வாடகைக்கு கடைகள்.. 18% ஜிஎஸ்டி வரி.. சிறு வணிகர்கள் மீது மோசமான தாக்குதல்: கிளம்பி வந்த பாலகிருஷ்ணன்
சென்னை: கார்ப்பரேட் நிறுவனங்களின் வரியை 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக குறைத்துள்ள மோடி அரசு, சிறு வணிகர்கள் நடத்தும் கடை வாடகைக்கும் 18 சதவீதம் ஜிஎஸ்டி விதித்துள்ளது சிறு வணிகர்களை முற்றாக சீரழித்து, இத்தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு வணிகர்கள் மீது தொடுக்கப்பட்ட கொடூரத் தாக்குதலாகும் என்றும், மத்திய பாஜக அரசின் இந்த முடிவை வன்மையாக கண்டிப்பதோடு, உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியிருக்கிறது.
கடை வாடகைக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. விதித்துள்ளது சிறு வணிகர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள கொடூர தாக்குதல் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளதுடன், இது தொடர்பாகவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், "மத்தியில் பா.ஜ.க அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகைகளை வாரி வழங்கியும், சிறு, குறு தொழில் முனைவோர் மற்றும் சிறு வணிகர்களுக்கு விரோதமான நடவடிக்கைகளையும் அமல்படுத்தி வருகிறது.
தற்போது, வாடகை கடைகளை நடத்தி வரும் சிறு வணிகர்கள் கடை வாடகை தொகையில் 18 சதவீதம் ஜி.எஸ்.டி வரியை இனி ஒவ்வொரு மாதமும் செலுத்த வேண்டும் என கடந்த செப்டம்பர் 23-ந்தேதி கூடிய ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவு மிக மோசடியானது மட்டுமின்றி, வாடகை இடத்தில் வாணிபம் செய்யும் ஏழை, நடுத்தர வணிகர்கள் மீது தொடுத்துள்ள மோசமான தாக்குதலாகும்.
கார்ப்பரேட் நிறுவனங்களின் வரியை 30 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக குறைத்துள்ள மோடி அரசு, சிறு வணிகர்கள் நடத்தும் கடை வாடகைக்கும் 18 சதவீதம் ஜி.எஸ்.டி. விதித்துள்ளது சிறு வணிகர்கள் மீது தொடுக்கப்பட்ட கொடூர தாக்குதலாகும். மத்திய பா.ஜ.க அரசின் இந்த முடிவு வன்மையாக கண்டிக்கத்தக்கது. உடனடியாக மத்திய அரசு இந்த முடிவை திரும்ப பெற வேண்டும்" என்று பாலகிருஷ்ணன் அதில் கேட்டுக் கொண்டுள்ளார்.
முன்னதாக, கமர்சியல் பயன்பாட்டிற்கான அலுவலகம் மற்றும் தொழில், பொது பயன்பாட்டிற்காக லீசுக்கு விடுதல் போன்றவற்றுக்கு வாடகைக்கு விடப்படும் சொத்துக்களுக்கே இதுவரை ஜிஎஸ்டி தொகை வசூல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications