2020 பிளாஷ்பேக்: இந்தியாவை மிரட்டிய வைரஸ், வெட்டுக்கிளி, புயல் மழை - சரியாக கணித்த பஞ்சாங்கம்
2020ஆம் ஆண்டில் மழை, புயல், வெள்ளம் பற்றி எச்சரித்த தமிழ் பஞ்சாங்கம் உயிரைக்குடிக்கும் வைரஸ் ஒன்று மக்களை பாதிக்கும் என்று எச்சரித்தது.
சென்னை: நவகிரகங்களின் சஞ்சாரத்தை வைத்து நடக்கப்போகும் நன்மை தீமைகளை முன்கூட்டியே பஞ்சாங்கத்தில் கணித்து விடுகின்றனர். மழை, வெள்ளம், புயல், நிலநடுக்கம், விபத்துக்கள் என அனைத்துமே பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டிருக்கிறது. 2020ஆம் ஆண்டில் வெட்டுக்கிளிகள் விவசாய நிலங்களை தாக்கி அழித்தது பற்றியும், கொரோனா வைரஸ் தாக்கம் பற்றியும், புயல் மழை பற்றியும் பஞ்சாங்கம் சரியாக கணித்து எச்சரித்துள்ளது. பஞ்சாங்கம் கணித்தது போல பல நிகழ்வுகள் 2020ஆம் ஆண்டில் நடந்தன.
2020ஆம் ஆண்டில் கண்ணுக்குத் தெரியாத கிருமியுடன் உலகம் போராடியது. 1 கோடி பேரை தாக்கியது கொரோனா வைரஸ். மருந்தே கண்டுபிடிக்கவில்லை என்றாலும் 95 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டனர்.
புயல், மழை, வெள்ளம், வெட்டுக்கிளி பாதிப்பு என பல பேரிடர்களால் மக்கள் பாதிப்பிற்கு ஆளாகினர். நாட்டில் ஏற்படப்போகும் பாதிப்புகளை முன்பே கணித்து சொல்லியுள்ளது பஞ்சாங்கம்.

வைரஸ் நோய் பரவும்
சார்வரி வருடத்தில் வைரஸ் காய்ச்சல் நோய் அதிகம் பரவும் மகரம் ராசியில் குரு நீச்சம் பெற்று சஞ்சரிப்பதால் பூமி கண்டத்திற்கு தோஷம் என்றும் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டிருந்தது. பஞ்சாங்கத்தில் இருந்தது போலவே 2020ஆம் ஆண்டில் வைரஸ் பிடியில்
இந்திய மக்கள் சிக்கி அவதிப்பட்டனர்.

கடைகள் மூடுவார்கள்
சார்வரி ஆண்டில் தங்கம், வெள்ளி விலை உச்சத்திற்குப் போய் திடீர் சரிவை சந்திக்கும் என்றும் எங்கும் நிலையில்லாத வியாபாரம் நடக்கும். உணவு விடுதிகளை மூடுவார்கள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதே போலவே லாக்டவுன் பிரச்சினையால் பல மாதங்கள் உணவு விடுதிகள் மூடப்பட்டன.

ராமர் கோவில்
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்திய விண்வெளி ராக்கெட் மூலம் பல புதிய சாதனை படைக்க நேரும் என்றும் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. சொன்னது போலவே பல ஆண்டுகால முயற்சிக்குப் பிறகு 2020ஆம் ஆண்டில்தான் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டு பூமி பூஜையும் நடைபெற்றது. இஸ்ரோ சார்பில் வெற்றிகரமாக ராக்கெட் மூலம் செயல்கோள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

வெட்டுகிளிகளால் சோகம்
வெட்டுக்கிளிகளால் விவசாயம் பாதிக்கப்படும், பெரும் தொழிலதிபர்கள் திடீர் ஏழைகளாவார்கள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. பஞ்சாங்கம் கணித்தது போலவே வட மாநிலங்களில் விவசாய பயிர்களை வெட்டுக்கிளிகள் சூறையாடியது. கொரோனா காலத்தில் தொழில், வியாபாரம் முடங்கி பல தொழிலதிபர்கள் ஏழைகளாக மாறினர்.

ஆறுகளில் வெள்ளம்
ஆடி மாதம் முதல் கார்த்திகை வரை நல்ல மழை பெய்யும். நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழியும். மேட்டூர், பெரியாறு, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, முக்கூடல், பவானி, பாபநாசம், அமராவதி அணைகள் நிரம்பும். தென்மாவட்ட ஆறுகளில் ஜலப்பிரவாகம் ஏற்படும். கொள்ளிடம், காவிரி, வைகை, குற்றாலம் பாலாறு, ஆரணி கமண்டலநதி, செய்யாறு, செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் அதிகரிக்கும். தண்ணீர் பிரச்சினை தீரும் என்று பஞ்சாங்கம் கணித்துள்ளது. அதே போலவே பல ஆண்டுகாலமாக வற்றியிருந்த பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது. பல மாவட்டங்களில் ஆறுகள் உயிர் பெற்றன. செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி உபரிநீர் திறக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications