2 லட்சம் பேர் டார்கெட்; செப்டம்பரில் மாநாடு? விஜய் வீசும் வலை! சிக்கப் போவது யார்?
சென்னை: வரும் செப்டம்பர் மாதம் விஜய் தனது கட்சியின் மாநாட்டை நடத்த உள்ளதாக தகவல் கசிந்து வரும் வேளையில், அவரது வருகை என்ன மாதிரியான மாற்றங்களை 2026 இல் சட்டசபைத் தேர்தலில் உருவாக்கும் என்பது பற்றிப் பல ஊகங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை வரும் செப்டம்பர் மாதம் நடத்த இருப்பதாக தகவல்கள் கசிந்துவருகின்றன. இதில் கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே, 2026 சட்டசபைத் தேர்தல் களம் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும். குறிப்பாக சில சின்ன கட்சிகள் காணாமல் போகலாம். விஜயகாந்த் இருந்த போது தேமுதிகவுக்கு இருந்த செல்வாக்கு படிப்படியாகக் குறைந்து வருகிறது. அதிமுகவுக்கும் அதே நிலைதான். எடப்பாடி பழனிசாமி தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகிறார்.

விஜய்யின் அரசியல் என்ட்ரி நேரடியாக அல்லது மறைமுகமாக அதிமுக, தேமுதிக, மதிமுக, பாமக போன்ற சில கட்சிகளைப் பாதிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் உதயநிதிதான் 2026இல் திமுக சார்பில் முன்னிறுத்தப்பட இருக்கிறார். அப்போது விஜய், உதயநிதி, அண்ணாமலை, சீமான் என ஒரு மோதல் உருவாகும். இப்படியான சூழலில் விஜய்யின் மாநாடு எந்த வகையில் பிற கட்சிகளுக்கு மாற்றாக இருக்கும் என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் சில கருத்துகளை முன்வைத்துள்ளார். அவர் ஒரு யூடியூப் தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில், "விஜய்யைப் பொறுத்தவரைத் தனது கட்சியை தொடங்குவதற்காக அனுமதி கேட்டுத் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பத்தைத்தான் கொடுத்துள்ளார். அது குறித்து எந்த அனுமதியையும் ஆணையம் இதுவரை வழங்கவில்லை.
இந்தியாவில் அரசியல் கட்சிகள் முறையாகப் பதிவுபெற வேண்டும் என்ற சட்டம் 1989இல் தான் நடைமுறைக்கும் வந்தது. அதன்படி சில விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. கட்சியின் தலைவர், செயலாளர், செயற்குழு, பொதுக்குழு நிர்வாகிகள் எனக் கட்டமைப்பு பற்றிய விரிவான தகவல்களை ஆணையத்திடம் அளிக்க வேண்டும். பிறகு சில விளக்கங்களைக் கேட்பார்கள்.
முதற்கட்ட நடைமுறை விதிகள் முடிந்த பிறகு 3 பெயர்களைக் கொடுப்பார்கள். அதில் ஒன்றைத்தான் தேர்வு செய்ய முடியும். அந்தப் பெயரை ஆணையம் அனுமதி அளித்தவுடன் ஒரு நோட்டீஸ் தரவேண்டும். பிறகு பதிவு எண் போட்டு கட்சிக்கு ஆணையம் அனுமதி அளிக்கும். அப்படிப் பார்த்தால் ஆகஸ்டில் விஜய் தனது கட்சிக்குப் பதிவு கிடைத்தால்தான், செப்டம்பரில் மாநாடு நடத்த முடியும்.
அப்படிப் பார்த்தால் விஜய்க்கு ஆகஸ்ட் முதல் வாரத்திற்குள் அனுமதி வழங்கப்படும் என்றே தெரிகிறது. செப்டம்பர் மாநாடு என்பது சரியான கால அவகாசம்தான். செப்டம்பரில் முன்கூட்டியே மழை வந்தால் மாநாடு பதிக்கப்படும். ஆகவேதான் 2 லட்சம் பேர் கூடக் கூடிய நல்ல ஒரு இடத்தை தேர்வு செய்வதற்காக புஸ்ஸி ஆனந்த் பயணம் மேற்கொண்டு இருக்கிறார் என சில நிர்வாகிகள் சொல்கிறார்கள். இன்னும் 2 வாரங்களில் மாநாடு எந்த ஊரில் நடக்க உள்ளது என்பதற்கான அறிவிப்பு கிடைத்துவிடும் என்றே தெரிகிறது.
அவரது படம் ஒன்று வெளியாக உள்ளது. அந்தப் படம் விஜய்யின் கடைசி படமாக இருக்கும் என்று அவரே சொல்லி இருக்கிறார். அந்தவகையில் அப்படம் அரசியல் வட்டாரத்தில் சில சலசலப்புகளை உண்டாக்கலாம். 1972இல் அதிமுக தொடங்கப்பட்ட பிறகுதான் 'உலகம் சுற்றும் வாலிபன்' வெளியானது. இது வெளியான ஓரிரு வாரங்களில் திண்டுக்கல் தேர்தல் வந்தது.
மதுரையில் படம் ரிலீசான போது திமுக பெரிய இடைஞ்சலைக் கொடுத்தது. சுவரில் ஒரு போஸ்டரை ஒட்ட ஒரு ரூபாய் விதி விதித்தது திமுக அரசு. விநியோகிஸ்தர்களுக்கு மறைமுகமாக அழுத்தம் தரப்பட்டது. படப்பெட்டியைக் கொண்டு போகவிடாமல் திமுகவினர் தகராறு செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. மதுரை மேயர் முத்து படம் ரிலீஸ் ஆனால், தான் புடவைக் கட்டிக் கொள்வதாகச் சவால் விடுத்தார்.
இதைப்போன்று விஜய்யின் கடைசி படத்திற்கும் சில நெருக்கடிகள் கொடுக்கப்படலாம். படம் ஹிட் ஆனால், அரசியலிலும் வெற்றி பெற்றுவிடுவார் என்ற அச்சம் ஆளும் கட்சி உட்படப் பலருக்கும் உருவாகலாம். இதற்கு முன்பே அவரது படங்களுக்கு இடையூறுகள் கொடுக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வரும்போது 'நடிகர் நாடாள முடியுமா?' என்று திமுக ஒரு கோஷத்தை முன்வைத்தது.
அரசியலுக்கு வந்த பிறகும் கூட அவர் நடித்துக் கொண்டிருந்தார். பிரதமர் மொரார்ஜி தேசாய்க்கு நடிக்க அனுமதி வழங்கும்படி கேட்டு கடிதம் எழுதினார் எம்.ஜி.ஆர். விஜய் அப்படியல்ல. அவர் நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டுத்தான் அரசியலுக்கு வருகிறார். ஆகவே எம்.ஜி.ஆரைவிட விஜய் அச்சுறுத்தும் சக்தியாக வருவார் எனப் பெரிய கட்சிகள் அச்சப்படலாம்.
ஆகவே, தனித்து நின்று விஜய்யால் மாநாடு நடத்த முடியாது. அவருக்குப் பொருளாதார உதவிகளை செய்வதற்குமுன் சில கட்சியிலிருந்து மறைமுகமாக உதவ முன்வருவார்கள். அப்படிப் பார்த்தால் 2026இல் உதயநிதி மற்றும் விஜய்க்கும்தான் போட்டி. திமுக சக்தியான அரசியல் கட்சி. ஆகவே உதயநிதிக்கு ஒரு செல்வாக்கு இருக்கும். விஜய்க்கு அப்படியல்ல. அவர் இனிமேல்தான் அந்த அரசியல் சக்தியை ஊர் ஊருக்கு உருவாக்க வேண்டும்.
விஜய் பின்னால், அதிமுக பெரும்புள்ளிகள் தங்களின் வாரிசுகள் மூலம் ஒரு பதவியைப் பெற முயற்சி செய்வார்கள். அதைப்போல பாஜக தலைவர்களும் தங்களின் வாரிசை விஜய்க்குப் பின்னால் நுழைப்பார்கள். அதற்காகப் பணத்தையும் செலவு செய்வார்கள். விஜய் கட்சிக்காக தனது சொந்த நிதியைச் செலவழிக்க மாட்டார். அப்போது இந்தத் துணை அவருக்குத் தேவைப்படும்" என்கிறார்












Click it and Unblock the Notifications