2024 லோக்சபா தேர்தலுக்கு முன் முதல் டார்கெட் திமுகவின் ஆ.ராசா... ஆடுபுலி ஆட்டத்தை தொடங்கிய பாஜக!
சென்னை: திமுகவின் துணை பொதுச்செயலாளர்களில் ஒருவரும் திராவிட இயக்க சித்தாந்த ஆய்வாளருமான ஆ.ராசா எம்.பி. மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பது பரபரப்பை கிளப்பி உள்ளது.
பாஜக, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு எதிராக அதிதீவிரமாக, திராவிடர் இயக்க கொள்கை வழி நின்று வாதங்களை முன்வைக்கக் கூடியவர் ஆ.ராசா. திமுகவில் திராவிடர் இயக்க கொள்கை வழி நின்று மேடைகளில் ஆணித்தரமான வாதங்களை பேசக்கூடியவர்களில் முதன்மையானவர் ஆ.ராசா.
ஸ்பெக்ட்ரம் 2ஜி ஊழல் வழக்கில் ரூ1,75,000 கோடி ஊழல் செய்ததாக வழக்கு தொடரப்பட்டு சிறைவாசம் அனுபவித்தார். ஆனாலும் தம் மீதான வழக்குகளில் தாமே வாதாடி அந்த வழக்கே பொய்யானது என தகர்த்து விடுதலையாகி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தகத்தகாய சூரியன் என்ற போற்றப்பட்டவர் ஆ.ராசா.
ஒரே நாடு - ஒரே மொழி -ஒரே ரேஷன் கார்டு -ஒரே வரி -ஒரே தேர்தல்.. பாஜக ஆட்சி பற்றி காங்கிரஸ் விளாசல்!
வாய்ஸ் ஆப் திராவிட மாடல்
இப்போதைய திராவிட மாடலின் வாய்ஸ் ஆக ஒலித்துக் கொண்டிருக்கும் ஆ.ராசா, அண்மையில் மனுஸ்மிருதி குறித்து பேசிய பேச்சு வலதுசாரிகளால் திசைதிருப்பப்பட்டது. மனுஸ்மிருதி அல்லது மனு தர்மத்தில் சூத்திரன் என்றால் விபச்சாரி மகன் என சொல்லி இருக்கிறது என சுட்டிக்காட்டினார் ஆ.ராசா. ஆனால் தமிழ்ப் பெண்களையே ஆ.ராசா விபச்சாரிகள் என இழிவாக பேசிவிட்டார் என வலதுசாரிகள் கிளப்பிவிட்டனர். அப்போதும் கூட, என் மீது வழக்குப் போடு..வா நீதிமன்றத்துக்கு என சவால் விடுத்தார் ஆ.ராசா.
லோக்சபா தேர்தல் பிரசார பீரங்கி
இப்படி பாஜகவை, இந்துத்துவாவை மிக கடுமையாக எதிர்த்து நிற்கும் ஆ.ராசாவுக்கு பொதுதளங்களில், சமூக வலைதளங்களில் பெரும் ஆதரவும் உள்ளது. அத்துடன் ஆ.ராசாவின் இத்தகைய பேச்சுகள்தான், 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது எதிர்க்கட்சிகளுக்கு ஆயுதமாக இருக்கப் போகிறது என வட இந்திய ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டிருந்தன. 2024 லோக்சபா தேர்தலில் ஆ.ராசா, பாஜக- ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிரான பிரசார பீரங்கியாக இருப்பார் என்றே கூறப்பட்டது.
சிபிஐ திடீர் குற்றப்பத்திரிகை
இந்நிலையில்தான் வருமானத்துக்கு அதிகமாக ரூ.5.53 கோடி சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் மத்திய விசாரணை ஏஜென்சியான சிபிஐ, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. 1999-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தார் ஆ.ராசா என்பது வழக்கு. இவ்வழக்கில் மொத்தம் 16 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. மேலும் ஆ.ராசாவுக்கு சொந்தஆன பல இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர். தற்போது சிபிஐ தாக்கல் செய்திருக்கும் குற்றப்பத்திரிகையில் ஆ.ராசா உள்ளிட்ட 6 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. இது ஆ.ராசாவுக்கு கடும் நெருக்கடியாகவே பார்க்கப்படுகிறது.
டார்கெட் வரிசை
கர்நாடகாவில் பாஜகவை கடுமையாக எதிர்த்து வரும் அம்மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் டிகே சிவகுமார் மீதான வழக்குகளில் நெருக்கடி காட்டுகிறது சிபிஐ, அமலாக்கப் பிரிவு. அதேபோல் மகாராஷ்டிராவில் பாஜகவை கடுமையாக எதிர்த்த சிவசேனா எம்.பி, சஞ்சய் ராவத் ஊழல் வழக்கை முன்வைத்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். டிகே சிவகுமார், சஞ்சய் ராவத்தைப் போல ஆ.ராசாவுக்கும் பாஜக நெருக்கடி தரும் வகையில்தான் இப்போது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.