இந்திய பங்குச் சந்தையை பழிவாங்கிய பட்ஜெட்! மூடப்படும் தொழில்கள்? சுந்தர் எச்சரிக்கை!
சென்னை: உலக அளவில் பங்குச் சந்தை மிகப்பெரிய வீழ்ச்சியைக் கண்டுள்ள இந்த நேரத்தில் முதலீடு செய்வது நல்லதா? இந்த வீழ்ச்சிக்கு என்ன காரணம் போன்ற கேள்விகளுக்குப் பங்குச் சந்தை நிபுணர் சுந்தர் விளக்கம் அளித்துள்ளார்
உலக அளவில் பங்குச் சந்தை தொடர்ந்து வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. ஆனால், அதே நேரம் இந்தியப் பங்குச் சந்தையில் முதலீடு அதிகரித்து வருகிறது. மற்றொரு பக்கம் நேற்று இந்தியப் பங்குச் சந்தையின் பெஞ்ச்மார்க் குறியீட்டுக்கான சென்செக்ஸ், நிஃப்டி தலா 3% சரிந்து, முதலீட்டாளர்களின் வயிற்றில் புளியைக் கரைக்க வைத்துள்ளது.

இந்நிலையில் பங்குச் சந்தைக்குள் என்ன நடக்கிறது? ஏன் இந்த வீழ்ச்சி? இந்தியப் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு இது சரியான நேரமா? எனப் பல கேள்விகளுக்குப் பங்குச் சந்தை நிபுணர் பி.ஆர். சுந்தர் விளக்கம் அளித்துள்ளார். உலக அளவிலான பங்குச் சந்தை வீழ்ச்சி பற்றிப் பேசிய அவர், "பங்குச் சந்தை வீழ்ச்சிக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, வெளிப்புறக் காரணம். இரண்டாவது உட்புற காரணம்.
வெளிப்புறக் காரணம் என்ன என்று ஆராய்ந்தால், ஜப்பானியப் பங்குச் சந்தை நேற்று பெரிய அளவில் சரிந்துள்ளது. இந்த வீழ்ச்சி என்பது கிட்டத்தட்ட 13% ஏற்பட்டுள்ளது. இது கடந்த 3 நாட்களில் மட்டும் 20% அளவுக்கு இறங்கியுள்ளது. இந்தப் பங்குச் சந்தை மார்க்கெட்டில் Yen carry trade என்று ஒன்று உள்ளது. ஒரு நாட்டில் வட்டி விகிதம் மிகக் குறைவாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போது பல நாட்டு வணிகர்கள் அந்த நாட்டைத் தேடிப் போய் கடன் வாங்குவார்கள்.

அந்தப் பணத்தை வைத்து வேறு நாட்டிற்குப் போய் தொழில் செய்வார்கள். அதில் கிடைக்கும் லாபத்தை வைத்து இந்தக் கடனை கட்டிவிடுவார்கள். இதில் உள்ள பெரிய ஆபத்து என்னவென்றால், ஒரு நாட்டில் பணத்தை மற்றொரு நாட்டில் மாற்றும் போது சில விதிமுறைகள் உள்ளன. ஜப்பானில் கடன் வாங்கும்போது ஒரு யென் விலை இந்திய மதிப்புக்கு 1 ரூபாய் இருக்கிறது என்று ஒரு உதாரணத்திற்கு வைத்துக் கொள்வோம். அதை இந்தியாவில் தொழில் செய்து 1 ரூபாய் 50 காசு இலாபம் கிடைக்கிறது என்றால், கடன் 1 ரூபாயை அடைத்துவிட்டு 50 காசு லாபம் அடையலாம்.
ஆனால், ஒருவேளை கடன் வாங்கிய பிறகு ஜப்பான் யென் மதிப்பு அதிகமாகிவிட்டால், இந்த 1 ரூபாய் 50 காசு கடனை அடைக்க போதாமல் ஆகிவிடும். ஏனென்றால் நாம் கடன் வாங்கும் போது ஒரு யென் விலை இந்திய மதிப்பில் 1 ரூபாய். அதன் மதிப்பு ஏறிய பிறகு இப்போது 1.50 ரூபாய். அப்படிப் பார்த்தால் நீங்கள் வாங்கிய 1 ரூபாயை அடைக்க உங்களுக்கு 1.50 ரூபாய் தேவை ஏற்பட்டுவிடும், இதனால் உங்களுக்கு லாபம் கிடைக்காமல் போய்விடும்.
ஜூலை மாதம் ஜப்பான் மத்திய வங்கி வட்டி விகிதத்தை ஏற்றியுள்ளது. இதனால் யென் மதிப்பு கூட இருக்கிறது. மதிப்பு கூடிவிட்டால் அதிக தொகை கட்ட வேண்டி வரும் என்பதால் அதற்குப் பயந்து ஜப்பானில் கடன் வாங்கிய பல நிறுவனங்கள் கடனை அடைக்க ஆரம்பித்துள்ளனர். ஒரே நேரத்தில் பல நாடுகளிலிருந்து கடன் பெற்றவர்கள் கடனை திரும்பச் செலுத்த முயலும்போது ஜப்பான் பணத்திற்குத் தேவை அதிகரிக்கும். வாங்கிய கடனை ஜப்பான் பணத்தில்தான் கட்ட முடியும்.
இந்தத் தேவை அதிகரிக்கும்போது இன்னும் ஜப்பான் பணத்தின் விலை கூடும். மற்றொரு பக்கம் ஜப்பான் நிறையப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடு. ஜப்பானில் பண மதிப்பு கூடும் போது, பொருட்களின் விலை அதிகரிக்கும். அதனால் ஜப்பான் பங்குச் சந்தை சரிய ஆரம்பிக்கும். இதுதான் இப்போது நடந்து வருகிறது.
அடுத்து அமெரிக்காவில் கடந்த 2 காலாண்டுகளாக அமெரிக்கப் பொருளாதாரம் வளர்ச்சி அடையாமல் தேக்கநிலை பெற்றுள்ளது. ஆகவே, அமெரிக்கப் பங்குச் சந்தையும் 15% இறங்கியுள்ளது. இன்னொரு பக்கம் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் சூழல் நிலவி வருகிறது. இந்த மூன்றும் சேர்ந்தால்தான் உலக அளவில் பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்துள்ளது.
ஆனால், இந்தியப் பங்குச்சந்தை இறங்கவில்லை என்றே நான் சொல்வேன். சமீபத்தில் மத்திய அரசின் பட்ஜெட் வெளியானது. அது நல்ல பட்ஜெட் இல்லை. நிறைய வட்டி விகிதத்தை ஏற்றிவிட்டார்கள். தொழில்துறைக்கான சலுகைகளைக் குறைத்துவிட்டனர். ஆகவே, இது ஒரு மோசமான பட்ஜெட் ஆகவே பார்க்கப்படுகிறது.
ஆனாலும். எல்.ஐ.சி போன்ற பொதுத்துறை நிறுவனங்களின் உதவியுடன் மத்திய அரசு பங்குச் சந்தையில் வீழ்ச்சி ஏற்படாமல் தற்காலிகமாகக் காப்பாற்றி வருகிறது. இந்தியாவில் கிட்டத்தட்ட வெளிநாட்டினர் மட்டும் 1 லட்சம் கோடி பங்குகளை விற்பனை செய்து விட்டு வெளியே சென்றுள்ளனர். இதையும் மீறி நம் பங்குச் சந்தை 30% அளவுக்கு உயர்ந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் வேலை இல்லாத திண்டாட்டம் அதிகம் உள்ளது. இன்ஃபோசிஸ் போன்ற நிறுவனங்கள் கேம்பஸ் நேர்முகத் தேர்வை 2 ஆண்டுகளாக நடத்தவே இல்லை. ஆனாலும் பங்குச் சந்தை உயர்ந்துள்ளது. சேமிப்பு இருந்தால்தான் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய முடியும். சேமிப்பு குறைந்துள்ளது. அப்படி இருந்து எப்படி பங்குச் சந்தை உயர்ந்தது என்பது கேள்வி.
அது எப்படி என்றால்? சிறு,குறு தொழில் நிறுவனங்கள் ஜிஎஸ்டி வரி உயர்வால் தொழிலை மூடி வருகின்றன. அந்த முதலீட்டைக் கொண்டு வந்து பங்குச் சந்தையில் போடுகிறார்கள். இது ஒரு ஆபத்தான ட்ரெண்ட். சேமிப்பு வழியாகப் பங்குச் சந்தைக்குள் பணம் வரவில்லை. தொழிலை மூடிவிட்டு அந்த முதலீட்டைப் போடுகிறார்கள் என்பது நல்ல விதமான அறிகுறி அல்ல" என்கிறார்.












Click it and Unblock the Notifications