‛‛தேசப்பற்று’’ .. வீரமரணமடைந்த கணவர்கள்.. ராணுவத்தில் இணைந்த 2 பெண்கள்.. சென்னையில் நடந்த நெகிழ்ச்சி
சென்னை: ராணுவத்தில் வீரமரணமடைந்த 2 பேரின் மனைவிகள் நாட்டுக்கு சேவையாற்றும் வகையில் ராணுவ பணியில் இணைந்துள்ளனர். சென்னையில் பயிற்சி முடித்த இவர்கள் தங்களின் கணவர்களின் பாணியில் ராணுவத்தில் சேவையாற்ற புறப்பட்டுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் உள்ள ஓடிஏ எனும் ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமி உள்ளது. இங்கு ராணுவ பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இங்கு ஆண்டுதோறும் இந்தியா, வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் பயிற்சி முடித்து ராணுவ சேவையில் தங்களை இணைத்து கொண்டு வருகின்றனர்.

பயிற்சி முடித்த 186 பேர்
அந்த வகையில் இந்தியாவை சேர்ந்த 186 பேர் சென்னையில் உள்ள அதிகாரிகள் பயிற்சி முகாமில் பயிற்சியை முடித்தனர். இதில் 151 பேர் ஆண்கள். 35 பேர் பெண்கள் ஆவார்கள். இந்நிலையில் பயிற்சி நிறைவு விழா நடந்தது. இதில் ராணுவ பயிற்சியை முடித்த 186 பேரும் அணிவகுப்பு நடத்தினர்.

கணவரை இழந்த பெண்
இந்த பயிற்சியை முடித்தவர்களில் பஞ்சாப்பை சேர்ந்த 28 வயது நிரம்பிய ஹர்வீன் கவுர் கக்லோன் என்பவரும் ஒருவர். இவரது கணவர் பெயர் கக்லோன். இவர் ராணுவத்தில் மேஜராக பணியாற்றினார். கடந்த 2019ல் ராணுவ பணியின்போது கக்லோன் வீரமரணமடைந்தார். இந்த வேளையில் ஆசிரியராக ஹர்வீன் கவுர் கக்லோன் இருந்தார். மேலும் 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த வேளையில் கணவர் கக்லோன் வீரமரணமடைந்தார். இந்நிலையில் தான் தனது கணவரின் ராணுவ பணியை தொடர ஹர்வீன் கவுர் கக்லோன் முடிவு செய்தார்.

பயிற்சியை முடித்த ஹர்வீன் கவுர்
இதையடுத்து அவர் ராணுவ பயிற்சியில் சேர்ந்தார். கடந்த 11 மாதங்களாக தீவிர பயிற்சி செய்தார். சென்னையில் உள்ள அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் நேற்று பயிற்சியை நிறைவு செய்தார். கணவர் கக்லோன் வீரமரணமடைந்த வேளையில் ஹர்வீன் கவுர் கக்லோன் கர்ப்பிணியாக இருந்த நிலையில் தற்போது அவருக்கு மகன் உள்ளார். அன்ஹத்பிர் சிங் என மகனுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. நேற்று பயிற்சியை முடித்த ஹர்வீன் கவுர் கக்லோன், தனது மகனை தூக்கி கொஞ்சிய காட்சி இணையதளங்களில் வேகமாக பரவி பாராட்டுகளையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

ராணுவ உணர்வு
இதுபற்றி ஹர்வீன் கவுர் கக்லோன் கூறுகையில், "நான் என்னை நினைத்து பெருமை அடைகிறேன். எனது கணவர் எங்கிருந்தாலும், என்னை நினைத்து பெருமை அடைவார். ராணுவ உடையை அணிந்தால் தேசபக்தி தான் முன்னிலையில் உள்ளது. தாய்மை பண்பு கூட அதற்கு அடுத்ததாக தான் எண்ணுகிறேன். என் கணவர் வீரமரணமடைந்தபோது நான் 5 மாத கர்ப்பிணியாக இருந்தேன். மகன் அவனது தந்தையை பார்த்தது இல்லை. இருப்பினும் அவனது உடலில் ராணுவ உணர்வு உள்ளது. மகனை பிரிந்து பயிற்சி பெற்றபோது வருத்தமாக இருந்தது. இருப்பினும் நாட்டுக்கு சேவையாற்றுவதை நினைத்து பெருமைப்படுகிறேன்'' என்றார்.

லடாக் பெண்
இதேபோல் இந்திய ராணுவத்தில் லடாக்கின் ஸ்கவுட் 3வது பட்டாலியன் பிரிவில் ரிக்ஜின் கான்தப் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் பணியின்போது மாரடைப்பால் வீரமரணமடைந்தார். இவருக்கு ரிக்ஜின் கோரோல் என்ற மனைவியும், 4 மாத மகனும் இருந்தனர். இவர்கள் லடாக்கில் வசித்து வருகின்றனர்.

பெருமையாக இருக்கிறது
இதையடுத்து ரிக்ஜின் கோரலும் தனது கணவரின் ராணுவ சேவையை தொடர முடிவு செய்தார். நாட்டுக்கு சேவையாற்றும் நோக்கத்தில் அவரும் இந்திய ராணுவத்தில் சேர்ந்த நிலையில் சென்னை அதிகாரிகள் பயிற்சி முகாமில் பயிற்சியை முடித்தார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛கணவரை தொடர்ந்து ராணுவத்தில் பணிக்கு சேர்வது பெருமையாக உள்ளது. கணவர் விட்டு சென்ற நாட்டுக்கான சேவையை நான் செய்வதன் மூலம் மகிழ்ச்சியடைகிறேன்'' என்றார்.

வெளிநாட்டினருக்கும் பயிற்சி நிறைவு
சென்னையில் நடந்த பயிற்சி முகாமில் அண்டை நாடுகளை சேர்ந்தவர்களும் பயிற்சியை முடித்தனர். அதன்படி பூடான், மாலத்தீவு, நைஜீரியா நாட்டை சேர்ந்த 36 வெளிநாட்டு வீரர்களும் ராணுவ பயிற்சியை நிறைவுசெய்தனர் என்பது குறிப்பிடத்தது.












Click it and Unblock the Notifications