1,847 போலீசார் அதிரடியாக பணியிட மாற்றம்.. ஒரே நாளில் டிரான்ஸ்பர் உத்தரவுக்கு பின்னணி இதுதான்!
சென்னை: தமிழ்நாடு முழுவதும் 1,847 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழலில் ஒரே நாளில் காவல்துறை அதிகாரிகள் 1,847 பேர் டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. லோக்சபா தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார்.

தேர்தலை முன்னிட்டு காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் பணியிட மாற்றம் பட்டியலை தயாரிக்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அதன்படி சொந்த ஊரில் அல்லது ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளாக பணிபுரியும் போலீசார் பட்டியலை தயாரித்து அனுப்புமாறு சுற்றறிக்கை வாயிலாக அறிவுறுத்தி இருந்தார்.
3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு அங்குள்ள அரசியல் பிரமுகர்களுடன் நல்ல பரிச்சயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் போலீஸ் அதிகாரிகள் அவர்களுக்கு ஆதரவாக செயல்படலாம் என்பதால் தேர்தல் ஆணைய உத்தரவுப்படி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.
இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் 1,847 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழலில் 1,847 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து காவல்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார். காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் உட்பட 1,847 போலீசார் டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications