"சொல்ல மாட்டேன்.. விடவும் மாட்டேன்".. கோபப்பட்ட ஸ்டாலின்.. 4 தலைவர்களாமே.. யாரு சசிகலாவா? ட்விஸ்ட்
சட்டசபை கூட்டத்தில் அதிமுக புகார்கள் குறித்து நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் ஸ்டாலின்
சென்னை: தமிழக சட்டமன்றம் 17-ந்தேதி கூடவுள்ள நிலையில், திமுக அரசு என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளும், யாரை கட்டம் கட்ட போகிறது என்ற எதிர்பார்ப்புகள் கூடி வருகிறது.. இதுகுறித்து சில தகவல்களும் கசிந்து வருகின்றன.
உட்கட்சி பிரச்சனைகளே ஓராயிரம் சூழ்ந்திருக்கும் சூழலில், கட்சிக்கு வெளியே ஏகப்பட்ட விஷயத்தில் சிக்கி கொண்டுள்ளது அஇஅதிமுக.
அதிலும் எடப்பாடி & டீமுக்கு தலைக்கு மேல் ஏகப்பட்ட கத்திகள் தொங்கி கொண்டிருக்கின்றன.. ஒருபக்கம் ஜெ.மரண வழக்கு விசாரணை அறிக்கை, இன்னொரு பக்கம் தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை அறிக்கை, இதற்கு நடுவில் ஊழல் வழக்குகள், ரெய்டுகள், புகார்கள் என நாலாபக்கமும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளது.
4800 கோடி.. டீல் ஓகே?.. எடப்பாடியை தாங்குகிறதா திமுக + ஓபிஎஸ்ஸை அணைக்கிறதா? 17ம்தேதி கச்சேரி இருக்கு
கமிஷன் + கமிஷன்
இவைகள் தொடர்பாக திமுக அரசு என்ன செய்ய போகிறது என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.. இப்படிப்பட்ட சூழலில், தமிழக சட்டமன்றம் 17-ந்தேதி கூடுகிறது. இறந்து போன முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து அன்றைய கூட்டம் முடிந்து விடும். இதனையடுத்து, இந்த கூட்டத்தை 3 நாட்கள் மட்டுமே நடத்த ஆளும் கட்சி ஆலோசிப்பதாக பேரவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டத்தில் ஆன் லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் சட்டமசோதாவை தவிர, ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை கமிஷன், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் விசாரணை கமிஷன் ஆகிய அறிக்கைகள் தாக்கல் செய்யப்படுகின்றன.
பயங்கர டென்ஷன்
இந்த அறிக்கைகள் மீது சட்டவல்லுநர்களின் கருத்துக்களைப் பெற்று அந்த கருத்துக்களுடன் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. அதனால சட்ட வல்லுநர்கள் என்ன கருத்து சொல்லியிருக்கிறார்கள்? என்பதை அறிந்து கொள்ள, ஆணைய அறிக்கைகளில் குற்றம் சட்டப்பட்டிருக்கும் அதிகாரிகளிடையே ஒருவித பதட்டம் இருந்து வருகிறதாம். இது ஒருபுறமிருக்க, அருணா ஜெகதீசன் ஆணையம், துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு காரணமான போலீஸ் அதிகாரிகள் பலரையும் குற்றவாளியாக சுட்டிக்காட்டி அவர்களை தண்டிக்க வேண்டும் என பரிந்துரைத்திருக்கிறது.
விஜயபாஸ்கர்
அதேபோல, ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கையில், சசிகலா, டாக்டர் சிவகுமார், விஜயபாஸ்கர், ராம்மோகன்ராவ் ஆகிய நால்வர் மீது சில குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம், அந்த அறிக்கையில் முக்கிய அதிகாரிகளின் பெயர்கள் விடுபட்டுள்ளதாக, குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்கள் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். பொதுவாக, ஆணையத்தின் பரிந்துரைகளை அரசு ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம். இதனை யாரும் கேள்விக் கேட்க முடியாது. அந்த வகையில், ஆணையத்தின் அறிக்கையையும் சட்ட வல்லுநர்களின் கருத்தையும் ஏற்று சசிகலா, அவரது உறவினர் டாக்டர் சிவக்குமார் ஆகியோரை தண்டிக்வோ அல்லது ஜெயலலிதா மரணத்துக்கு இவர்கள் தான் காரணம் என சொல்லவோ திமுக அரசு சொல்வதற்கு முன் வருமா? என சந்தேகம் கொள்கிறார்கள் அதிமுகவினர்.
பெருந்தலை
காரணம், சசிகலா முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர். சசிகலாவை திமுக அரசு தண்டித்தால், முக்குலத்தோர் சமூகம் திமுக அரசு மீதும் முதல்வர் ஸ்டாலின் மீதும் தீராத பகையை ஏற்படுத்திக் கொள்ளும். அதனால் அந்த சூழலை உருவாக்க திமுக அரசு விரும்பாது. ஆக, சசிகலா தண்டிக்கப்பட மாட்டார் என்றே அதிமுக பெருந்தலைகளின் விவாதமாக இருக்கிறது. சசிகலா தண்டிக்கப்பட மாட்டார் என்ற நிலையில் விஜயபாஸ்கரும், ராம்மோகன் ராவும் தண்டிக்கப்பட மாட்டார்கள். ஒருவேளை சசிகலா, சிவக்குமாரை தவிர்த்து, விஜயபாஸ்கருக்கும் ராம்மோகன்ராவுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டால், அதுவும் சர்ச்சையாகும்.
நடுநடுங்கும் கூடாரம்
பொதுவெளியில் அவர்கள் பேட்டியளிக்கக் கூடும். அப்போது அரசுக்கு எதிராகவும் ஆணையத்துக்கும் எதிராகவும் அவர்கள் குற்றம்சாட்ட வாய்ப்புகள் இருக்கிறது. அந்த குற்றச்சாட்டுகள், அரசு மற்றும் ஆணையத்தின் நேர்மையின் மீது கேள்விகளை முன்வைக்கும் என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில். இத்தகைய சர்ச்சைகளை எல்லாம் தவிர்க்கும் வகையில், ஆணையத்தின் அறிக்கையை தாக்கல் செய்து விட்டு, அதன் மீது பேரவையில் விவாதம் நடத்தி பிரச்சனையை முடித்து விடலாம் என்றும் ஆளும் கட்சி யோசிப்பதாகவும் சொல்லப்படுகிறது.
சர்ச்சைகள்
ஆறுமுகச்சாமி ஆணைய அறிக்கையின் மீது இப்படி ஒரு நிலைப்பாட்டை அரசு எடுக்கும் பட்சத்தில் அதே அளவுகோல் தான் அருணா ஜெகதீசன் ஆணைய பரிந்துரைகள் மீது எடுக்க வேண்டிதிருக்கும். இதை தவிர்த்து இரண்டு ஆணையத்தின் பரிந்துரைகள் மீது இரு வேறு ஆக்ஷன்களை திமுக அரசு எடுத்தால் அது மேலும் சில சர்சைகளை உருவாக்கக் கூடும் என்கிறார்களாம் வழக்கறிஞர்கள்... அந்தவகையில், நடக்க போகும் சட்டசபை கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை கிளறிவிட்டு வருகிறது.
செம்ம சஸ்பென்ஸ்
இதனிடையே, கடந்த மாதம் கோவையில் பொங்கலூர் பழனிச்சாமியின் இல்லத் திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசிய பேச்சையும் இங்கு நாம் நினைவுகூர வேண்டி உள்ளது.. "முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் மிகவும் சஸ்பென்ஸ் ஆகவே இருப்பதாக நாம் சொல்லவில்லை, அவரது கட்சியினரே சொல்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு, அந்த அறிக்கையை என்னிடத்தில் ஆறுமுகசாமி கொடுத்தார்... அந்த அறிக்கையில் பல பிரச்சினைகள் இருக்கிறது. அதை நான் இப்போது சொல்ல மாட்டேன்... சட்டமன்றத்தில் நாங்கள் வெளிப்படையாக வைக்கிறோம்..
ம்ஹூம்.. விடமாட்டேன்
எங்களுக்குள் வைத்து நாங்கள் முடிவு எடுக்கப் போவதில்லை. சட்டமன்றத்தில் அறிவித்து வெளிப்படையாக வைத்து அதற்கு உரிய நடவடிக்கையை சட்டமன்றத்தின் மூலமாகவே நிறைவேற்றி காட்டுவோம். அடுத்து தூத்துக்குடி சம்பவம்... இந்த சம்பவம் குறித்து கேட்டபோது அப்படியா என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி. அதன் பிறகு டிவி பார்த்து தெரிந்துகொண்டேன் என்று கூறியவர். அந்த அறிக்கையும் தற்போது என்னிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் சட்டமன்றத்தில் வைக்கப்படும்" என்று பேசினார் ஸ்டாலின்...
கண்துடைப்பு?
இவ்வளவும் முதல்வர் ஆவேசத்துடன் கூறியிருந்த நிலையில்தான், அடுத்து என்ன நடக்க போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.. ஏற்கனவே, அதிமுக மாஜிக்களிடம் நடத்தப்பட்டு வரும் ரெய்டுகள் அனைத்தும் வெறும் கண்துடைப்புதான், திமுக வாக்குறுதியை மறந்துவிட்டது என்று பரவலாக கருத்துக்கள் வெடித்து வரும் நிலையில், ஆறுமுகசாமி + அருணா ஜெகதீசன் இருவரும் தாக்கல் செய்த அறிக்கை மீதான நடவடிக்கை எப்படி இருக்க போகிறது என்பதை, நடக்க போகும் சட்டசபை கூட்டத்தில் ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கிறது இந்த தமிழகம்..!!