2026 தேர்தல் சர்வே.. மீண்டும் திமுக ஆட்சிதான்? 37% பேர் ஆதரவு! அப்போ அதிமுக? வெளியான கருத்து கணிப்பு
சென்னை: தமிழகத்தில் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மீது அதிருப்தி அலை நிலவினாலும், மக்களின் வளர்ச்சி மற்றும் நலனுக்காக திமுக தலைமையிலான கூட்டணி மிகவும் நம்பகமானதாக இருப்பதாக புதிய தேர்தல் கருத்து கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.
2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு 'வோட் வைப்' என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், திமுக அரசுக்கு எதிராக 41% பேர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். அதேசமயம், 31% பேர் திமுக அரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், தற்போதைய எம்.எல்.ஏ.க்களை மாற்ற 61% பேர் விரும்புவதாக தெரிவித்துள்ளனர். இதன்மூலம், பல சிட்டிங் எம்.எல்.ஏ.க்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக கூட்டணிக்கு ஆதரவு
மாநிலத்தின் வளர்ச்சிக்கு மக்கள் யாரை நம்புகிறார்கள் என்ற கேள்விக்கு, 37% பேர் திமுக கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அதேசமயம், அதிமுக- பாஜக கூட்டணி 32% வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (டி.வி.கே) கட்சி, தற்போது மூன்றாவது விருப்பமாக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த ஆய்வில், பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டு செப்டம்பர் 2024-ல் பதிவு செய்யப்பட்ட தவெக கட்சிக்கு 12% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
திமுக முன்னிலை
திமுக அரசு தற்போது முன்னிலையில் இருந்தாலும், அதிமுக- பாஜக கூட்டணிக்கும் மாநிலத்தில் ஒரு நல்ல வரவேற்பு உள்ளது. ஆய்வின்படி, சுமார் 42% பேர் இந்த கூட்டணி வெற்றிக்கூட்டணி என்று பார்க்கிறார்கள். அதேசமயம், 35% பேர் மோசமான கூட்டணியாக கருதுகின்றனர். அதிமுக- பாஜக கூட்டணி 2026 தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதை இந்த கருத்துக்கள் காட்டுகின்றன.
ஆட்சிக்கு வாய்ப்பு
மாநிலத்தின் வளர்ச்சிக்கு மக்கள் யாரை நம்புகிறார்கள்.. அடுத்த முறை ஆட்சிக்கு வந்தால் யார் மூலம் தமிழ்நாடு முன்னேறும் என்று நம்புகிறீர்கள் என்ற கேள்விக்கு, 37% பேர் திமுக கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அதேசமயம், அதிமுக- பாஜக கூட்டணி 32% வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
அதிமுக - பாஜக கூட்டணி மோதல்
அதிமுக கூட்டணியில் பாஜக இருந்தால், ஆட்சிக்கு வந்தால் பாஜகவும் ஆட்சியில் பங்கு பெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி வருகிறார். ஆனால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, அதிமுக தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கிறார். இந்த மோதல் இருந்தாலும் கூட சுமார் 42% பேர் இந்த அதிமுக - பாஜக கூட்டணி வெற்றிக்கூட்டணி என்று பார்க்கிறார்கள்.
பெண்கள் பாதுகாப்பு
பெண்களின் பாதுகாப்பு அடுத்த தேர்தலை தீர்மானிக்கும் முக்கிய பிரச்சினையாக இருக்கும் என்று 14% பேர் கருத்து தெரிவித்துள்ளனர். ஊழல் இரண்டாவது இடத்தில் உள்ளது. இது மிகப்பெரிய தேர்தல் பிரச்சினையாக இருக்கும் என்று 13% பேர் கூறியுள்ளனர்.
நீட் தேர்வு ரத்து (11%), இந்தி மொழி (7%), தமிழ்ப் பெருமை (6%) மற்றும் தொகுதி மறுசீரமைப்பு (5%) போன்ற உணர்ச்சிகரமான பிரச்சினைகளும் வாக்காளர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு மார்ச்-ஏப்ரல் மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த முறை 234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணி 75 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், ஆளும் திமுக அரசுக்கு எதிரான அதிருப்தி அலை வீசினாலும், அக்கட்சியின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை தொடர்ந்து நீடிக்கிறது. அதே சமயம், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஒரு புதிய சக்தியாக உருவெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications