தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக்குகள் மூடல் - கிராம மக்களுக்கு தடுப்பூசி போடுவதில் பாதிப்பு
மருத்துவர்கள் இடமாற்றம் காரணமாக 2000 மினி கிளினிக்குகள் மூடப்படுவதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: மருத்துவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு சிகிச்சை பணிக்கு மாற்ற திட்டமிட்டு இருப்பதால் தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிராமங்களில் மினி கிளினிக்குகளில் தடுப்பூசி போட்டவர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அம்மா மினி கிளினிக் திட்டம் தொடங்கப்பட்டது. மொத்தம் 2000 கிளினிக்குகளில் 1400 கிளினிக்குகள் கிராமப்புறங்களிலும், 200 சென்னை மாநகராட்சியிலும், 200 நகர்ப்புறங்களில் 200 நகரும் மினி கிளினிக்குகளாகவும் செயல்பட்டு வந்தன.

மினி கிளினிக்குகளில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதார பணியாளர் இருக்கின்றனர். சளி, காய்ச்சல், உடல் வலி என வருபவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு மாதந்திர மருந்துகள் வழங்கப்பட்டன.
இந்த கிளினிக்குளை காலை 9 மணி முதல் 11 மணி வரையும் மாலையில் 4 மணி முதல் 7 மணி வரையும் செயல்பட்டு வருகின்றன. கொரோனா தடுப்பூசிகளும் இந்த மினிகிளினிக்களில் போடப்பட்டு வந்தன. இந்த நிலையில் அம்மா மினி கிளினிக்கில் பணியாற்றிய மருத்துவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு சிகிச்சை பணிக்கு மாற்ற திட்டமிட்டு இருப்பதால் தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக் மூடப்படுவதாக கூறப்படுகிறது.
மினி கிளினிக்குகள் தற்காலிகமாக மூடப்பட்டாலும் துணை சுகாதார நிலையங்கள் வழக்கம்போல செயல்படும். கொரோனா தடுப்பு பணிகள் முடியும் வரை மினி கிளினிக்குகள் செயல்படாது என கூறப்படுகிறது. இந்த மினி கிளினிக்குகளில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தியவர்கள் அடுத்த டோஸ் எங்கு சென்று செலுத்த வேண்டும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications