அழுகையும், சிரிப்பும்.. இதுதான் வித்தியாசம்.. தனித்து நிற்கும் தமிழ்நாடு.. மனசை உலுக்கிய 2 படங்கள்!
சென்னை: ஆயிரம் வார்த்தைகள் கடத்த முடியாத உணர்வை, ஒரு புகைப்படம் கடத்தி விடும் என்பது ஊடகத் துறையில் அடிக்கடி பேசப்படும் வார்த்தை.
கழுகு குழந்தையை பார்க்கும் புகைப்படம் இதற்கு சம காலத்தின் மிகப்பெரிய உதாரணம்.
இணையதள சேவையை முடக்குவது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது.. ஜி 7 நாடுகள், இந்தியா வெளியிட்ட கூட்டறிக்கை
கழுகு ஒன்று கொடூரப் பசியுடன் தரையில் அமர்ந்திருக்கிறது. அதற்கு முன்னால் எலும்பும் தோலுமாக கிடக்கும் ஒரு சிறுமி. எப்போது வேண்டுமானாலும் அந்த சிறுமி இறந்ததும், தனது இரைக்காக அந்த சிறுமியை கழுகு தூக்கிச் செல்லலாம் நிலை. அந்த தருணத்தை புகைப்படமாக எடுத்தார், கெவின் கார்ட்டரால். இந்த படம் வெளியான பிறகுதான், போரினால் பாதிக்கப்பட்ட சூடானின் உண்மை நிலை உலகின் பல பகுதிகளுக்கும் சென்று சேர்ந்தது.
பண மதிப்பிழப்பு
இப்படித்தான், 2016ம் ஆண்டு, நவம்பர் 8ம் தேதி, பிரதமர் மோடி பண மதிப்பிழப்பு அறிவித்த பிறகு நடந்த மாபெரும் மனித துயரங்களை ஒற்றைப் புகைப்படம் காட்சிப்படுத்தியது. தங்களது பணமே தங்களுக்கு இல்லை என்று அறிவித்துவிட்டார்களே என மக்கள் குழம்பிப் போன காலகட்டம் அது. வங்கிகளின் வாசலில் மக்கள் அன்னம், தண்ணீர் இல்லாமல் காத்துக் கிடந்தனர்.
வங்கி வாசலில் அழுத முதியவர்
இதேபோலத்தான், ஒரு முதியவர் குர்கான் பகுதியிலுள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கிளை வாசலில் தவம் இருந்தார். அவசர தேவைக்கு சற்று அந்த பக்கமாக போக வேண்டிய நிலை. போய் விட்டு வந்து பார்த்தால், அவரது இடத்தில் வேறு நபர்கள். ஒவ்வொருவருக்கும் தங்கள் பணம் கிடைக்குமா என்ற பரிதவிப்பு. பதறிவிட்டார் முதியவர். தனது வயதையும் மறந்து அழுதுவிட்டார். அந்த நேரம் அங்கே நின்று கொண்டிருந்த ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் புகைப்படக்காரர் இந்த புகைப்படத்தை கிளிக் செய்து வெளியிட.. இந்த நாட்டையே உலுக்கியது அந்த படம்.
ஏழைகள் அழுகிறார்களே
பணக்காரர்கள்தான் தங்கள் கருப்பு பணம் போய்விடும் என அழுவார்கள், பதறுவார்கள், மற்றவர்களுக்கு பாதிப்பு இல்லை என்றாரே பிரதமர் மோடி. ஆனால் யதார்த்தத்தில் பணக்காரர்கள் மகிழ்ச்சியாக பணத்தை மாற்றிவிட்டார்கள். ஏழைகள்தானே இந்த முதியவர் போல அழுதனர் என்று கேட்டனர் மக்கள்.
பொக்கை வாய் சிரிப்பு
இது ஒரு பக்கம். இன்னொரு பக்கம், தமிழக அரசு கொரோனா நிவாரணமாக 2வது தவணையாக வழங்கிய ரூ.2000 பணத்தை கையில் வைத்துக் கொண்டு, பொக்கை வாய் தெரிய சிரித்த பாட்டி ஒருவரின் புகைப்படம் நேற்று முதல் வைரலாகியுள்ளது. ஒரு பக்கம், தனது பணத்தையே தன்னால் எடுக்க முடியாமல் அழுத முதியவர். இன்னொரு பக்கம், அரசே கூப்பிட்டு பணத்தை கையில் கொடுத்ததால் சிரிக்கும் மூதாட்டி.
இரு படங்களின் வித்தியாசம்
இந்த இரு படங்களின் வேற்றுமைதான், நமக்கான ஆட்சி யாருடையது என்பதற்கான வித்தியாசம் என்று கூறி இரு படங்களையும் இணைத்து சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகிறார்கள், நெட்டிசன்கள். திமுக ஆட்சி என்று கிடையாது. அதிமுக ஆட்சியிலும், மக்களுக்கு இப்படியான உதவித் தொகைகள் தரப்பட்டன. எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் கூட அள்ளி வழங்கப்பட்டது. அந்த வகையில், அண்ணா வழியில் வந்த இரு திராவிட கட்சிகளும், அவர் சொன்னதை போல, ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்கின்றன.
நிதி தரும் உள்ளம்
ஒரு பக்கம் பணத்தை தந்து விட்டு, மறுபக்கம், டாஸ்மாக் திறந்து விட்டார்களே, அது நியாயமா என்று கேள்வி எழலாம். ஆனால் அதுதான் யதார்த்தம். டாஸ்மாக் இல்லாத மாநிலங்களிலும், மதுபானக் கடைகள் திறந்துதான் இருக்கின்றன. அங்கும் குடிகாரர்கள் குடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் தமிழகம் போல நிவாரணத்திற்கு ரூ.4000 கையில் வைத்து தரவில்லை எந்த அரசும். இங்குதான் விஞ்சி நிற்கிறது தமிழகத்தின் தாயுள்ளம்.