மகாவிஷ்ணு சர்ச்சை பேச்சு விவகாரம்.. 2 தலைமை ஆசிரியர்களும் மீண்டும் சென்னைக்கே இடமாற்றம்!
சென்னை: சென்னையில் உள்ள அரசுப் பள்ளிகளில் மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணு சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட 2 தலைமை ஆசிரியர்கள் மீண்டும் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் சைதாப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில், பரம்பொருள் பவுண்டேஷன் அறக்கட்டளையைச் சேர்ந்த மகாவிஷ்ணு சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மகாவிஷ்ணு, மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம் பூதாகரமாக வெடித்தது. மகாவிஷ்ணுவின் பேச்சுக்கு பல்வேறு மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் மற்றும் அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் அமைப்புகள் சார்பில் மகாவிஷ்ணு மீது புகார் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்த தமிழரசி, திருவள்ளூர் மாவட்டம் பென்னலூர் பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார். அதேபோன்று சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரம், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவுகள் கடந்த 6ம் தேதி பிறப்பிக்கப்பட்டன.
தலைமை ஆசிரியர்கள் பணியிட மாற்றத்துக்கு ஆசிரியர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டு தலைமையாசிரியர்களும் புதிய பணியிடங்களில் சேராமல் மீண்டும் சென்னைக்கு மாறுதல் பெற தீவிர முயற்சி எடுத்தனர்.
இந்த நிலையில், டிரான்ஸ்பர் செய்யப்பட்ட இரண்டு தலைமை ஆசிரியர்களின் பணியிட மாறுதல் உத்தரவையும் ரத்து செய்து, மீண்டும் சென்னைக்கு பணியிட மாறுதல் வழங்கி பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியையாக இருந்த தமிழரசி, விருகம்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியையாக நியமிக்கப்பட்டுள்ளார். விருகம்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை வாசுகி , அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக, அடையார் ஊரூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வரும் டேவிட் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய சண்முகசுந்தரம், அடையார் ஊரூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications