இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதி.. “சீட்டை விடுங்க.. நாடு முக்கியம்”.. முத்தரசன் பேட்டி!
சென்னை: திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பது பின்னர் முடிவு செய்யப்பட உள்ளதாக சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்காக திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது. இன்றைய பேச்சுவார்த்தையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கலந்துகொண்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன், டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவினர் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இன்று 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுப்பராயன் எம்.பி., முன்னாள் எம்எல்ஏ பழனிசாமி, சிபிஐ மாநில துணை செயலாளர் மு.வீரபாண்டியன் ஆகியார் கொண்ட குழு, திமுகவின் டிஆர்ப் பாலு தலைமையிலான தொகுதி பங்கீடு குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதி உடன்பாடு எட்டப்பட்டது.
இதைத்தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின் உடன், தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தத்தில் சிபிஐ கட்சியினர் கையெழுத்திட்டனர். திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பது அனைத்து கட்சிகளுக்கும் சீட் பகிர்வு பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் முடிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முத்தரசன் பேட்டி: அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், "2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தல் என்பது மிக மிக முக்கியமான தேர்தல். வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் நாட்டு மக்கள் ஜனநாயகத்தை காப்பாற்ற, அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பாற்ற, மதச்சார்பின்மை கொள்கையைக் காப்பாற்ற ஒன்று பட்டு போராட வேண்டிய அவசியமும் தேவையும் எழுந்திருக்கிறது.
இன்று மத்தியில் அமைந்திருக்கிற ஆட்சி சர்வாதிகார ஆட்சி. இந்த நாட்டை பாசிச பாதையில் கொண்டு செல்வதற்கான வேலைகளில் பாஜக இறங்கியுள்ளது. இதனை தடுத்து நிறுத்தி மதச்சார்பின்மையை காப்பாற்ற வேண்டும், அரசியல் அமைப்புச் சட்டத்தால் நிறுவப்பட்டுள்ள அமைப்புகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி செயல்பட்டு வருகிறது.
சிபிஐ கட்சிக்கு 2 சீட்: வரும் லோக்சபா தேர்தலுக்காக திமுக - சிபிஐ இடையே இன்று மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எண்ணிக்கை மட்டும் இன்று முடிவு செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகள் என்பது பின்னர் பேசி முடிவு செய்யப்படும்.
யாருக்கு எத்தனை இடங்கள், எந்தெந்த இடங்கள் என்பதைக் காட்டிலும் நாடு முக்கியம் என்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உணர்ந்துள்ளது. அதன் அடிப்படையில் தொகுதி பங்கீடு உடன்படிக்கையில் திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் உடன் நாங்கள் கையெழுத்திட்டுள்ளோம். " எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த முறை போலவே: கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகப்பட்டினம் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்த 2 தொகுதிகளிலும் சிபிஐ கட்சிக்கு வெற்றி கிடைத்தது. இந்த முறை கூடுதல் தொகுதிகளை கேட்டு வந்த நிலையில் தற்போதும் 2 சீட்கள் ஒதுக்கபட்டுள்ளன. கடந்த முறை போட்டியிட்ட அதே 2 தொகுதிகளில் மீண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications