ஒரே நாளில்.. 2 கெட்ட செய்திகள்.. எடப்பாடி அவ்வளவு முயன்றும் முடியலையே.. காரியத்தை சாதித்த ஓபிஎஸ்?
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரே நாளில் இரண்டு கெட்ட செய்திகள் சென்று இருக்கின்றன.
அதிமுகவில் உட்கட்சி மோதல் முடிவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. எடப்பாடி, ஓ பன்னீர்செல்வம் தரப்பு மாறி மாறி மியூசிக் சேரில் அடித்துக்கொள்வது போல அடித்துக்கொண்டு இருக்கின்றனர்.
உச்ச நீதிமன்றத்தில் இரண்டு தரப்பிற்கும் இடையில் சட்ட போராட்டம் ஒரு பக்கம் தீவிரமாக நடந்து கொண்டு இருக்கிறது. இன்னொரு பக்கம் டெல்லியில் பாஜகவின் ஆதரவை பெற.. அதாவது மோடி - அமித் ஷாவின் ஆதரவை பெற எடப்பாடி - ஓ பன்னீர்செல்வம் இருவரும் தீவிரமாக முயன்று கொண்டு இருக்கின்றனர்.

எடப்பாடி ஹாப்பி
இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் டெல்லி கொடுத்த மரியாதை காரணமாக மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் ஜி 20 கூட்டம் தொடர்பான ஆலோசனை டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி அழைக்கப்பட்டு இருந்தார். எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில் அழைக்கப்படாமல், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற முறையில் இவர் டெல்லிக்கு அழைக்கப்பட்டு இருந்தார். கிட்டத்தட்ட டெல்லி பாஜக எடப்பாடியை இடைக்கால பொதுச்செயலாளராக ஏற்றுக்கொண்டதாகவே இதில் பார்க்கப்பட்டது. அதாவது மோடி, அமித் ஷா இருவரும் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக ஏற்றுக்கொண்டதாகவே இந்த நிகழ்வு பார்க்கப்பட்டது. இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமி தரப்பும் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தது.

2 விஷயங்கள்
இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரே நாளில் இரண்டு கெட்ட செய்திகள் சென்று இருக்கின்றன. கொஞ்ச நேரம் சந்தோசமாக இருக்க விட மாட்டீங்களா என்று சொல்லும் அளவிற்கு எடப்பாடி பழனிசாமிக்கு இரண்டு கெட்ட செய்திகள் சென்றுள்ளன. முதல் விஷயம், நேற்று குஜராத்தில் பாஜக முதல்வர் பூபேந்திர பாகல் பதவி ஏற்பு விழாவிற்கு ஓ பன்னீர்செல்வம் சென்று இருந்தார். குஜராத்தில் நடந்த விழாவில் குஜராத் சென்ற ஓ பன்னீர்செல்வத்திற்கு பாஜக மூத்த தலைவர்கள் பலர் சிறப்பு மரியாதையை கொடுத்துள்ளனர். பாஜக குஜராத் மாநில நிர்வாகிகள் ஓ பன்னீர்செல்வத்திற்கு வரவேற்பு கொடுத்தனர். பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.

சந்திப்பு
இந்த நிகழ்வு முடிந்து பாஜக தேசிய தலைவர் ஜெபி நட்டாவை சந்தித்து ஓ பன்னீர்செல்வம் பேசினார். அதிலும் இவருக்கு சிறப்பு மரியாதை கொடுக்கப்பட்டது. இன்னொரு பக்கம் வெளியே வந்த மோடி, அமித் ஷா இருவரையும் தனி தனியாக 2 நிமிடங்கள் சந்தித்து ஓ பன்னீர்செல்வம் பேசினார். ஆனால் இதில் இவர்கள் அரசியல் பேசவில்லை. பொதுவாக உடல்நலம் குறித்து மட்டுமே விசாரித்துக்கொண்டனர் என்று கூறப்படுகிறது. ஆனாலும் நேற்று பாஜக தலைவர்களுடன் ஓ பன்னீர்செல்வம் மிக மிக நெருக்கமாக இருந்தார். டெல்லி பாஜகவின் சப்போர்ட் எனக்கு இருக்கிறது. பாருங்கள் பாஜக என்னை எப்படி மதிக்கிறது என்பதை ஓ பன்னீர்செல்வம் அதிமுக தலைவர்களுக்கு உணர்த்தி இருக்கிறார். இது எடப்பாடி பழனிசாமிக்கு இடியாக மாறியுள்ளது.

இரண்டாவது பிரச்சனை
அடுத்த பிரச்சனை அதிமுக பொதுக்குழு வழக்கு தள்ளிப்போனது. நேற்று அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் வெறும் 5 நிமிடம் மட்டுமே விசாரணை நடந்தது. எடப்பாடி பழனிசாமி தரப்பு இந்த வழக்கில் எங்களுக்கு இடைக்கால நிவாரணம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. இந்த வழக்கு விசாரணை காரணமாக தேர்தல் ஆணையம் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை அங்கீகரிக்கவில்லை. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி தேர்தல் விதி மாற்றங்களை இன்னும் ஏற்றுக்கொள்ளாமல் தேர்தல் ஆணையம் உள்ளது. இந்த வழக்கிற்கும் விதி மாற்றத்திற்கும் தொடர்பு இல்லை என்று உத்தரவிட வேண்டும் என்று எடப்பாடி மனுவில் குறிப்பிட்டார்.

வாதம்
இதையடுத்து ஓ பன்னீர்செல்வம் தரப்பு வைத்த வாதத்தில், தேர்தல் ஆணையம் தொடர்பாக எடப்பாடி தொடர்ந்த இடைக்கால மனு தவறானது. இந்த மனுவை விசாரிக்க கூடாது என்று பதற்றமாக வாதம் வைத்தது. மேற்கொண்டு வாதம் எதுவும் செய்யாமல் வழக்கு 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஓ பன்னீர்செல்வம் இதில் பதற்றம் அடைய காரணம் உள்ளது. ஒருவேளை இதில் இடைக்கால நிவாரணம் எடப்பாடிக்கு வழங்கப்பட்டு, அதன்பின் அதிமுக பொதுக்குழுவில் நடந்த மாற்றங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டால், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் மூலம் அங்கீகரிக்கப்படுவார்.

தள்ளிப்போனது
வழக்கு முடியும் வரை அவர் இடைக்கால பொதுச்செயலாளராக அதிகாரபூர்வமாக இருக்க வாய்ப்பு உள்ளது. இப்போது சட்டப்படி எடப்பாடி இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே. எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுவிட கூடாது.. தேர்தல் ஆணையம் கட்சி விதிகள் மாற்றப்பட்டதை ஏற்றுக்கொள்ள கூடாது என்பதால்தான் இன்று ஓ பன்னீர்செல்வம் இடைக்கால நிவாரணம் கொடுக்க கூடாது என்று வாதம் வைத்துள்ளார். இதில் எடப்பாடி என்ன நடக்க கூடாது என்று நினைத்தாரோ அதுதான் நேற்று நடந்தது . நேற்றும் வழக்கு தள்ளிப்போக கூடாது என்று நினைத்தார். ஆனால் அலுவல் நேரம் முடிந்ததை சுட்டிக்காட்டி வழக்கு 15ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. ஒரே நேரத்தில் இரண்டு அடுத்தடுத்த சம்பவங்கள் எடப்பாடி தரப்பிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications