியன் முத்தையாவிடம் (40) அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.
முதல்கட்ட விசாரணையில், அருகே உள்ள அரசு மருத்துவமனைகளில் இருந்தும், தன்னார்வலர்களிடம் இருந்தும் கடையின் உரிமையாளர் தாய்ப்பாலை பெற்று விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த கடைக்கு சீல் வைத்தனர்.
மேலும் தாய்ப்பால் மாதிரிகள், புரோட்டீன் பவுடர்களின் மாதிரிகளை ஆய்வு செய்வதற்காக அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். புரோட்டீன் பவுடர்விற்பதற்குத் தான் உரிமம் வழங்கப்பட்டதை பயன்படுத்தி, தாய்ப்பால் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

தாய்ப்பாலை வணிக ரீதியாக விற்பனை செய்வதற்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தடை விதித்துள்ள நிலையில் தாய்ப்பால் விற்பனை செய்யப்பட்டதும், கடைக்கு சீல் வைக்கப்பட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சென்னையில் தாய்ப்பால் விற்பனை தொடர்பாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல, திருவள்ளூரில் தாய்ப்பால் விற்பனை தொடர்பாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க 17 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் மாநிலம் முழுவதும் தாய்ப்பால் விற்பனை மையங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், வேறு பொருட்கள் விற்பனை செய்வதாக கூறி தாய்ப்பால் விற்பனை செய்பவர்களின் லைசன்ஸ்களை ரத்து செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தாய்ப்பால் விற்பனை தொடர்பாக பொதுமக்கள் உணவு பாதுகாப்பு துறையிடம் 94440 42322 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications