20% இடஒதுக்கீடு- எடப்பாடியாரிடம் அன்புமணி வலியுறுத்தல்! வன்னியர்கள் வன்முறையாளர்கள் அல்ல என விளக்கம்
சென்னை: வன்னியருக்கு 20% இடஒதுக்கீடு வழங்க வேண்டு என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் பாமக இளைஞரணி தலைவரும் ராஜ்யசபா எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் நேரில் வலியுறுத்தினார்.
வன்னியருக்கு 20% தனி இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பது பாமக, வன்னியர் சங்க கோரிக்கை. இதனை வலியுறுத்தி இன்று முதல் டிசம்பர் 4-ந் தேதி வரை தொடர் போராட்டத்தை அறிவித்தது பாமக.
இப்போராட்டத்தை முன்னிட்டு சென்னையில் நூற்றுக்கணக்கான பாமகவினர் கைது செய்யப்பட்டனர். சென்னைக்குள் பாமகவினர் நுழைவதையும் போலீசார் தடுத்து வருகின்றனர். இதனால் பாமகவினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

மின்சார ரயில்கள் மீது கல் வீச்சு
மேலும் மின்சார ரயில்கள் மீதும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த நிலையில் 20% இடஒதுக்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துது. இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அன்புமணி ராமதாஸ் தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினார்.

பேச்சுக்கு முதல்வர் அழைப்பு
இச்சந்திப்புக்குப் பின்னர் தலைமை செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது: நாங்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி எங்களை அழைத்தார். கோரிக்கை தொடர்பாக மனு அளிக்க கூறினார்.

கோரிக்கை குறித்து விளக்கம்
இதனையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து 20% இடஒதுக்கீடு கோரிக்கை குறித்து விளக்கினோம். இது எந்த ஒரு ஜாதிக்கும் சமுதாயத்துக்கும் இயக்கத்துக்கும் எதிரானது அல்ல. எங்களது 40 ஆண்டுகால கோரிக்கை.

வன்முறையாளர்களாக சித்தரிக்காதீர்
வன்னியர்கள் தமிழகத்தில் 4-ல் 1 பங்கு உள்ளனர். ஆகையால் தமிழகத்தின் வளர்ச்சி பிரச்சனையாக 20% இடஒதுக்கீடு கோரிக்கையை பார்க்க வேண்டும். மேலும் வன்னியர்களை வன்முறையாளர்கள் என்கிற தோற்றத்தை ஊடகங்கள் உருவாக்க வேண்டாம். ஏர்பிடிக்கிற எதுவும் தெரியாத சமூகம்தான். வன்னியர்கள். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறினார்.












Click it and Unblock the Notifications