ஈபிஎஸ் கையில் இருந்து நழுவிய 25 எம்எல்ஏக்கள்! ஆளுநரை சந்திக்க போன எடப்பாடி டீம்! அதிமுக என்னாகும்
சென்னை: எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் பிளவு இப்போது வெளிப்படையாகத் தெரியத் தொடங்கியுள்ளது.. பெரும்பான்மை எம்எல்ஏக்கள் எஸ்பி வேலுமணி பக்கம் சாய்ந்துள்ள நிலையில், தனது தலைமையைத் தக்கவைக்க எடப்பாடி பழனிசாமி இப்போது அடுத்தகட்ட நகர்வை கையில் எடுத்துள்ளார்.. தவெக அரசுக்கு ஆதரவளிக்கும் எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது..
அதிமுகவில் கடந்த சில மாதங்களாகவே புகைந்து கொண்டிருந்த உட்கட்சி மோதல், இப்போது அடுத்த கட்டத்திற்குச் சென்றுள்ளது.. சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமிக்கும், எஸ்பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம் போன்ற மூத்த நிர்வாகிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்தன.

25 அதிமுக எம்எல்ஏக்கள்
இந்த அதிகாரப் போட்டியில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் 22 எம்எல்ஏக்கள் மட்டுமே இருப்பதாகச் சொல்லப்படுகிறது.. அதே நேரத்தில் வேலுமணி மற்றும் சிவி சண்முகம் தரப்பில் 25 எம்எல்ஏக்கள் திரண்டுள்ளது கட்சி வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது..
இந்தச் சிக்கலுக்குப் பின்னால் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தாக்கம் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.. சிவி சண்முகம் மற்றும் எஸ்பி வேலுமணி தலைமையிலான அணி, சட்டசபையில் தவெக அரசுக்கு ஆதரவளிக்க எடுத்த முடிவுதான் எடப்பாடி பழனிசாமியை அதிரடி காட்ட வைத்திருக்கிறது.
அதனால்தான், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக சொல்லி எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 26 மாவட்டச் செயலாளர்களின் பதவிகளை எடப்பாடி பழனிசாமி பறித்தார்.. இதற்குப் பதிலடியாக வேலுமணி தரப்பினர் சசிகலா மற்றும் டிடிவி தினகரனை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வரும் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார்கள்..
எடப்பாடி பழனிசாமியும் புகார் கடிதம்
இந்த உட்கட்சிப் போர் இப்போது சட்ட போராட்டமாகவே உருமாறியிருக்கிறது.. சபாநாயகர் ஜேசிடி பிரபாகரைச் சந்தித்து 2 தரப்பினரும் தனித்தனியாகக் கடிதங்களை தந்திருக்கிறார்கள்.. இதில் சபாநாயகர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக எடப்பாடி தரப்பில் புகார் சொல்லப்பட்டது.. இதன் தொடர்ச்சியாகத்தான் ஆளுநர் அர்லேகரை சந்திக்கும் முடிவை எடப்பாடி தரப்பும் எடுத்தது.. இந்தச் சந்திப்பின் போது, தங்களுக்கு எதிராகச் செயல்படும் எம்எல்ஏக்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது..
எடப்பாடி பழனிசாமி தரப்பு சார்பாக அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தளவாய் சுந்தரம் ஆகியோர் ஆளுநர் மாளிகையில் இன்று நேரில் சென்று மனு அளித்தனர்..
அதில், சி.வி.சண்முகம் மற்றும் எஸ்பி வேலுமணி தலைமையிலான 25 எம்எல்ஏக்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர்.. குறிப்பாக, சட்டசபை வாக்கெடுப்பின் போது கொறடா உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்ட எம்எல்ஏக்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்பது இவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது..
சபாநாயகர் எடுக்கும் முடிவு?
இந்த மனு மூலம் அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது அழுத்தம் கொடுக்க எடப்பாடி தரப்பு முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.. சபாநாயகர் தரப்பில் எடுக்கப்படும் முடிவுகள் திருப்தி அளிக்காத பட்சத்தில், இந்தச் சந்திப்பு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறும் என அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.. எனவே, ஆளுநர் இந்த மனுவின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்பதில் அடுத்தகட்டத்தில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது..
ஆனாலும் எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான இறுதி முடிவை சபாநாயகர் மட்டுமே எடுக்க முடியும் என்பதால், ஆளுநர் சந்திப்பு என்பது எடப்பாடி தரப்புக்கு எந்த அளவுக்குக் கை கொடுக்கும் என்பது கேள்விக்குறிதான்.. ஆளுநர் இதில் தலையிட்டால் மட்டுமே எடப்பாடி தரப்பிற்குச் சாதகமான சூழல் உருவாகும்.. பெரும்பான்மையான மாவட்டச் செயலாளர்கள் வேலுமணி பக்கம் இருக்கும் நிலையில், அதிமுகவில் நிலவும் இந்தச் சிக்கல் இன்னும் சில காலத்திற்கு நீடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications